சனி, 26 ஜனவரி, 2013

'விஸ்வரூபம்’ திரைக்குப் பின்னால் நடந்த கதை,

கமல் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை!

'துப்பாக்கி’ படம் ரிலீஸ் ஆனபோதே முஸ்லிம்கள் போர்க் கொடி தூக்கினர். அப்போது, 'விஸ்வரூபம்’ படத்திலும் முஸ்லிம்களைத் தவறாக சித்திரித்து இருக்கிறார்கள் என்ற பேச்சும் கூடவே கிளம்பியது. 'முன்கூட்டியே எங்களுக்குத் திரையிட்டுக் காட்டிய பிறகுதான் படத்தை கமல் வெளியிட வேண்டும்’ என குரல் கொடுக்க ஆரம்பித்தன முஸ்லிம் அமைப்புகள். '' 'விஸ்வரூபம்’ முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல. அப்படிச் சந்தேகப்படும் இஸ்லாமியர்கள் படம் பார்த்துவிட்டு, தேவை இல்லாமல் கமலை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதுக்குள் வருந்துவர். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்குப் பிராயச்சித்தமாக அண்டா அண்டாவாக முஸ்லிம்கள் பிரியாணி விருந்து போட வேண்டும். அந்த விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்'' என அறிக்கை விட்டார் கமல்.

ஜனவரி 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியான நேரத்தில், 24 முஸ் லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில் கமலை சந்தித்தனர். வெளிநாடுகளில் விநியோகஸ்தராக இருக்கும் முஸ்லிம் ஒருவர்தான் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அப்போது சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடந்தது. ''முஸ்லிம்களோடு நல்ல நட்புஉணர்வு கொண்டவன் நான். அவர்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுக்க மாட்டேன்'' என்றார் கமல். ''துப்பாக்கி படக் குழுவினரிடம் எங்களைப்பற்றி கேட்டுப் பாருங்கள். எங்களின் செயல்பாடு பற்றி நீங்கள் வைத்திருக்கும் பிம்பம் உடையும்'' என்று, கமலிடம் சொன்னது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியாகப் பேசிய கமல், '' 'விஸ்வரூபம்’ இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல. இந்து முன்னணியினருக்கு எதிரான படம். ராமகோபாலன் படத்தைப் பார்த்து விட்டு எதிர்ப்பார்'' எனச் சொன்னார். பேச்சு வார்த்தையின் இறுதியில், திரைக்கு வருவதற்கு முன் படத்தை போட்டுக்காட்ட ஒப்புக்கொண்டார் கமல்.




அதன்பிறகு, 'விஸ்வரூபம்’ படம் பற்றி தலைமைச் செயலாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றையும் கொடுத்தது முஸ்லிம் கூட்டமைப்பு. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் முஸ்லிம் கூட்டமைப் பினரை உள்துறைச் செயலாளர் ராஜகோபால் 15 நாட்களுக்கு முன் அழைத்துப் பேசினார். ''படத்தில் இஸ்லாமியர்களைக் கொச்சைபடுத்திக் காட்சிகள் இருந்தால், அதை நீக்க வேண்டும்'' என ராஜகோபாலிடம் கூறினர் முஸ்லிம் பிரதிநிதிகள். ''மதநல்லிணக்கம் எந்த வகையிலும் கெட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தி, அவர்களைக் காயப்படுத்துவதை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது'' என்று சொன்ன ராஜகோபால், ''ரிலீஸுக்கு முன்பே படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளை அரசே செய்து தரும்'' என்று உறுதி அளித்தார். ''கமலே படத்தைக் காட்டுவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் தேவைஇல்லை'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினர்.

படம் பார்த்த முஸ்லிம்கள்!

படத்தை இரண்டு நாட்களுக்கு முன், போட்டுக்காட்டுவதாகச் சொன்னார் கமல். ஆனால், 'ஐந்து நாட்களுக்கு முன்பே காட்ட வேண்டும்’ என்றது முஸ்லிம் கூட்டமைப்பு. இறுதியில், நான்கு நாட்களுக்கு முன் என முடிவானது. தேதி குறிக்கப்பட்ட தினத்தில் படத்தைப் பார்க்க முடியவில்லை. 'டி.டி.ஹெச் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது’ என, முஸ்லிம்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் கமல். அப்போதும்கூட, ''இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் வகையில் படத்தை எடுக்கவில்லை. படத்தின் ஹீரோவே முஸ்லிம்தான். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்'' என்று பீடிகை போட்டு இருக்கிறார் கமல்.

