வியாழன், 30 செப்டம்பர், 2010

தீர்ப்புக்காக காத்திருக்கும் ஹாஷிம் அன்ஸாரி

லக்னோ,செப்.30:பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கையில் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியாவில் பஞ்சிதோலா என்ற ஊரில் ஒரு சிறிய வீட்டில் ஆசுவாசத்தோடு 90 வயது முதியவர் ஒருவர் காத்திருக்கிறார். அவர்தான் வழக்குதாரரான முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி.

வழக்கு துவங்கும் பொழுது அன்ஸாரியின் வயது 30 ஐ தொடும். ஆரம்பக் காலங்களில் சக வழக்குதாரர்கள் 5 பேர் அன்ஸாரியுடன் இருந்தார்கள். அவர்களெல்லாம் கால ஓட்டத்தில் இவ்வுலகிற்கு விடை சொல்லிவிட்டார்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்து போராடிய ஒரு வழக்கின் தீர்ப்பை காணும் பாக்கியத்தை இறைவன் அளித்தது அன்ஸாரிக்கு மட்டுமே.

தீர்ப்பு வழங்குவதற்கான இடைக்காலத் தடையை நீக்கிய உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆசுவாசமாக உள்ளதாக அன்ஸாரி கூறுகிறார்.

"இந்த தீர்மானத்தில் தேசம் முழுவதும் மகிழ்ச்சியுண்டாகும். வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும் இவ்வழக்கில் தீர்ப்பு வெளிவருவது ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரேபோலவே ஆசுவாசமளிக்கும்" என்று அன்ஸாரி கூறுகிறார்.

பாப்ரி மஸ்ஜிதில் விக்கிரகங்களை திருட்டுத்தனமாக வைத்த பிறகு அங்கு பூஜைச் செய்வதற்கு அனுமதிக்கோரி 1950 ஜனவரி 16-ஆம் தேதி ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் கோபால்சிங் விசாரத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் எதிர் கட்சிதாரராக அன்ஸாரி களமிறங்கினார். வழக்கை பின்னர் சன்னி செண்ட்ரல் வக்ஃப் போர்டு ஏற்றது.

பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக இவ்வழக்கை பயன்படுத்திய பொழுது இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கிய ஒரு வழக்காக பாப்ரி மஸ்ஜித் வழக்கு மாறியது.

இதற்கிடையே பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிஸ்டுகளால் தகர்க்கப்பட்டது. அறுபது வருடகால தனது போராட்டத்திற்கு வருகிற 30-ஆம் தேதி முடிவு ஏற்படும் என அன்ஸாரி ஆசுவாசமாக உள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும், இரு சமூகங்களிடையே நிலவி வரும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாக்க தலைவர்கள் முன்வரவேண்டும் என அன்ஸாரி வேண்டுகோள் விடுக்கிறார்.

இனியொரு அரசியல் ஆதாயத்திற்கு பாப்ரி மஸ்ஜித் காரணமாகிவிடக் கூடாது. விருப்பமிருந்தாலும், நீதிமன்றத் தீர்ப்பை கேட்பதற்காக தான் லக்னோ நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் என அன்ஸாரி தெரிவிக்கிறார்.

"முதுமை என்னை வீட்டில் உட்கார வைத்துவிட்டது. தீர்ப்பு என்னவாயினும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.தீர்ப்பு சாதகமாகயிருந்தாலும், பாதகமாகயிருந்தாலும் அதனை பூட்டிய கதவுக்கு வெளியே முஸ்லிம்கள் ஒதுக்கிட வேண்டும். சாலையில் இறங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடுவதோ, கண்டனப் போராட்டம் நடத்துவதோ தேவையில்லை.

தீர்ப்பு சாதகமாக வரவில்லையென்றாலும் சட்டத்தின் வாயில்கள் திறந்தே உள்ளன. தீர்ப்பு எவ்வாறிருப்பினும் பாப்ரி மஸ்ஜித் புனர்நிர்மாணத்தை விரைவாக நிறைவேற்றும் வாய்ப்பு இல்லை.தீர்ப்பு எவ்விதத்திலும் அயோத்தியை பாதிக்காது. இங்கு ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் போலவே வாழ்ந்து வருகிறோம். குழப்பத்தை ஏற்படுத்தியவர்களெல்லாம் வெளியேயிருந்து வந்தவர்கள். அவர்கள் அயோத்தியை அரசியல் போர்க்களமாக்கிவிட்டார்கள். இந்த பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொள்வோம். இல்லையெனில், இந்த தீயை அணைக்க ஒருபோதும் இயலாது." என்றும் அன்ஸாரி கூறுகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

அல் அக்ஸாவுக்குள் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளரின் திடீர் பிரவேசம்

கடந்த புதன்கிழமை (29.09.2010) சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் புனித மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் பிரவேசித்த யூத ஆக்கிரமிப்பாளர்கள்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார் புடைசூழ அங்கு உலாவந்ததோடு> அதனை சேதப்படுத்தவும் முயன்றதாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஸியோனிஸவாதிகள் மஃரிபா நுழைவாயிலினூடே மஸ்ஜிதுக்குள் பிரவேசித்தனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மஃரிபா நுழைவாயிற் பிரதேசம் 1967 ஆம் ஆண்டு ஜெரூசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குள்ளானதில் இருந்து இன்று வரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அல் அக்ஸாவின் பாதுகாப்புப் பணியாளர்கள் மேலும் கருத்துரைக்கையில்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரதும் ஆக்கிரமிப்புப் பொலிஸாரினதும் ஒத்துழைப்போடு அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் சிறுசிறு குழுக்களாகப் பிரவேசித்த ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள்> அங்கு இனவெறியைத் தூண்டும் விதமான பிரசங்கங்களை நிகழ்த்தி 'தல்மூ'திய சடங்குகளை மேற்கொண்டதோடல்லாமல்> அவர்களில் சிலர் மஸ்ஜிதை சேதப்படுத்தவும் முயன்றனர் என்றும்> இதற்கெதிரான எத்தகைய சட்ட நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இனவாதத்துக்குத் துணைபோகும் இஸ்ரேலிய வழக்குமன்றம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரை அடுத்துள்ள ஷெய்க் ஜர்ராஹ் பிரதேசத்திலிருந்து அனேகமான பலஸ்தீன் குடும்பங்களை வெளியேற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ள இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் செயல் முழுக்க முழுக்க இனக் காழ்ப்புணர்வுடையதும் பாரதூரமானதுமாகும் என பலஸ்தீன் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தஃபா அல் பர்கோதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (28.09.2010) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய உயர் வழக்குமன்றத்தின் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களைத் தமது சொந்த இருப்பிடங்களை விட்டும் பலவந்தமாக வெளியேற்றுவதை சட்டபூர்வமாக்கிக்கொள்ள முயன்றுவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பாரதூரமானவை என்றும் புனித ஜெரூசல நகரில் வாழும் ஏனைய பலஸ்தீனர்களின் எதிர்கால இருப்புக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதான போர்வையின்கீழ் தமது சட்டவிரோதக் குடியேற்றங்களை விரிவாக்குவதிலும் புனித ஜெரூசல நகரினை யூதமயப்படுத்துவதிலும் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதன், 29 செப்டம்பர், 2010

எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி!

புதுடெல்லி,செப்.28:மத்திய அரசால் வாக்களிக்கப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியை கஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது துஃபைல் அஹ்மதின் தந்தை உள்பட உறவினர்கள் நிராகரித்துவிட்டனர்.

எங்களுக்கு தேவை பிச்சையல்ல! நீதி! எனக்கூறி துஃபைலின் தந்தை முஹம்மது அஷ்ரஃப் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாக்களித்த நிதியுதவியை நிராகரித்துவிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி துஃபைல் கொல்லப்பட்டார். ரஜவ்ரி கதலில் கனி மெம்மோரியல் ஸ்டேடியத்தின் அருகில் தனது தோழர்களுடன் துஃபைல் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில்தான் பாதுகாப்புப் படையினரின் கண்ணீர் குண்டு அவருடைய தலையில் தாக்கில் துஃபைல் மரணித்தார்.

