வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பரவிவரும் காவிப் பயங்கரவாதம்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

புதுடில்லி,ஆக26:டில்லியில் மாநில போலீஸ் டி.ஜி.பி., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசும்போது நாட்டில் காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநாட்டில் துவக்க உரையாற்றிய சிதம்பரம்,இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாத ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீஸ் படை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய‌ மாவோயிஸ்டுகள் அதன் பிறகு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.


கஷ்மீரில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. கஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் உல்பா பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளனர்.

கடந்த 21 மாதங்களில் இந்தியாவில் பெரிய அளவில் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை என்பது இந்தியா பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வைத்திருப்பதற்கு ஒரு சான்று என்றார்.

ஆனால் தற்போது நாட்டில் புதிதாக காவி பயங்கரவாதம் பரவி வருகிறது. இது குறித்து மிகுந்த எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.

நேற்று முதல் 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் 2ம் நாளான இன்று பிரத‌மர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். தமிழகம் சார்பில் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: