வியாழன், 26 ஜூலை, 2012

ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியதில்லை - ஜவாஹிருல்லாஹ் MLA பேட்டி


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் அண்மையில் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்துக்கு  வந்திருந்தார். அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, ஏற்பாட்டாளர்கள் மூலம் வினவியபோது, மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

வாக்களிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மேலும் பல மணித்துளிகள் நேர்காணல் நீடித்த போதும் எவ்வித சங்கடத்தையும் வெளிக்காட்டாமல் மிகுந்த பொறுமையுடனும் இன்முகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஜவாஹிருல்லாஹ் விடையளித்த பாங்கு பாராட்டிற்குரிய ஒன்று.

தேர்தலுக்குப் பின் அரசியல் ரீதியான அவரின் நிலைப்பாடுகள், சமுதாயம் குறித்து அவர் எடுத்து செல்லும் நடவடிக்கைகள், சட்டசபை தொடர்பானவை, இயக்கம் தொடர்பானவை என்று தொலைநோக்கில் நாம் கேட்க  நினைத்தவையும் அவரின் விளக்கங்களும் பரவலாய் விரிகின்றது.

அவருடனான  நேர்காணல் -

கேள்வி: இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக எதைக் கருதுகிறீர்கள்? அதை எவ்வாறு தீர்க்கலாம்?

ஜவாஹிருல்லாஹ்: இந்திய அளவில் முஸ்லிம்களிடையே கல்வியறிவின்மை, வறுமை, அரசியல் விழிப்புணர்வின்மை, ஒருங்கிணைந்த அரசியல் தலைமை இல்லாதது ஆகிய பிரச்னைகளைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் முதலிய மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடுகின்றது.  அரசியல் விழிப்புணர்வை அவர்களிடத்தில் ஏற்படுத்தவேண்டியது கட்டாயமாகிறது. மக்களை விழிப்பறிவுணர்வை எட்டச்செய்வதன் வாயிலாகவே இவற்றைத் தீர்க்கலாம்


கேள்வி:  மனிதநேய மக்கள் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்லும் திட்டமுண்டா? மேலும், தேசிய தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ்: “இல்லை; அதற்கான சாத்தியங்களில்லை, வட இந்திய முஸ்லிம்களுக்கும், தென்னிந்திய முஸ்லிம்களுக்கும் அடிப்படை மனநிலையில் பெரிதும் மாற்றங்கள் இருக்கின்றன. அவர்கள் (வட இந்திய முஸ்லிம்கள்) ஒரு தென்னிந்திய தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. இருப்பினும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட தொடர்ந்து நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அங்கு பல்வேறு கூட்டங்களில் நான் பங்குக் கொண்டு பேசியுள்ளேன். சமீபத்தில் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பீஸ் கட்சி 2007ல் தமுமுக டெல்லியில் நடத்திய பேரணியினால் கவரப்பட்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். எனவே நாங்கள் அங்கு எங்கள்கட்சியை கட்டமைக்காவிட்டாலும் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறோம்.


கேள்வி: ஜெயலலிதா அரசை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?

ஜவாஹிருல்லாஹ்: எதிராகச் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை; வக்ஃப் வாரியத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் அளிப்பதற்கும், அதிகரிக்கப்பட்ட ஊதியத்தினால் ஏற்பட்ட ஊதிய வித்தியாசத் தொகையை அளிப்பதற்காகவும் சென்ற ஆண்டு ரூ3 கோடியை தமிழக அரசு வழங்கியது. இதே போல் இந்த ஆண்டு பள்ளிவாசல் பராமரிப்பு பணிகளுக்காக ரூ 3 கோடி அரசு வழங்கியுள்ளது. மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் மகளிர் குழுவிற்கு அரசின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உலமாக்களின் உதவி தொகையை ரூ750லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கின்றது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


கேள்வி: குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனைப் பெற்ற அப்பாவி முஸ்லிம் கைதிகள் பல்லாண்டுகளுக்குப் பின்னரும்  பிணை வழங்கப்படாமல் இருக்கிறார்களே?