தொடர்ந்து நடந்த கஷ்மீரிகளின் போராட்டத்தில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
"எனது மகன் மகத்தான லட்சியத்திற்காக உயிரை தியாகம் செய்துள்ளான்" என துஃபைலின் தந்தை கூறுகிறார்.

மேலும் "உயிர் தியாகிகளின் இரத்தத்தை விற்று காசு சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் தரலாம் எனக்கூறினாலும் வாங்கமாட்டோம்" என முஹம்மது அஷ்ரஃப் கூறுகிறார்.

"எங்கள் குழந்தையை கொலைச் செய்தவர்களோடு எந்த சமரசத்திற்கும் இடமில்லை. ஆட்சியாளர்களான உங்களுக்கு இச்சம்பவம் நிகழ்ந்திருந்தால் நீங்கள் நிதியுதவியை வாங்குவீர்களா? பணம் தருவதற்கு பதிலாக கொலையாளிகளான பாதுகாப்பு படையினரை தண்டிக்க வேண்டும். கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இச்சம்பவத்தை திசைதிருப்ப முயல்வது அதிகாரிகளின் வழக்கம்" என துஃபைலின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சமாதான காலக்கட்டத்தில் நடந்தது 6541 மதக் கலவரங்கள்

புதுடெல்லி,செப்.29:பாப்ரி மஸ்ஜிதுடன் தொடர்புடைய மதக் கலவரங்களுக்குப் பிறகு பொதுவாகவே அமைதியான காலக்கட்டமாக கருதப்பட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே 6541 கலவரங்கள் நடைப்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கலவரங்களில் 2234 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 21,460 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

2001 முதல் 2009 வரையிலான காலக்கட்டங்களில்தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தேறியுள்ளன. இதில் மிக அதிகமாக 2008 ஆம் ஆண்டு கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. 943 கலவரங்களாகும் அவை.

ஆனால் அதிகம்பேர் கொல்லப்பட்டது குஜராத் இனப் படுகொலையின் போதுதான். 1130 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், 2500 பேர் மட்டும் குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகயிருக்கும்.

மதக் கலவரங்களை அரசு அலட்சியமாக கருதிவிட்டு குண்டுவெடிப்புகளில் அதிகம் கவனம் செலுத்தும் வேளையில் குண்டுவெடிப்புகளை விட கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2001 ஆம் ஆண்டிற்கு பிறகு 28 பெரிய குண்டுவெடிப்புகள் நடந்தன. அதில் கொல்லப்பட்டவர்கள் 990 பேர். 2791 பேருக்கு காயமேற்பட்டது.

அதேவேளையில், வருடத்திற்கு சராசரியாக 600 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் 130 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை தீவிரமான 90 களில் மதக் கலவரங்கள் சாதாரணமாக நடைப்பெற்றாலும் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு பொதுவாகவே சமாதானமான காலக்கட்டமாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மைக்கு புறம்பானது என்பதை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெளிவாக்குகின்றன.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி 4375 ஆகும். ஆனால், இது பத்தாயிரத்தைத் தாண்டும் என சில அமைப்புகள் கூறுகின்றன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பாப்ரி மஸ்ஜித்:20 விஷயங்களில் தீர்ப்பு

லக்னோ,செப்,29:சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கப் போகிறது. 28 கட்சிதாரர்கள் உட்படும் 5 வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

நாளை அளிக்கும் தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள் இவையாகும்:
1.தகர்க்கப்பட்ட கட்டிடம் முஸ்லிம்களின் மஸ்ஜிதா?
2.அந்த கட்டிடம் எப்பொழுது நிர்மாணிக்கப்பட்டது
3.ஹிந்து கோயிலை இடித்துவிட்டா அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது?
4.முஸ்லிம்கள் தொன்றுதொட்டே இங்கு தொழுகை நடத்தி வருகின்றார்களா?
5.சர்ச்சைக்குரிய கட்டிடம் நிரந்தரமாகவும், தெள்ளந்தெளிவாகவும்
முஸ்லிம்களின் கைவசமிருந்ததா?
6.1949 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களின் கைவசமாக அந்த கட்டிடம் இருந்ததா?
7.கட்டிடத்தின் மீது ஹிந்துக்கள் உரிமைக் கோரியது மிகவும் காலந்தாழ்ந்து உருவானதா?
8.முஸ்லிம்களுடைய நிரந்தரமான, தெள்ளந்தெளிவான உடமை உரிமையை தகர்த்துவிட்டா ஹிந்துக்கள் அவ்விடத்தில் வழிபாட்டுரிமையை பெற்றனர்?
9.இந்த இடம் ஹிந்துக்களின் நம்பிக்கையின்படி ராமன் பிறந்த இடமா?
10.ராமனுடைய பிறந்த இடம் என்ற நிலையில் ஹிந்துக்கள் புராதனக் காலம் முதல் இங்கு வழிபாடு நடத்துகின்றனரா?
11.கட்டிடத்தில் காணப்படும் சிலையும் இதர ஹிந்துமத
வழிபாட்டுப் பொருட்களும் 1949 டிசம்பர் 22 ஆம் தேதி ரகசியமாக அங்கு வைக்கப்பட்டது என்ற வாதம் சரியா?
12.தகர்க்கப்பட்ட கட்டிடத்தோடு இணைந்துள்ள ராம்சம்பூத்ரா, பண்டாரம், சீதா ரஸோயி ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படும் நிர்மாணங்கள் உண்மையில் என்ன? அவை கட்டிடத்தின் ஒருபகுதியா?
13.கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி புராதனமானதா?
14.சிலைகள் இருக்குமிடத்தில் முஸ்லிம்களின் மஸ்ஜித் கட்ட அனுமதியில்லை என்ற இஸ்லாமிய சட்டத் திட்டத்தின்படி இது மஸ்ஜிதாக இருக்க முடியாது என்ற வாதம் சரியா?
15.ஹிந்துக்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்ட இடமா சர்ச்சைக்குரிய பகுதி?
16.இடிக்கப்பட்ட பிறகு இது ஒரு முஸ்லிம் வழிப்பாட்டுத் தலமா?
17.சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் என்றால் தொடர்ந்து வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாமா?
18.இடத்தின் உரிமை எந்த கட்சிதாரருக்கு?
19.இதர முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளிலிருந்து வித்தியாசமாக சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மினாராக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததால் அது ஒரு முஸ்லிம் மஸ்ஜித் என்ற வாதம் சரியா?
20.இடத்தின் உரிமை கிடைக்காத கட்சிதாரருக்கு எவ்வித வணக்க வழிபாட்டிற்குரிய வசதிகளை செய்துக் கொடுப்பது?

மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் இலக்கமிட்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்காது. ஆனால் மேற்குறிப்பிட்ட விஷயங்களை அடக்கிய பொதுவான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கும்.

வரலாற்று ரீதியான, நம்பிக்கை ரீதியான தர்க்க விவகாரத்தில் விஞ்ஞானப் பூர்வமான தொல்பொருள் ஆய்வு நடத்திய பிறகு கூறப்படும் இத்தீர்ப்பு வரலாற்றில் அபூர்வமானதாகும்.

செய்தி:மாத்யமம்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-நாளை அல்லது மறுநாள் தீர்ப்பு வெளியாகும்

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னெள பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால், இதை எதிர்த்து திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், பிரச்சனையை பேசித் தீர்க்க உத்தரவிடுமாறும் கோரினார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த மனு மீதான விசாரணை [^] இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு [^] விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் [^] உத்தரவிட்டிருந்தது.

இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:

இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.

அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.

அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.

மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.

இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை நாளையோ அல்லது நாளை மறுநாளோ தீர்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே அக்டோபர் 1ம் தேதிக்கு முன்னதாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தீர்ப்பை லக்னொ நீதிமன்றம் வெளியிடலாம்.

பாபரி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்சநீதிமன்றம் பிற்பகல் தீர்ப்பு வழங்கும்

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு எப்போது தீர்ப்பு வழங்கலாம் என்பது குறித்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றார்கள். தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி இப்போது தனது வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பிறகு முஸ்லிம் மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள் பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள்் உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்தார்கள். பிற்பகலில் தீர்ப்பு எப்போது வழங்கலாம் என்பது குறித்து தங்கள் முடிவை அறிவிப்பார்கள். நமதுஇணையத்தளம் உடனுக்குடன் இது குறித்த செய்திகளை வெளியிடும்

பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை

பாலஸ்தீன் சிறுவனை தாக்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்த இஸ்ரேலிய ஆய்வாளர் மீது அச்சிறுவன் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை செய்ய இஸ்ரேல் பெரும் தடைகற்களை உருவாகுவதாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (The Defense For Children International (DCI) இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் அச்சிறுவன் அளித்த புகாரில் கற்களை வீசியதற்காக தன்னை கைதுசெய்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கு கரையிலுள்ள இஸ்தியன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது அவர்கள் தன்னை அடித்ததாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியிருந்தான். மேலும் சிறுவனின் கைவிலங்கிலும் பிறப்புறுப்பிலும் மின்சார கிளிப்புகளை மாட்டி மின்சாரம் பாய்ச்சப்போவதாகவும்(Electric Shock) அவனை மிரட்டி பயமுறுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 ல் சிறுவன் புகார் செய்ததை தொடர்ந்து அவனை வழக்கு சம்பந்தமாக விசரிக்கவேண்டுமென்று இஸ்தியன் விசாரணை நிலையத்திற்கு அவனது வழக்கறிஞர் இல்லாமல் தனியாக வருமாறு கூறியுள்ளனர். மேலும் அவனது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்த மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர் என DCI அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆய்வாளர் மீதான இவ்வழக்கிற்கு பெரும் தடையை இஸ்ரேல் ஏற்படுத்துகின்றது. இஸ்ரேலிய சட்டப்படி வழக்கறிஞர் வைத்துதான் எந்த வழக்கையும் நடத்த வேண்டும் வழக்கறிஞர் இல்லாமல் நடத்தச்சொல்லுவது வழக்கின் விசாரணையை மிகவும் பாதிக்கும் என்றும் DCI அமைப்பு கூறியுள்ளது.

மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்த கருத்தரங்கம்

‘மதச்சார்பற்றோர் மாமன்றம், தமிழ்நாடு’ மற்றும் ‘பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் (IDCR)’, லயோலா கல்லூரி ஆகியவை சார்பில் சென்னையில், 18.09.2010 அன்று மாலை 5.30 முதல் 8.30 மணி வரையில், லயோலா கல்லூரி, லாரன்ஸ் அரங்கில் “இந்தியாவும் மதச்சார்பின்மையும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் மதச்சார்பின்மை குறித்து ஆழமான விவாதத்தைத் தூண்டும் விதமாக அமைந்தது.


‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ மதச்சார்பின்மையை வலியுறுத்தியும், மதவெறி சக்திகளை அம்பலப்படுத்தியும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் 11.12.2008-ல் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும், குஜராத், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழுத்து ஆயிரக்கணக்கான சிறுபானமையினர் பலியாக்கிய மத வெறியர்களுக்கு எதிராகப் போராடி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்க சமரசமின்றி பாடுபட்டு வருபவருமான திஸ்தா செட்டில்வாட் அவர்களை அழைத்து வந்து சென்னையில் மிகப் பெரிய கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மதச்சார்பின்மையை வலியுறுத்துவது எளிதான செயல் இல்லை என்பதை நாம் அறிவோம். இந்த சவால் நிறைந்த பணியை ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சமரசமின்றி செய்து வருகிறது. அரசியல் விமர்சகரும், சமூக செயல்பாட்டாளருமான வீரபாண்டியன் இந்த அமைப்பிற்கு நிறுவனராக இருந்து செயலாற்றி வருகிறார்.


“இந்தியாவும் மதச்சார்பின்மையும்” கருத்தரங்கத்திற்கு வரவேற்புரையும், இணைப்புரையும் வழங்கிய மதச்சார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவனர் வீரபண்டியன் ‘நான் பெரும்பாலும் இதுபோன்ற மதச்சார்பற்ற நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்களிடையே நிறைய பேசியிருக்கிறேன். மதத்தின் பெயரால் வன்முறை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அமைப்பின் லோகோவாக நாங்கள் மகாத்மா காந்தியை வைத்திருக்கிறோம். காரணம் அவர் மதச்சார்பின்மைக்காக தன் உயிரை கொடுத்தவர். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை அவருக்குத்தான் கிடைத்தது. அவரை தான் ‘முகமது காந்தி’ என்று முஸ்லிம்கள் அழைத்தார்கள். அந்த அளவுக்கு அவர் மதச்சார்பின்மைக்காக உழைத்திருக்கிறார். மதச்சார்பின்மைக்காகப் போராடும் ஒரு அமைப்பு அவரை லோகோவாக வைத்திருப்பதற்கு முழுப் பொறுத்தமானவர் அவர். மனிதநேயத்தை விரும்புகிறவர்கள் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மதத்தின் பெயரால் வேறுபாடுகளை உருவாக்கி அரசியல் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள கூடாது என்பதோடு அவற்றை நாம் நிராகரிக்க வேண்டும்’ என்று அழுத்தமாகப் பேசினார். பேச்சாளர்களைப் பேச அழைத்த போது இடையிடையே அவர்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியது பார்வையாளர்களைக் கவர்ந்த்து.


கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் – தாளாளருமான முனைவர் ஜோ.ஆரூண், ‘உலகப் பார்வையில் இந்திய மதச்சார்பின்மை’ என்ற தலைப்பில் பேசினார். அவர் ‘மதச்சார்பற்றோர் மாமன்றம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்துப் பணியாற்றுவது சரியெனப்பட்டதால் தான் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டோம். மனிதர்களைப் பிரித்து மோதல் ஏற்படுத்துவதில் மனித நேயம் தோல்வி அடைகிறது. உலக நாடுகளில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராமல் இருப்பது. இந்தியவைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மையாக உள்ளது. இந்த கொள்கையில் நாம் உறுதியாக இருப்போமானால் நமக்குள் எந்தவித பிரச்சனையும் எழாது’ என்றார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் தாங்கிப் பேசியதாவது ‘மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராது இருப்பது என்பதோடு, எல்லா மதத்தையும் சமமாக பாவிப்பதாகும். இந்தியாவை ஆட்சி புரிந்த முந்தைய மன்னர்கள் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்கட்டாக இருந்தனர். மகாராஷ்டிராவில் இன்றைக்கு சிவசேனை போன்ற மத சக்திகள் தங்கள் அடையாளமாக முன்னிறுத்தும் சிவாஜி மதவெறியர் அன்று. அவரது ஆட்சிக் காலாத்தில் அவரது படையில் நிறைய முஸ்லிம்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர். அவர் தான் சார்ந்த மதத்தைத் தாண்டி முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல் கட்டிக் கொடுத்துள்ளார். அவரை இன்று மதத்தின் குறியீடாக வைத்து மகாராஷ்டிராவில் அரசியல் நடந்து வருகிறது. அதேபோல், இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர் ஹவுரங்கசிப் தன் ஆட்சிக் காலத்தில் தன் ஆட்சிப்பரப்பில் கோயில்கள் கட்டிக் கொடுத்துள்ளார். எந்த மதத்தின் மீதும் அவர் வெறுப்பை உமிழ்ந்ததில்லை. இப்படி நம்முடைய முன்னோர்கள் மதச்சார்பின்மையை உறுதியாக பின்பற்றி வாழ்ந்துள்ளனர். என்ன விலைக் கொடுத்தாவது மதச்சார்பின்மையை நாம் கடைப்பிடித்திட வேண்டும். மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்’ என்றார்.