படம் ரிலீஸ் தேதி ஜனவரி 25 என அறிவிக்கப்பட, 21-ம் தேதி படத்தை முஸ்லிம்களுக்குக் காட்ட முடிவு செய்யப்பட்டது. ''தொழுகை பாதிக்கும் என்பதால், காலையில் படத்தைக் காட்ட வேண்டும்'' என்றனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'மாலையில்தான் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. தொழுகைக்கு என் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்து தருகிறேன்'' என்று சொன்னார் கமல். மாலையில், ராஜ்கமல் அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடினர். அங்கேயே மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு, படத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். அலுவலகத்தில் இருந்த ஹோம் தியேட்டரில் 'விஸ்வரூபம்’ திரையிட்டபோது கமலும் அவர்களுடன் அமர்ந்து படத்தை முழுமையாகப் பார்த்தார்.

படத்தின் முதல்பாதி முடிந்து இடைவேளை விட்டபோது, படம் பார்த்த முஸ்லிம்கள் கொஞ்சம் அப்செட் ஆனார்கள். 'படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் என்னிடம் 300-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன’ என்று, இடைவேளையின்போது சொன்னார் கமல். தாலிபான்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் தொப்பி, ஆர்ட் டைரக்டர், காஸ்ட்யூம் டிசைனர், படத்தில் ஹெலிகாப்டர்களுக்கு அடிக்கப்பட்ட பெயின்ட் பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இரண்டாம் பாதிப் படத்தைப் பார்த்த முஸ்லிம் கூட்டமைப்பினர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்றனர். படம் முடிந்ததும் சொல்லிவைத்ததுபோல கமலிடம் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது, அவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வாசலில் நின்று இருந்த கமலுக்கு, அவர்கள் எதுவும் பேசாமல் போனதால் முகம் மாறியது. கடைசியாக வந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் முனீரிடம், 'படம் பிடித்திருக்கிறதா? எதுவும் கருத்து சொல்லாமல் போகிறீர்களே?’ என்று கமல் கேட்க, 'எதுவும் சொல்வதற்கு இல்லை.’ என்று முனீர் சொன்னார். 'ஏற்கெனவே நிறைய சங்கடங்களைச் சந்தித்து இருக்கிறேன். இன்னும் சங்கடங்களை உண்டாக்கி விடாதீர்கள்’ என்று கமல் சொல்ல, 'அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் முனீர். அப்செட்டான நிலையில், 'விஸ்வரூபம்’ பிரிமியர் ஷோவுக்காக அன்றைய இரவே அமெரிக்கா கிளம் பினார் கமல்.


கமிஷனர் அலுவலகத்தில் கொந்தளிப்பு!


இரவு 10 மணிக்கு படம் முடிந்து கிளம்பிய டீம், அப்போதே ஒரு ஓட்டலில் நள்ளிரவு வரை ஆலோசித்தது. 'முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இருந்தால், அதை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட சம்மதிக்கலாம்’ என முன்பு முடிவு செய்து இருந்த முஸ்லிம் கூட்டமைப்பினர், 'மொத்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்தனர். அடுத்த நாள் 22-ம் தேதி, 'படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்தனர். அவர்களோடு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவும் வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்த சந்திப்பில், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஜார்ஜிடம் விவரித்தனர். 'தொழுகை நடத்தி விட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் படத்தில் அப்பட்டமாக நிறைய இடங்களில் காட்டுகிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான குர்-ஆன், தீவிரவாதிகளின் கையேடாகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறது’ என் றனர். 'பைபிள் படித்துவிட்டு சர்ச் சுக்குள் இருந்து வரும் ஒருவர் குண்டு வைப்பதாக காட்சி இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?’ என்று கிறிஸ்தவரான ஜார்ஜிடம் ஒருவர் கேள்வி எழுப்பினார். சந்திப்புக்குப் பிறகு, வெளியே வந்த முஸ்லிம் கூட்ட மைப்பினர் படத்தைப்பற்றி முதல் முறையாக மீடியாவிடம் பேசினர். ' 'விஸ்வரூபம்’ வெளியிடப்பட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் ஏற்படும். மாமன் மச்சானாக வாழ்ந்து வருபவர்களிடையே தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கி, சட்டம்- ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படலாம். இந்தப் படத்தை அரசு தடை செய்ய வேண்டும். இல்லையெனில் உயிரைக் கொடுத்தாவது முஸ்லிம்கள் தடை செய் வார்கள்’ எனக் கொந்தளித்தனர்.

படத்துக்கு 15 நாட்கள் தடை!