ஜவாஹிருல்லாஹ்: முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஏழாண்டுகளுக்கு மேல் சிறைப்பட்டிருந்த கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிய முஸ்லிம் கைதிகளை அப்போது  விடுவிக்கவில்லை. அதே நிலை இப்போதும் தொடர்கிறது.எங்கள் நிலைப்பாட்டின் படி, பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த அனைத்து கைதிகளையும் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த சிறைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம்.

கேள்வி: ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக முதல்வருக்கு அளவுக்கதிகமாகத் துதிபாடுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே. மேலும் தானே புயல் நேரத்தில் நீங்கள் சட்டமன்றத்தில் பேசுகையில் “தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் துயர் நிவாரணம் பெற்றதன் பின்னால் மற்ற மாவட்ட மக்களும் ‘தானே புயல் தங்களைப் பாதித்திருக்கக் கூடாதா? என்று எண்ணத் தலைப்பட்டதாக”ச் சொல்லியிருந்தீர்கள், அதுபற்றி?

ஜவாஹிருல்லாஹ்: ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு மனநிலை உண்டு. சிலர் விமர்சித்தால் அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். இன்னும் சிலர் பாராட்டினால் மேலும் ஊக்கம் பெற்று நல்லபல திட்டங்களைச் செயற்படுத்துவார்கள். அவ்வகையில் நமது தற்போதைய முதல்வரைப் பாராட்டினால் மென்மேலும் ஊக்கம் பெற்று நல்ல பல திட்டப்பணிகளைத் தொடர்வார்.  இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் முதலில் பாராட்டிவிட்டு அதன்பின்பு வேண்டிய கோரிக்கைகளை வைக்கிறோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தொலைநோக்குத் திட்டம் 2023 என்று திட்டம் வகுத்திருப்பது இதே போல் தமிழக இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஆனால் தமிழகத்தில் இளம் குடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரசுக்கு வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. இது எதிர்காலத்தில் வலிமையான தமிழகம் என்ற கருத்தோட்டத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிடும் என்று குறிப்பிட்டோம்..

மற்றபடி, தானே புயல் தொடர்பாக, நான் அப்படி பேசியது தவறுதான் என்று ஏற்றுக்கொள்கிறேன். நானும் மனிதன் தானே, அவ்வகையில் தவறிழைத்துவிட்டேன். இனி அவ்வாறு பேசமாட்டேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.நானும் எங்கள் கட்சி ஆம்பூர் உறுப்பினர் அஸ்லம் பாஷாவும் இதுவரை, ஒரு பைசா கூட இலஞ்சம் வாங்கியதில்லை;  இன்ஷா அல்லாஹ் இனிமேலும் வாங்க மாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். இங்கே நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒரு எம்.எல்.ஏ வாக நீங்கள் இலஞ்சம் கேட்கக் கூட வேண்டாம், எல்லா நலத்திட்டங்களிலும் எம்.எல்.ஏ பங்கு என்று அவர்களாகவே ஒரு தொகையை ஒதுக்கிவிடுகிறார்கள். நாங்கள் அதைக் கூட பெறுவதில்லை என்பதை இங்கே உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி: பர்மிய முஸ்லிம்கள் மீது பெரும் வன்முறையும், இன அழிப்புப் படுகொலைகளும் நிகழ்த்தப்படுகின்ற வேளையில், நமது எந்த அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லையே? தமுமுக எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.?

ஜவாஹிருல்லாஹ்: இன்ஷா அல்லாஹ், விரைவில் இது பற்றி ஆலோசித்து, எங்களால் இயன்றதைச் செய்வோம்

கேள்வி: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின்னர், மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளாரே?

ஜவாஹிருல்லாஹ்: கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். வன்முறை மிகவும் தவறு. மெளலவி ஷம்சுத்தீன் காஸிமி மீதான தாக்குதலை தமுமுக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது..நான் வளைகுடா சுற்றுப் பயணத்தில் இருப்பதால் ஊர் திரும்பி இது குறித்தான அடுத்த கட்ட நடவடிக்கையை அமைப்புடன் கலந்து பேசி முடிவெடுப்போம். மேலும் இது குறித்து கலகம் செய்தவர்கள் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்வோம்.