‘குஜராத் – என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் பேசிய புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், ‘கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தனர் எனக் கூறி, 3000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையின முஸ்லிம்களைக் கொலை செய்துள்ளனர் இந்து மதவெறியர்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கோடிக்கணக்கான மதிப்புடைய உடைமைகளைச் சேதப்படுத்தி உள்ளனர். கோத்ரா ரயில் எரிப்பு முஸ்லிம்கள் செய்ததல்ல. கரசேவர்கள் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு முஸ்லிம் இளம் பெண்ணைத் தூக்கிச் சென்றதுதான் அனைத்திற்கும் காரணம். இதனை அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் ஈமெயில் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர். அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். ரயில் எரிப்பு குறித்த தடய அறிவியல் துறை அறிக்கை ரயில் பெட்டி உள்ளிருந்து எரிக்கப்பட்டதாக கூறுகிறது. தற்போது ஒரு என்கவுன்டர் வழக்கில் குஜராத் முதல்வர் மோடி நள்ளிரவு வரை விசாரிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலையீடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மேலகான் குண்டு வெடிப்பில் கைது செய்யபாட்டுள்ள மதவெறியர்களுக்கு ஆதராவாக பேசும் மத்திய அரசு, ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டது குறித்து பேச முடியாது எனக் கூறுவது இரட்டை அளவுகோல் ஆகும்’ என்றார்.


‘காவிமயமும் கோட்சேக்களும்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் ‘காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிடவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காந்தி கொலை வழக்கில் தங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், சாவர்கருக்கும் தொடர்பில்லை என்று கூறியவர்கள், தீர்ப்பு சொல்லப்பட்ட நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சாவர்க்கர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். “காவி புனிதமானது தான்” ஆனால், அந்த காவியை அணிந்தவர்கள் புனிதமானவர்களாக இல்லை. சங்கராச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய அலுவலகத்திற்கே குண்டு வைத்துக் கொண்டு, அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடலாம் எனத் திட்டமிட்டனர். நல்ல வேளையாக அது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காவித் தீவிராவாதம் என்றவுடன் பதறுகிறார்கள். முஸ்லிம் தீவிரவாதம் எனக் கூறி ஒரு சமூகத்தையே கொச்சைப்படுத்தியவர்கள், கலங்கப்படுத்தியவர்கள் இப்போது இந்த வார்த்தையைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். இந்த கருத்தரங்கம் நடக்கும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது. பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பாக நடந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் நேரம். மதச்சார்பின்மை பற்றி நாம் மத நம்பிக்கை உள்ளவர்களிடத்திலும் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்றார்.


‘இந்திய மதச்சார்பின்மையும், நமது கடமையும்’ என்ற தலைப்பில் நிறைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ‘நமது இந்திய அரசியல் சாசனம் எந்த மதத்தையும் கடைபிடிக்க, அதனை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி அழைக்க உரிமை வழங்கியுள்ளது. கங்கிரஸ் கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதுகிறது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மத, சாதி, இன அடையாளம் எதையும் பார்க்காத பொதுவான கட்சியாகும். இதனால் இந்த கட்சி இன்றைக்கும் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கட்சியாக திகழ்கிறது. எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி இந்திய அரசியல் சட்டத்தில் ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை சேர்த்தார். எமர்ஜென்சி காலத்தில் நடந்த நல்லதுகளில் இதுவும் ஒன்று. சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் அரணாக இருக்கும், இருக்கிறது. நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் கமிஷன்கள் அமைத்து சிறுபான்மை மக்களின் நிலைக் குறித்து அறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற அமைப்புகளை நாம் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது’ என்றார்.


நிறைவாக நன்றி கூறிய தோழமை இயக்குநர் தேவநேயன் ‘அனைவருக்கும் நன்றி கூறியதோடு, இந்த கருத்தரங்கில் அறிவுஜீவிகளை அழைப்பதைவிட களத்தில் இருந்து போராடுபவர்களை அழைத்துள்ளோம். அதுதான் இந்த கருத்தரங்கின் சிறப்பு’ என்றார்.

இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்


(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)




அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.

கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன.

கோல்வால்கரின் பாசிச கருத்துகள்

பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.

ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'

இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:

'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.

நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.

'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.

'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.'

பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.

ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?

அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.

வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:

'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'

இது மட்டுமா?

டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.

பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)

பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?

திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா?

பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!

அயோத்தி தீர்ப்பை வெளியிட உத்தரவு கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

டெல்லி,செப்,28:நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி தீர்ப்பை வெளியிட அனுமதி கிடைக்குமா அல்லது தள்ளிப் போடப்படுமா என்பது இன்று தெரிய வரும். இதுத் தொடர்பான அப்பீல் மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.

அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சம். இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க செப்டம்பர் 23ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இருப்பினும் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் அப்பீல் மனுவின் விசாரணை செப்டம்பர் 28ம் தேதியான இன்றைக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்ற இரு நபர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தனது கருத்தை தெரிவிக்கவுள்ளது. மற்ற மனுதாரர்கள் பதில்களைத் தாக்கல் செய்து விட்டனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரியுள்ளன. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று உறுதியான, இறுதியான தீர்ப்பை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போபால் விஷ வாயு சம்பவம் -பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக ரூ.72 கோடி நிதி

டெல்லி,செப்.28:போபால் விஷ வாயு சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.72 கோடி இழப்பீட்டை வழங்க, போபால் சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று கூடி கூடுதல் இழப்பீடு குறித்து பரிசீலித்தது. இக்கூட்டத்தில் போபால் விஷ வாயு சம்பவ இழப்பீடு வழங்கும் பணிகள் குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பிந்தைய நிலை குறித்தும் ஆராயப்பட்டது.

வாரன் ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வரும் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது.

முன்னதாக, போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. வாரன் ஆன்டர்சன் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் வழக்கை முடித்த கொடுமையை நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியுடன் எதிர்நோக்கினர்.

இதையடுத்து அவசரம் அவசரமாக மத்திய அரசு ப.சிதம்பரம் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு 22 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமானதாக ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர முயற்சிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இழப்பீடு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூ.1265.56 கோடியை விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் நேற்று நடந்த கூட்டத்தில் கூடுதலாக ரூ.72 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வீரப்பமொய்லி, குலாம் நபி ஆசாத், ஜெயபால் ரெட்டி, கமல்நாத், குமாரி செல்ஜா, மு.க.அழகிரி, ஜெயராம் ரமேஷ், பிருத்விராஜ் சவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


thatstamil

மத்திய அரசின் எட்டு அம்ச திட்டம் - யானைப் பசிக்கு சோளப்பொரி


கஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் சாதாரணமானதாக இருந்திருந்தால் ஒருவேளை மத்திய அரசு அறிவித்துள்ள எட்டு அம்ச திட்டம் கஷ்மீரிகளை திருப்திப்படுத்தும் என்று கூறலாம். ஆனால், மதிப்புமிக்க நூற்றுக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிகொடுத்து கஷ்மீரிகள் நடத்திய போராட்டம் அவர்களின் ஆழமான சுதந்திரதாகத்தின் பிரதிபலிப்பாகும்.