இந்த விஷயங்களை எல்லாம் அமெரிக்காவில் இருந்தே விசாரித்துக் கொண்டு இருந்தார் கமல். அதற்கு அடுத்த நாள் 23-ம் தேதி உள்துறைச் செய லாளர் ராஜகோபாலை கோட்டையில் சந்தித்தனர் முஸ்லிம் கூட்டமைப்பினர். 'உங்கள் பக்கம்தான் அரசு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாறுதலும் இல்லை’ என்ற ராஜகோபால், 'பட ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் வந்து இப்படி முறையிடுகிறீர்களே...’ என்றும் கேட்டு இருக்கிறார். 'கமல் சினி மாவில் நல்ல நடிகர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிகர் என்பது இப்போதுதான் புரிந்தது. ரிலீஸ் தேதிக்கு நெருக்கத்தில் படத்தைக் காட்டி அவர்தான் எங்களை இக்கட்டில் தள்ளிவிட்டார்’ என்று பதில் சொன்னார்கள். 'வழிபாட்டு முறைகள் தீவிரவாதத்தைத் தூண்டுவதுபோல இருக்கிறது’ என்று காட்சிகளையும் ராஜகோபாலிடம் விவரித்தனர். 'கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், நிச்சயம் அரசு பரிசீலிக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ராஜகோபால்.

காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு, கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். 'விஸ்வரூபம்’ பட விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறைச் செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமா னுஜம், உளவுப்பிரிவு ஐ.ஜி. அம்ரிஷ் பூஜாரி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எனப் பெரிய டீமோடு ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஜெயலலிதா. அதன்பிறகு, படத்துக்குத் தடை என்ற பேச்சுகள் கிளம்ப ஆரம்பித்தன. 'விஸ்வரூபம்’ படத்துக்கு 15 நாட்கள் தடை என்பது இரவில் உறுதியானது.

''படத்தை தடை செய்யாவிட்டால் படம் ரிலீஸ் ஆகும் வெள்ளிக் கிழமை அன்று கமல் வீட்டை முற்றுகையிடுவோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் தடை செய்வோம். சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகை என அடுத்து போராட்டக் களம் சூடு பிடிக்கும்'' என முஸ்லிம் அமைப்புகள் அறிவித்ததால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கும் என்பதால் தடை விதிக்கப் பட்டது என்கிறார்கள். 'இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்’ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அமெரிக்கத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது. அடுத்தடுத்து முஸ்லிம்கள் நடத் தியப் போராட்டத்தால் தூதரகத்துக்கு விடுமுறை விடும் சூழல் உருவானது. மொத்த முஸ்லிம் அமைப்புகளும் அண்ணா சாலையில் நடத்திய போராட்டம் தலைநகரை கிடுகிடுக்கவைத்தது. இதை யெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.




முஸ்லிம்களின் மனநிலை என்ன?

''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை. குர்-ஆன், தீவிரவாதத்தை போதிக்கும் நூலாகவும் தொழுகை வழிபாடுகள் தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோவை, மதுரை போன்ற நகரங்கள் எல்லாம் சர்வதேசத் தீவிரவாதிகளின் புகலிடங்கள்போல் காட்டப்பட்டுள்ளன. தமி ழகத்தில் மாமா, மச்சான் உறவுமுறை பேசி சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழலை சிதைக்க வல்லது 'விஸ்வரூபம்’ திரைப்படம். 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்’ என்று சொன்ன பெரியாரின் கருத்தை கமல் மூலம் உண்மை என அறிய முடிகிறது'' என்கின்றனர் முஸ்லிம் கூட்ட மைப்பினர்.

'விஸ்வரூபம்’ என்ன விஸ்வரூபம் எடுக்கப் போகிறது என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!


thanks to ஜூனியர் விகடன் 31-1-2013

விஸ்வரூபம் - முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய மற்றொரு தருணம்

இந்த பிரச்னையை ஆழ்ந்து கவனித்ததில் ஒரு விஷயத்தை உணர முடிகின்றது. தங்களை உண்மையான இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரில் இருந்து யாரும் முஸ்லிம்களின் போராட்டத்தை விரும்பவில்லை (வினவு என்னும் பித்தலாட்டகாரர்களின் கட்டுரை தெளிவாகவே இதனை உணர்த்துகின்றது. முஸ்லிம்களுக்காக போராட இவர்களிடம் முஸ்லிம்கள் வருவார்களாம். ஸ்ப்பா). வேறொரு வகையில் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் தங்களுக்காக தாங்களே போராடி, முடிவுகளை எட்டுவது பலருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கின்றது. 

முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்த சிந்திப்பு ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்து, விவேகமாக நடவடிக்கைகளுக்கு வித்திட்டால் ஒரு மாபெரும் எழுச்சியை முஸ்லிம் சமுதாயம் மிக அருகிலேயே எதிர்நோக்கி இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் நடக்கும் என்பதே எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கின்றது.

புதன், 23 ஜனவரி, 2013

விஸ்வரூபம் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் : முஸ்லிம்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

திங்கள், 21 ஜனவரி, 2013

ஆர்.எஸ்.எஸ்., பாஜக முகாம்களில் தீவிரவாத பயிற்சி...