கேள்வி: மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கூறுங்களேன்?

ஜவாஹிருல்லாஹ் - 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மே21 2007ல் சமர்பித்தது. 2009 டிசம்பரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இது வரை இந்த ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்க வழங்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்பது இந்த ஆணையத்தின் முதன்மையான பரிந்துரை. இது இயலாவிட்டால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 7 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைச் செய்துள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையை புறக்கணித்து உ.பி. தேர்தல் வரும் வேளையில் ஒத்துமொத்தமாக 4.5 விழுக்காடு முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் வகையில் முஸ்லிம்களை ஏமாற்றும்  வகையில் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஏமாற்று வித்தைக்கு உ.பி. முஸ்லிம்கள் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை படித்துக் கொடுத்தார்கள்.

கேள்வி: ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு  நீங்கள் பாடம் கற்ற இடம். இப்போது அந்த அமைப்பு தேசிய அளவிலான அரசியல் கட்சியொன்றை அமைத்துள்ளது. அவர்களுடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?


ஜவாஹிருல்லாஹ்: சென்ற   உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட சில ஊர்களில் அவர்களுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். நாங்கள் போட்டியிட்ட இடங்களில் அவர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது.. அமைப்பு என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பரஸ்பரம் தேர்தல் வெற்றிக்கு இரு தரப்புமே உதவிக் கொண்டோம்.

கேள்வி: முஸ்லிம் சமுதாயத்துக்கு உங்களால் நிறைய பலன் கிடைக்க கூடும் என்று தான் உங்களை சட்டசபைக்கு அனுப்பினோம். ஆனால் இதுவரை ஒன்றும் நீங்கள் அது குறித்து பேசியதாக ஒன்றும் தெரியவில்லையே..?

ஜவாஹிருல்லாஹ் -(சிரிக்கிறார்) என் தொகுதியில் ஓட்டு போட்ட மற்ற சமுதாயத்தினரும் இது போலதான் கேட்கிறார்கள்

நீங்கள் உங்கள் சமுதாய மக்களுக்கு மட்டுமே சட்டசபையில் பேசுவதாக தெரிகிறது. அன்றைக்கு கூட உங்கள் சட்டசபை பேச்சை கேட்டேன். 60 70 சதவீதம் உங்கள் மக்களுக்காக மட்டும்தான் பேசினீர்கள் என்று ஒருவர் என்னை கேட்டார். அவர்கள் அப்படிக் கேட்கிறார்கள். நீங்கள் இப்படிக் கேட்கிறீர்கள். நான் என்னளவுக்கு இரு சாரருக்கு பொதுமானதாகவே பேசுகிறேன். தொலைக்காட்சிகளில் சட்டசபை நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாக ஒளிபரப்பபடுவதால் நாங்கள் பேசுவது முழுமையாக மக்களுக்குச் சென்றடைவதில்லை.

கேள்வி: தமிழக முஸ்லீம்களுக்கு என்று தனித்த ஒரு செய்தித் தாள் இல்லை. தொலைக்காட்சி சேனலும் இல்லை.. இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

ஜவாஹிருல்லாஹ் - அவசியமான ஒன்றுதான். கேரளாவில் கூட மாத்யம் போன்ற பிரபல செய்தி தாள்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பெரும் முதலீட்டில் செய்ய வேண்டியவை. அந்தளவு இப்போது நம்மிடம் நிதி நிலைமை இல்லை. சமுதாயம் குறித்தான அக்கறையுள்ள பெரும் முதலீட்டாளர்கள் முன் வரும்போது இதெல்லாம் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


கேள்வி: கேரளாவில் இஸ்லாமிய வங்கி போன்று அல்பரகா நிதியகம் இருக்கிறது. தமிழகத்தில் கொண்டு வரும் முயற்சிகளை எடுப்பீர்களா?