கஷ்மீரில் நடந்த போராட்டத்தின் பொழுது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு, சிறையிலடைக்கப்பட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் விடுதலைச் செய்வது, கல்வித்துறை மேம்பாட்டிற்காக 100 கோடிரூபாய் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தீர்மானம் கஷ்மீரிகளின் விஷயத்தில் வழக்கமில்லாத ஒன்றானதால் இதனை ரசனைக்குரிய அணுகுமுறை என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.

ஆனால் கஷ்மீரில் போராட்டத்திற்கு தலைமை வகித்த ஹூர்ரியத் தலைவர்களிடம் எட்டு அம்ச திட்டம் செல்லும் முன்பே தோல்வியுறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்தியர்கள் கஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும், கஷ்மீரை சர்வதேச சர்ச்சைக்குரிய பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுகள் மத்திய அரசால் எச்சூழலிலும் அங்கீகரிக்கப்படாது என்பது உறுதியான பொழுதிலும், கஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை கட்டுப்படுத்துவது, மாநிலத்திற்கு பகுதியளவிலான சுயாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக எட்டு அம்ச திட்டம் முற்றிலும் மெளனத்தையே சாதிக்கும் சூழலில் இத்திட்டம் வெற்றிபெறும் என்பதில்
நம்பிக்கைக் கொள்ளாமலிருப்பதே சிறந்தது.

வளர்ச்சித் திட்டங்களுடன் வந்து கஷ்மீரிகளின் கண்ணில் மண்ணைத் தூவவேண்டாம் என்ற உண்மையை முன்னரே அறிவித்திருந்தார் ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானியை போன்றவர்கள் உறுதிப்பட கூறியிருந்தனர்.

மத்திய அரசின் புதிய திட்டத்தைக் குறித்து உமர் அப்துல்லாஹ் உற்சாகம் அடைந்துள்ளது உண்மைதான். எனினும், ஹூர்ரியத்தின் மிதவாதிகளோ, தீவிர கருத்தையுடையவர்களோ இதனைக் குறித்து ஆதரவாக கருத்து தெரிவிக்காத சூழலில் உமரின் அபிப்ராயம் கஷ்மீரிகளின் உணர்வின் வெளிப்பாடாக கருத இயலாது.

ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரம் கஷ்மீரை மட்டும் பாதிக்கக்கூடிய விவகாரம் அல்ல. மணிப்பூரில் இரோம் ஷர்மிளா என்ற பரிதாபத்திற்குரிய பெண்மணி இக்காரணத்தினாலேயே 10 வருடங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார். அவருடையை நிலை மிகமோசமாக உள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் கண்ணில் காணும் இளம் பெண்களையெல்லாம் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு எதிராகத்தான் ஷர்மிளா போராடி வருகிறார்.

கஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாலியல் வெறிக்கு ஆளாகாத கஷ்மீரி பெண்களே இல்லை என கிலானியின் அறிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். ஆனால் பரவலான பாலியல் வன்புணர்ச்சிகள் கஷ்மீரில் நடந்தது நிதர்சனமான உண்மையாகும்.

பதவி உயர்வையும், பதக்கம் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு அப்பாவி மக்களை வேட்டையாடி அவர்களுடைய இறந்த உடல்களோடு ஏ.கெ-47 துப்பாக்கிகளை சேர்த்துவைத்து பயங்கரவாதிகளாக சித்தரித்து ராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களை கண்டும் காணாமல் நடிப்பதற்கு ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கு எவ்வாறு சாத்தியமாகும்?

விமர்சகன்,

திங்கள், 27 செப்டம்பர், 2010

திருக்குர் ஆன் வசனங்களைக் குறித்த பிஷப்பின் விமர்சனம் - அல் அஸ்ஹர் கண்டனம்

கெய்ரோ,செப்.27:திருக்குர்ஆனில் சில வசனங்களின் நம்பகத் தன்மையைக் குறித்து கேள்வி எழுப்பியுள்ள எகிப்தைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவ பிஷப்பின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம்.

இத்தகைய விமர்சனங்கள் தேசிய ஐக்கியத்தை பாதிக்கும் என்றும் அல் அஸ்ஹர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காப்டிக் சர்ச்சின் இறையியல்துறை கமிட்டியின் தலைவர் பிஷப் பிஷோவின் விமர்சனம்தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருக்குர்ஆனில் சில வசனங்கள் முஹம்மது நபி(ஸல்...) அவர்களின் காலக்கட்டத்திற்கு பிறகு இணைக்கப்பட்டது என்ற அபாண்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

புதிய சர்ச்சுகளின் நிர்மாணம், மதமாற்றம், இறையியல் கொள்கைகளைக் குறித்த சர்ச்சைகள் ஆகியவற்றின் மூலம் முஸ்லிம்கள் மற்றும் காப்டிக் சிறுபான்மை இன கிறிஸ்தவர்களுக்கிடையே பிளவுகள் மும்முரமான சூழலில்தான் பிஷப் இத்தகையதொரு மோசமான விமர்சனத்தை
வெளியிட்டுள்ளார்.

இத்தகைய பொய்யான அறிக்கைகள் தேசிய ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும், தேசிய ஐக்கியத்தை பாதுகாப்பதற்குரிய சூழல் இது என்றும் அல் அஸ்ஹர் கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆராய்ச்சி பிரிவு அவசரமாக கடந்த சனிக்கிழமை கூடியது. சில வசனங்கள் நபிகளாரின் மரணத்திற்கு பிறகு சேர்க்கப்பட்டது என்ற தனது அறிவிப்பு விமர்சனமோ குற்றச்சாட்டிற்குரியதோ அன்று என்றும், கிறிஸ்தவ நம்பிக்கைகளோடு பொருந்தாத சில வசனங்களைக் குறித்த சந்தேகம் மட்டுமே என்றும் பிஷப் தெரிவித்துள்ளார்.

பிஷப் பிஷோயின் அறிக்கையைக் குறித்து பதில் கூற காப்டிக் சர்ச் மறுத்துவிட்டது. காப்டிக் கிறிஸ்தவ பிரிவின் தலைவர் போப் மூன்றாவது ஷினவ்தா இதைக் குறித்து எகிப்திய தொலைக்காட்சியில் விரைவில் பதில் கூறுவார் எனக் கருதப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

பஹ்ரைனை தொடர்ந்து குவைத்திலும் ஸ்பான்சர் முறை ரத்து

குவைத்,செப்.27:வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் சர்ச்சைக்குரிய நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் முடிவு செய்துள்ளது.

வருகிற பிப்ரவரி மாதம் 'கஃபீல்' என்றழைக்கப்படும் ஸ்பான்சர் நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் அரசு தீர்மானித்துள்ளது.

பஹ்ரைன் ஏற்கனவே இந்த நடைமுறையை ரத்துச் செய்திருந்தது. ஈராக்கிடமிருந்து குவைத் விடுதலைப் பெற்ற நினைவு ஆண்டு பரிசு இது என குவைத் நாட்டின் தொழில் சமூக விவகாரத்துறை அமைச்சர் அல் அஃபாஸி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை அமைப்புகள் 'கஃபீல்' நடைமுறை அடிமைத்தனம் என குற்றஞ்சாட்டியிருந்தன. குவைத்தில் இந்தியர்கள் உட்பட 23 லட்சம் வெளிநாட்டு தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க கனிணி வைரஸ் தாக்குதல்

டெஹ்ரான்,செப்.27:ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க 'ஸ்டக்ஸ்நெட் வார்ம்' என்ற சக்திவாய்ந்த வைரஸ் ஈரானின் முதல் அணு நிலையமான புஷேஹ்ர் நிலையத்தின் கணினிகளை தாக்கியுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அணு நிலையம் போன்ற தொழில் நிறுவனங்களை வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டக்ஸ்நெட் வைரஸ் கணினிகளை மட்டுமே பாதித்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டிற்கு(Go Live) வரவுள்ள இந்த அணு நிலையத்தின் இயங்கு தளத்திற்கு(Operating System) இந்த வைரசால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அணு நிலைய அதிகாரி மஹ்மூத் ஜெப்ரி தெரிவித்தார்.