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புது குண்டை வீசியுள்ளார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. காவி தீவிரவாத பயிற்சி இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங்களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் பயிற்சி இந்துத்துவா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன. சமாஜ்வுதா எக்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்பது ஷிண்டேயின் கருத்து.

உள்துறை அமைச்சர் சுஷில்குமார் தெரிவித்த கருத்தை லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வியாழன், 10 ஜனவரி, 2013

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னையில் ஜனவரி 11 முதல் 20 வரை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு என்ற பெயரில் இஸ்லாமியக் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சென்னை பீஸ் கண்காட்சிக் குழு ஏற்பாடுகளை செய்திருந்தது. முதலில் பின்னி நிறுவனத்திற்குச் சொந்தமான திடலில் முறையாக உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் சென்னைப் பெருநகர காவல்துறை அளித்த நெருக்கடி காரணமாக கண்காட்சி மற்றும் மாநாடு நடத்தும் திடலை அளிக்க இயலாது என்று அதன் உரிமையாளர் அறிவித்துவிட்டார் என்று தெரிய வருகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூன் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான உத்தண்டியில் உள்ள மைதானத்தில் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் சென்னைப் பெருநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சென்னையில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு இதுவரை 4 முறை பொங்கல் விடுமுறை காலத்தில் நடைபெற்று வந்துள்ளது. 2004 மற்றும் 2005ல் கோயம்பேட்டிலும், 2007ல் சென்னை அண்ணா சாலை மதரஸயே ஆஸம் பள்ளி மைதானத்திலும் 2010ல் நீலங்கரையிலும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பங்குகொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் அறிஞர்கள் மட்டுமின்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் இதில் பங்குகொண்டு உரையாற்றியுள்ளார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு திகழ்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கிற்கு எவ்விதப் பாதகமும் இந்த நிகழ்வுகளில் ஏற்பட்டதில்லை. இருப்பினும் இம்முறை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு சென்னைப் பெருநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன் அதன் ஏற்பாட்டாளர்களை அலைக்கழிக்க வைத்துள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சென்னைப் பெருநகர காவல்துறையின நடவடிக்கை அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான தனது போக்கை திருத்திக்கொண்டு உத்தண்டியில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு சென்னைப் பெருநகர காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சென்னைப் பெருநகர காவல்துறைக்கு உரிய அறிவுரை அளித்து சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா

திங்கள், 7 ஜனவரி, 2013

காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி


ஹைதராபாத்: மதக் கலவரத்துக்கு இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார். இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

source : http://tamil.oneindia.in/news/2013/01/07/india-ban-rss-vhp-asaduddin-owaisi-167506.html

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

3/1/2012 அன்று இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விஸ்வரூபம் திரைப்படம் குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டது. இவரின் முந்தைய திரைப்படங்களான உன்னைப்போல் ஒருவன், ஹேராம் உள்ளிட்ட திரைப்படங்களின் முஸ்லிம்களை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்து, அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளும் அதுபோன்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது... எனவே விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய கூட்டமைப்பினருக்கு திரையிட்டு காட்டிய பிறகு வெளியிட வேண்டும் என்றும், கூட்டமைப்பினருக்கு காட்டாமல் திரைப்படம் வெளிவந்து அது முஸ்லிம்களின் மத உணர்வை காயப்படுத்தினால் அதனால் ஏற்படும் போராட்டங்களுக்கும், அனைத்து பின் விளைவுகளும் கமலஹாசனே பொறுப்பேற்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்பதிரிக்கையாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் மவ்லவி அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, Welfare Party of India தலைவர் எஸ்.என். சிக்கந்தர், PFI தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் SM பாக்கர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹனிபா உள்ளிட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



வியாழன், 3 ஜனவரி, 2013

கூத்தாநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் K.நாச்சியா அவர்கள் நகராட்சிக்கு அளித்த கோரிக்கைகள்

28-12-2012 அன்று நடைபெற்ற கூத்தாநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் K.நாச்சியா அவர்கள் நகராட்சிக்கு அளித்த கோரிக்கைகள் :

1.கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை  குறைவாக  உள்ளது அவற்றை முழுமையாக         நிரப்பு வேண்டும்.

2.10வது வார்டில் தெரு விளக்குகள் (சோடியம் பல்புகள்) சரி வர இயங்குவதில்லை அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும்.

3.10வது வார்டில் சாக்கடை கழிவுகள் முறையாக அகற்றபடுவதில்லை அவற்றை முழுமையாக சரி செய்ய வேண்டும்.

4. தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க கூத்தாநல்லூர் நகராட்சியில்  பெண் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை கூத்தநல்லூர் நகர்மன்றம் உடனே நிறைவேற்ற வேண்டும்