ஜவாஹிருல்லாஹ்- இல்லை கேரளாவில் நீங்கள் குறிப்பிடுகிற அல்பரகா நிதி நிறுவனம் வங்கி என்பதாக ரிசர்வ் வங்கியில் பதிவிடப்படவில்லை. மாறாக அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் அதாவது Non Banking Financial Corporation   என்றே ரிசர்வ் வங்கியில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வங்கிப் போன்று எல்லா செயற்பாடுகளையும் அவர்கள் மேற்கொள்ளலாம் என்றாலும் காசோலையோ, வரைவோலையோ வழங்க விதிமுறை அனுமதிக்காது. மேலும், இந்த அல்பரகா வளைகுடா வாழ் கேரள அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம். அப்படி தமிழகம் சார்ந்த வளைகுடா அமைப்புகள் அத்தனை வலிமையாக இதனை முன்னெடுக்குமா என்பதைப் பொறுத்தே இதற்கு விடையளிக்கமுடியும்.

கேரளாவிலேயே முந்தைய ஆட்சியின் முதல்வர் இது குறித்து எல்லா நடவடிக்கைகளும் எடுத்து செயல்படுத்த துவங்குமுன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

கேள்வி:  சக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றல் குறித்து……….


ஜவாஹிருல்லாஹ்- சமுதாயத்திற்கு பொதுவான விஷயங்களில் பிற அமைப்புகளுடன் கடந்த காலங்களில் இணைந்தே செயல்பட்டுள்ளோம். எடுத்துக்காட்டாக சென்ற திமுக ஆட்சியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக அனைத்து அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளோம். சமீபத்தில் 15 வயது பெண் திருமணம் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எடுத்து நடவடிக்கையை கண்டித்து அனைத்து அமைப்பினருடன் இணைந்து போராட்டத்தில் பங்குக் கொண்டோம்.

ஒவ்வொரு அமைச்சரும் மானியக் கோரிக்கை விவாதத்திற்க்குப் பதிலளித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு யாரும் பேசக்கூடாது. சந்தேகங்கள் விளக்கங்கள் இருப்பினும் அவர் பேசி முடித்தபிறகுதான் பேசவேண்டும் என்பது அவை மரபு. அப்படி பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது அதன் அமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது இந்துக்கள் இராமனை வணங்குவது போல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவது போல் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவது போல் .. என்று தொடரும்போதே நமது ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  அஸ்லம் பாஷா எழுந்து “மன்னிக்கவும் முஸ்லீம்கள் முகமது நபியை வணங்குவதில்லை.அல்லாஹ்வைத் தான் வணங்குவோம் என்று குறுக்கிட்டுக் குறிப்பிட்டார். (அப்போது நான் (ஜவாஹிருல்லாஹ்) மும்பையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் பொதுக்குழுவில் இருந்தேன்) உடனே முதல்வர் ஜெயலலிதா எழுந்து முஸ்லீம்கள் அல்லாஹ்வைத்தான் வணங்குகிறார்கள். முகமது நபியை இல்லை. அமைச்சரின் அந்த பேச்சு சபைக்குறிப்பில் திருத்தப்பட்டுப் பதியப்படும்” என்று கூறியதாக ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டார்.

http://www.inneram.com/articles/readers-articles/jawahirullah-interview-5344.html

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தமுமுகவின் ரமழான் இரவு 10-11 தொடர் சொற்பொழிவுகள் நேரலை

ரமலான் இரவு தொடர் சொற்பொழிவுகள் - நேரடி ஒளிபரப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இஸ்லாமிய பிரசாரப்பேரவை (IPP) நடத்தும் ரமலான் இரவு சொற்பொழிவு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை கீழ்க்கண்ட இணையதள முகவரியில் நேரடியாக ஒளிபரப்பாகும். www.mediavoicelive.com/live



புதன், 18 ஜூலை, 2012

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டம்...

  3
பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.
ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M பாக்கர், த.மு.மு.க மூத்த தலைவர் ஹைதர் அலி, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி,
இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ், தேசிய லீக் பசீர் அஹ்மத், சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர், மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக், வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிக்கந்தர், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை  ஆற்றினர். இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும், பள்ளிவாசல் ஜமாத்தார்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

திங்கள், 16 ஜூலை, 2012

சேலம் - அரசு மது பான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இருந்த 7273 , 7104 எண்கள் கொண்ட அரசு மது பான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக் தலைமை தாங்கினார். இந்த அறப்போராட்டத்தில் மமக வின் அழைப்பை ஏற்று தொண்டர்களும், சமுதாய அக்கறை கொண்டவர்களும், மாற்று மத சகோதர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட 500 கும் மேற்பட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 8மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.