தங்களது தொழில்நுட்ப குழு வைரஸ் பாதித்த கணினிகளை கண்டறிந்தது அதனை நீக்கும் பணியில் முழு வீச்சாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் செயல்படவிருக்கும் அணு நிலையத்தை நிறுவும் தங்களது திட்டத்தில் இதனால் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் மீது தொடுக்கப்பட்ட தொழிநுட்ப போர் ('Electronic war') என்றே இந்த வைரஸ் தாக்குதலை ஈரானின் தொழிற்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி முஹம்மத் லியி தெரிவித்துள்ளார், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கடந்த வாரம் அத்துறை தலைவர் முஹம்மத் லியி தலைமையில் கூடி இந்த வைரஸ் தாக்குதலை சமாளிப்பது குறித்து ஆலோசித்தனர், இதுவரை ஈரானில் 30,000 கணினிகளை தாக்கியுள்ளதாக முஹம்மத் லியி தெரிவித்தார்.

ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரஸ் ஜெர்மனியின் சீமன்ஸ்(Siemens) நிறுவன தயாரிப்புகளை இலக்காக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது இது மின் நிலையம், தண்ணீர் தேக்கிகள்,எரிவாயு மட்டும் எண்ணெய் குழாய்களின் வால்வுகளை கட்டுப்படுத்தும் கருவிகள் போன்ற சீமன்ஸ் நிறுவனத்தின் பெரும் தயாரிப்புகளில் உள்ள கட்டுமான மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் திறம் வாய்ந்தது என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இந்த ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரசை வடிவமைத்திருக்கக் கூடும் என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Dr ஆபியா சித்திகாவை விடுதலை செய்ய முயற்சி எடுக்கப்படும் - கிலானி!

"அமெரிக்க நீதிமன்றத்தால் 86 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட Dr ஆபியா சித்திகா அவர்களை விடுதலை செய்து அவரின் தாய்நாடான பாகிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு சட்டம், அரசியல், மற்றும் பேச்சுவார்த்தை என்ற எல்லா விதத்திலும் நடவடிக்கை எடுக்கும்" என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிகிழமை பிரதமர் கிலானி மற்றும் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகியோரின் சந்திப்பில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
"Dr ஆபியா சித்திகாவை விடுதலை செய்து தாய்நாட்டிற்கு கொண்டு வர எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்படும்" என்று கூறிய பிரதமர் கிலானி, Dr ஆபியா சித்திகா அவர்களை ஒரு போர் கைதியாக கருதி விடுதலை செய்ய அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் Dr ஆபியா சித்திகா அவர்களை விடுதலை செய்யகோரியும், அமெரிக்க அரசியல் சட்டத்தை கண்டித்தும் நடத்திய நாடுதழுவிய தொடர் பிரச்சாரமே அரசின் இந்த முடிவிற்குக் காரணம்.
Dr ஆபியா சித்திகா முந்தைய அரசாங்கத்தின் ஆட்சியில் அமெரிக்காவால் கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டார் என்றாலும் அவரை விடுவிக்க தனது அரசு எல்லாவித முயற்சியும் எடுத்துவருகின்றது, மேலும் ஒவ்வொரு முறையும் அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தான் வரும் போதும், குறிப்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டன், ஜேம்ஸ் ஜோன்ஸ் ஆகியோரின் வருகைளின்போது ஜனாதிபதியும் பிரதமர் கிலானியும் இதனை பேசியதாகவும், தங்களின் வெளிநாட்டு பயணங்களிலும் வலியுறுத்தியதாகவும், கூறிய பிரதமர் Dr ஆபியா அவர்களுக்கு சட்டரீதியான உதவிகள் செய்வதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பாகிஸ்தான் அரசின் முயற்சியால் Dr ஆபியாவின் இரண்டு குழந்தைகளும் பத்திரமாக பாகிஸ்தான் கொண்டுவரப் பட்டுள்ளனர். அவரின் மற்றொரு குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது" என்றார்.
உள்துறை அமைச்சர் தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது பிரதமரின் சார்பாக அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து Dr ஆபியாவை விடுதலை செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் Dr ஆபியா மீதான வழக்கின் தீர்ப்பிற்கு முன்பே அவரை தன் தாய்நாட்டிற்கு அனுப்பும்படி கோரி ஒரு கடிதமும் அமெரிக்க அரசிடம் கொடுக்கப்பட்டது என்றும் கிலானி தெரிவித்தார்.
பிரதமருடனான இந்தச் சந்திப்பிற்கு பின் உள்துறை அமைச்சர் தனது துறை அதிகாரிகளுடன் இதற்கான வெவ்வேறு வழிகளைக் கலந்தாலோசனை செய்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உள்துறை, வெளியுறவுத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் இரு திறமையான வழக்கறிஞர்களும் அடங்கிய குழு ஒன்றை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நடத்திட அமெரிக்க வழக்கறிஞர்களை அமர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அரசியல் ரீதியான முயற்சிகளுக்கு அனைத்துக்கட்சி பெண்கள் குழு அமைத்து, அவர்கள் அமெரிக்கா சென்று அதன் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், வழக்கறிஞர்கள், மற்றும் அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களையும் சந்தித்து பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளை எடுத்துக்கூறி Dr ஆபியாவின் விடுதலையை வலியுறுத்துவார்கள் என்றும் முடிவுசெய்யப்பட்டது.
வெளியுறவு அதிகாரி ஒருவரிடம் எந்த அடிப்படையில் Dr ஆபியா விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதென்று கேட்கையில், "அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் Dr ஆபியாவை மன்னித்து விடுதலை செய்யலாம் அல்லது Dr ஆபியா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைந்த அளவாக பாகிஸ்தானிலே நிறைவேற்ற வேண்டுமென்ற ஒப்பந்த அடிப்படையிலும் விடுவிக்கப்படலாம்" என்று கூறினார்.
டாக்டர் ஆஃபியாவிற்கு 86 ஆண்டு கால சிறைத்தண்டனை தீர்ப்புக்கு, பாகிஸ்தான் மனித உரிமை கழகம் தனது பயம் கலந்த அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் அமெரிக்கா அரசுகளிடம் Dr ஆபியாவைத் தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் உள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பானது பாகிஸ்தானில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தீவிரவாதத்திற்கெதிரான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியை மிக கடினமாக்கி விடுமோ என்றும் அதன் சேர்மன் மேஹ்டி ஹசன் தெரிவித்தார்.

உலகின் பணக்கார நாடாக கத்தார் தேர்வு.


அமெரிக்காவில் வெளிவரும் குளோபல் பினான்ஸ் என்கிற பத்திரிகை ‘உலகின் பணக்கார மற்றும் ஏழை நாடுகளின் பட்டியலை இன்று (செப்டம்பர் 20, 2010) வெளியிட்டது. ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யை பொறுத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகத்தின் முதல் பணக்கார நாடாக கத்தார் தேர்வாகி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமான வருமானம் இயற்கை எரிவாய்வு மூலம் கத்தார் நாட்டிற்க்கு கிடைத்துள்ளது. அந்த நாடு ஒவ்வரு வருடமும் 77 மில்லியன் டன் இயற்கை எரிவைவ்ஐ உற்பத்தி செய்கிறது. கத்தார் நாட்டின் ஜி.டி.பி மதிப்பு 90,149 டாலர்கள். பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு கத்தார் தாண்டி உள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

அடுத்த மூன்றாவது இடத்தை நார்வேயும் (ஜி.டி.பி மதிப்பு 52,964 டாலர்கள்), நான்காம் இடத்தை சிங்கப்பூரும் (ஜி.டி.பி மதிப்பு 52,840 டாலர்கள்), ஐந்தாவது இடத்தை ப்ரூனேவும் (ஜி.டி.பி மதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது. ஆறில் இருந்து பத்தாவது இடங்களை அமேரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்த், நெதர்லாந்த் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பெற்றுள்ளது. அரபு நாட்டை பொறுத்த வரையில் கத்தார் அருகில் எதுவுமே இல்லை. கத்தாரை அடுத்து குவைத் அரபு நாடு பட்டியலில் இருக்கிறது. குவைத் பதினான்காவது இடத்தில இருந்தும் அதன் ஜி.டி.பி மதிப்பு 38.984 டாலர்கள் என்பது கத்தார் மதிப்பிற்கு பாதி கூட இல்லை. 36,167 டாலர்கள் ஜி.டி.பி மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 128 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 3,176 டாலர்கள்), 113 வது இடத்தில உள்ளது (ஜி.டி.பி மதிப்பு 5,026 டாலர்கள்)

முதல் பத்து இடத்தை பிடித்த நாடுகளும் அதன் ஜி.டி.பி மதிப்புகளும்:

1) கத்தார் - 90,149 டாலர்கள்
2) லக்செம்பெர்க் - 79,411 டாலர்கள்
3) நார்வே - 5 2,964 டாலர்கள்
4) சிங்கப்பூர் - 52,840 டாலர்கள்
5) ப்ரூனே - 48,714 டாலர்கள்
6) அமெரிக்கா - 47,702 டாலர்கள்
7) ஹாங்காங் - 44,840 டாலர்கள்
8) சுவிட்சர்லாந்து - 43,903 டாலர்கள்
9) ஹாலந்து - 40,601 டாலர்கள்
10) ஆஸ்த்ரேலியா - 39,841 டாலர்கள்

பாபர் மசூதியை யார் இடித்தது?

(திரு கை.அறிவழகன் அவர்களின் இணையப்பக்கத்திலிருந்து இங்கே இடப்பட்டுள்ளது)

babri_masjid_demolition_20050228

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

கடந்த முறை சென்னையில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை அன்று பூசாரிகள் சகிதம் தீப ஆராதனை, பூஜை என்று அலுவலக நேரம் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மட்டுமில்லை, அங்கிருக்கும், கிறித்துவ, இஸ்லாமிய அரசு அலுவலர்களின் மன உணர்வுகளில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள், இந்தியாவின் எந்த அரசு அலுவலகத்திலும் இஸ்லாமிய சமயச் சடங்குகளோ, கிறித்துவப் பாதிரிமாரின் ஜெபக்கூட்டங்கலோ இதுவரை நடத்தப் பட்டதாகவோ, இனிமேல் நடத்தப்படும் என்றோ எனக்கு நம்பிக்கை இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலக் காவல்துறைத் தலைவர் அலுவலகம் சென்று சில பணிகளுக்காகக் காத்திருந்த போது முகப்பில் பாம்பின் மீது தலை வைத்து பெருமாள் பத்தடி நீளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார், இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள் இயங்குவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயத்தின் சொந்தக்காரர்கள் வரி செலுத்துகிறார்கள். ஒரு மதச் சார்பற்ற நாட்டின் அரசு அலுவலகங்கள் ஒரே ஒரு மதத்தின் சார்பாக இயங்குவதை கண்டும் காணாமல் இருக்கவோ, கடந்து செல்லவோ எனக்கு மனம் வரவில்லை. இதை விடவெல்லாம் விடக் கூத்து கர்நாடக முதல் அமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்தினம் அவருடைய நாற்காலிக்கு ஹோமம் நடத்திப் பூஜை செய்தார்கள், விதான சௌதாவுக்குப் பின்புறம் வாழும் குடிசைகளில் இருக்கும் இரண்டு வேளை உணவற்ற மக்களின் வரிப்பணத்தில் நாற்காலிக்குப் பூஜை செய்து அதை அரசின் செலவுக் கணக்கில் வைக்கிறார்கள் இந்த தேசத்தில்.

image502952x

இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் அல்லது அவர்களின் நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இதை நான் எழுதவில்லை, என் வீட்டில் கூட என் துணைவியார் பூஜை செய்கிறார், அது அவருடைய சொந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தலையிடவோ அல்லது தடுக்கவோ எனக்கு உரிமை இல்லை, வேண்டுமானால் விளக்கிச் சொல்லி அவரை அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளிக் கொண்டு வரலாம். ஆனால் பல சமய மக்கள் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தின் அரசு, பல சமய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாடு இப்படியான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையும், இந்த நாட்டின் தேர்வு செய்யப்பட்ட எந்தத் தலைவரும் கேள்வி கேட்காமல் இருப்பதும் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு காலித்தனம் குற்றம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

இப்படியான லட்சணத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, இந்த வழக்கே ஒரு அர்த்தமற்ற, மக்களை மூடர்களாக்கிய வழக்கு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கரசேவை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி தலைமை ஏற்று ஒரு வரலாற்று நினைவிடத்தை, இன்னொரு சமய நம்பிக்கை கொண்ட மக்களின் வழிபாட்டு இடத்தை ஆணவத்தோடும், மதவெறியோடும் உடைத்து நொறுக்கினார்கள், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலையில் பஜ்ரங் தள் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான வினய் காட்டியாரின் இல்லத்தில் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் சந்திக்கிறார்கள், பிறகு பாபர் மசூதியின் அருகில் கரசேவை செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை அடைகிறார்கள், சிறிது நேரத்தில் மூத்த தலைவர்கள் தொலைவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வெட்கக் கேடான அந்த நிகழ்வை எந்தக் கவலைகளும், குற்ற உணர்வும் இல்லாமல் நாடெங்கும் இருந்து பல்வேறு இந்துத்துவக் கட்சிகளால் அனுப்பப்பட்ட இளைஞர்களும், புரட்சி நாயகர்களும் சேர்ந்து உடைத்து நொறுக்கினார்கள்

r22

அன்றைய உத்திரப் பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், அரசு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அமைதி காக்கும் படி கட்டளை பிறப்பித்து இருந்ததை லிபரான் ஆய்வுக் குழு ஏற்கனவே தெளிவாகச் சொல்லி இருக்கிறது.பல நாட்களாகத் திட்டமிடப்பட்டு மாற்றுச் சமய மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டிடத்தை உடைத்து நொறுக்கியது, தாயும் பிள்ளைக்களுமாகப் பழகிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய, இந்து சமய மக்களின் மனதில் பிளவை உண்டாக்கியது, ஒரு தேசத்தின் இறையாண்மையைக் குலைத்து அதன் அமைதிக்குப் பங்கம் விளைவித்து அழிவுகளை உண்டாக்கியது என்கிற இந்தக் குற்றங்கள் வெகு எளிதாக மன்னிக்கப்படவோ அல்லது மறக்கப்படவோ முடியாதவை. லால் கிருஷ்ண அத்வானியின் அன்றைய பாதுகாப்பு அலுவலராக இருந்த அஞ்சு குப்தா விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கையில், “அன்றைய தினம் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காழ்ப்புணர்வு மிகுந்த சொற்களை, உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசினார்கள்” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் பொறுப்பான தலைவர்களாக இருக்க வேண்டிய கட்சித் தலைவர்களும், அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி, அதிகாரங்களைக் கைப்பற்றத் தேர்வு செய்த ஆயுதம் தான் இந்த பாபர் மசூதி இடிப்பு. இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தெரிந்த கொலைகாரர்கள், இவர்களின் இந்த மத உணர்வால் சீர்குலைந்த அமைதி, கலவரங்களால் இறந்து போன மனிதர்கள், கல்லடிபட்டுக் குருதி சிந்திய குழந்தைகள், இவர்களுக்கான நீதி உறங்கித் தான் கிடக்கிறது, இந்த எளிய மக்களின் வரிப்பணத்தில் உண்டும் கொழுத்தும் திரியும் கொலைகாரர்கள் இசட் பிரிவுப் பாதுகாப்போடு இந்திய தேசத்தில் உலா வருகிறார்கள்.