புதன், 11 ஜூலை, 2012

14 முஸ்லிம்களை எரித்துக் கொன்ற கயவர்களில் 4 பேருக்கு மட்டும் ஆயுள்தண்டனையாம்; இதுதான் இந்தியாவின் நீதி...????

 
மும்பை, ஜூலை. 10-

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு கலவரம் ஏற்பட்டது. அப்போது வதோதரா நகரில் உள்ள பெஸ்ட் பேக்கரியை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இதில் பேக்கரிக்குள் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் தீயில் கருகி இறந்து போனார்கள்.

இதுபற்றி ஷாகிரா ஷேக் என்பவர் வதோதரா போலீசில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரில் பேக்கரிக்கு தீவைத்ததாக 21 பேர் பெயரை குறிப்பிட்டுடிருந்தார். இவ்வழக்கை வதோதரா விரைவு கோர்ட் விசாரித்தது. கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி இக்கோர்ட் குற்றவாளிகள் 21 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. ஆனால் குஜராத் ஐகோர்ட் அந்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாகிராஷேக் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சார்பில் பெஸ்ட் பேக்கரி வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதைய டுத்து சுப்பரீம் கோர்ட் பெஸ்ட் பேக்கரி வழக்கை மும்பை சிறப்பு கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி மும்பை சிறப்பு கோர்ட்டில் மீண்டும் பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2004-ம் ஆண்டு இவ்வழக்கில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்படாததால் அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

விசாரணை முடிந்ததும் கடந்த 2006-ம் ஆண்டு மும்பை கோர்ட்டு சஞ்சய் தக்கார், பகதூர்சிங் உள்பட 9 பேருக்கு ஆயுதள் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து 9 பேரும் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

அப்போது மும்பை சிறப்பு கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தக்கார், பகதூர்சிங் சவுகான், சனாபாய் பரியா, தினேஷ் ராஜ்பர் ஆகிய 4 பேரின் தண்டனையை உறுதி செய்தது.

ஆனால் சிறப்பு கோர்ட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜுபாய் பரியா, பங்கஜ் கோசவி, ஜக்தீஷ் ராஜ்புட், சுரேஷ், ஷைலேஷ் தட்வி ஆகியோரை விடுதலை செய்தது. இவர் கள் 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடு விக்கப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

செய்தி;மாலைமலர
http://mugavai-abbas.blogspot.com

திங்கள், 9 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு வாடைக்குக் கூட வீடுகள் இல்லை – தலைநகர் டெல்லியில் அவலம்!


டெல்லி, july 9: இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 ஜூலை, 2012

ருவாண்டா குடியரசில் 482 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் ருவாண்டா குடியரசில் 482 பேர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர். சர்வதேச இஸ்லாமிய இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த (WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH (WAMY) மருத்துவக் குழுவொன்று அண்மையில் ருவாண்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. மருத்துவ முகாம்களை நடத்திய இக்குழு பல்வேறு உதவிகளை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியது. தலைநகர் கைகாலியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள கீபோஸ்கோ மாவட்டத்தில் மருத்துவக்குழு மேற்கொண்ட மனித நேய தொண்டு அவ்வட்டார மக்களை மிகவும் ஈர்த்தது.

‘அர்ரிஸ்வான்’ என்ற அக்குழுவினர், இஸ்லாத்தைப் பற்றியும் விளக்கம் அளித்தனர். ‘கினியா ருவாண்டா’ மொழியில் அச்சடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரசுரங்களை விநியோகித்தனர். இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த தவறான கருத்துகளைக் களைந்து, இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை விவரித்தனர். இதையடுத்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளிப்படையாகவே இஸ்லாத்தில் இணைந்தவண்ணம் உள்ளனர். (அல்முஜ்தமா)

ஜசகல்லாஹ் கைர்  : கான் பாகவி