216a7503a6656ace36db268e7100-grande

பெர்கானாவில் இருந்து மிகப்பெரிய நகரும் பீரங்கிகளோடு 1527 இல் சிட்டகோட் வந்த பாபர் போரில் அன்றைய மன்னன் ராணா சங்ராம சிங்கை வெற்றி கொள்கிறான், பிறகு தனது ஆளுகைக்குக் கீழ் வந்த இப்பகுதி சார்ந்த மண்டலத்தை தனது நம்பிக்கைக்குரிய தளபதி மீர் பக்கி இடம் பொறுப்பளித்து விட்டுச் செல்கிறான், மீர் பக்கி அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு இந்துக் கோவில்களை அழிக்கிறான், அயோத்தியாவில் இருந்த ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் நம்பப்படுகிற, வழிபடப்படுகிற ஒரு கோவிலையும் இடித்துவிட்டு தனது மன்னனின் நினைவாக இந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டி எழுப்பினான் என்று ஒரு சிலரின் வரலாறு சொல்கிறது. இருப்பினும் பாபரால் எழுதப்பட்ட அவரது “பாபர்நாமா” என்கிற தன் வரலாற்று நூலில் இந்த மசூதியைப் பற்றியோ அழிக்கப்பட்டதாக்ச் சொல்லப்படும் ராமரின் நினைவிடத்தையோ பற்றி அவர் எங்கும் குறிப்பிடவில்லை.

2007011415920601

பாபரோ, மீர் பக்கியோ ராமர் நினைவிடத்தை இடித்துத் தள்ளியது சரி என்று நான் சொல்ல வரவில்லை, அன்றைய காலகட்டத்தில் மன்னர்களும், மன்னர்களின் போர்களும் வாழ்க்கை முறையையும், வழிபாட்டு முறைகளையும் நிர்ணயம் செய்தன, இன்றைய இந்தியாவில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் முகலாயர் காலத்தில் மதமாற்றம் செய்து கொண்டவர்கள் அல்லது இஸ்லாமிய நம்பிக்கைகளைத் தழுவிக் கொண்டவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உண்டு, அதற்காக அவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி இந்து மதத்துக்கு மாற்ற வேண்டும் என்று சொல்வதைப் போலத்தான் இருக்கிறது பாபர் மசூதியை இடித்தது. அன்றைய காலத்தில் பார்ப்பனர்கள் தான் வேதங்களை உண்டாக்கினார்கள், வருணப் பிரிவினையை உண்டாக்கினார்கள், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொன்ன என்னுடைய தாத்தனை அவனுடைய சிந்தனைகளை நீ என்னுடைய பீயை அள்ளுவதர்க்குக் கூட என் வீட்டுப் பக்கம் வரக்கூடாது” என்று விரட்டி அடித்தார்கள். அதனால் அவர்களை அடித்து உதைத்து நாட்டை வீட்டுத் துரத்தி விட வேண்டும், அவர்களது இன்றைய வீடுகளை எல்லாம் உடைத்து நொறுக்கி அந்த இடத்தில் கணியன் பூங்குன்றனாரின் நினைவிடத்தை வைத்து விட வேண்டும் நான் சொன்னால் அது எத்தனை முட்டாள் தனம் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது மாதிரித் தான் இந்த பாபர் மசூதிக் கதையும் இருக்கிறது.

எது எப்படியோ, இந்தியாவின் சொத்து சொத்து என்று சொல்லிக் கொள்ளையடைக்கப்படுகிற, உழைப்பு உறிஞ்சப்படுகிற இன்றைய இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே பொதுப் புத்தியை உருவாக்கும் காட்சி ஊடகங்கள் இஸ்லாமிய எதிர்ப்புணர்வையும், இந்து மதச் சார்பையும் நன்றாகவே வளர்த்தெடுக்கவும், அதன் விளைவுகளில் பணம் செய்யவும் காத்துக் கிடக்கிறார்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் என்று அலறிக் கொண்டு ஒரு புறம் காஷ்மீரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவிக் கொண்டிருக்கிறார்கள், காஷ்மீரிகள் இந்தியாவுடனும் சரி, பாகிஸ்தானுடனும் சரி இணைந்து வாழ்வதற்கு விரும்பவில்லை, அவர்களிடம் வாக்கெடுத்து அவர்களை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தான் சிம்லா ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டிருக்கிறது இந்த தர்ம தேசம், நீதியோடும், நேர்மையோடும் காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து விலகி இருப்பதே எஞ்சி இருக்கும் நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும். காஷ்மீரப் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் இந்துக்களின் நலன்கள் பாதிப்படைவதாக சொல்லப்படுவதையும் என்னால் நம்ப இயலவில்லை, நாடெங்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் பல்வேறு அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறைகளின் மேலிருக்கைகளிலும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியவில்லை, கர்நாடக மாநிலத்தில் அன்றைய முதலமைச்சர் தரம் சிங்கால் தொழிற்கல்வி ஒதுக்கீட்டில் ஐந்து சதவீதத்தை காஷ்மீர்ப் பண்டிட்டுகள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பொது இடத்தில் குளறுபடி செய்து கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒதுக்கீடு எந்த அளவுக்குச் சட்டப் பூர்வமானது அல்லது தேவையானது என்பது எனக்குத் தெரியவில்லை, சட்டம் அறிந்தவர்களும், ஊடகவியலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு சிக்கல் இது.

1675860977

பாபர் மசூதித் தீர்ப்பால் பொது அமைதிக்குப் பங்கம் விளையும் என்று இன்றைக்கு இத்தனை சமூக அக்கறையோடு துடிக்கிற இந்தியாவின் நீதித் துறை இடிப்பு தினத்தன்று இப்படி நினைத்திருக்குமேயானால், இரண்டு மூன்று தலைமுறைகளின் மனங்களில் நம்மால் அன்பையும், பிணைப்பையும் உருவாக்கி இருக்க முடியும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்து, பல உயிர்களைக் காவு கொண்ட அரசியல் பெரும்புள்ளிகளின் மீது இத்தனை கண்டிப்பையும், சமூக உணர்வையும் நமது நீதித் துறை காட்டி இருந்தால் இந்த நாடு இன்னும் அமைதியாக வாழ்ந்திருக்கும். வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி டி.வி.சர்மா அக்டோபர் ஒன்றாம் நாள் ஓய்வு பெறப் போகிறார், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்தத் தீர்ப்பு வெளியாக வேண்டும், இல்லையென்றால் சில சட்டச் சிக்கல்கள் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது, அல்லது ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனது தீர்ப்பின் சாரத்தை அவர் உறையிடப்பட்ட தாள்களில் அரசிடம் ஒப்படைக்கக் வேண்டும்.

thumb

இந்த நாட்டில் அனைவரும் அவர்களுக்குரிய நம்பிக்கைகளோடும், வழிபாட்டு முறைகளோடும் அன்போடும், அமைதியோடும் வாழ வேண்டும் என்பதே நமது ஆவல். “கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று அன்றைக்கு என்ன நினைத்துச் சொன்னாரோ தந்தை பெரியார், அது உண்மையாகி விடக் கூடாது என்று அமைதியின் சொரூபமான ராமரையும், எல்லாம் வல்ல அல்லாவையும் உண்மையான மதச்சார்பற்ற ஒரு நாட்டின் குடிமகனாக இருந்து வேண்டுகிறேன். நீங்க எந்த நாடு என்று கேட்பது என் காதில் விழுகிறது,

“தமிழ்” நாடு.

நன்றி : அறிவழகன்

இஸ்ரேலை என்.பி.டியில் கையெழுத்திட கோரும் தீர்மானத்தை முறியடித்தது அமெரிக்கா

வியன்னா,செப்.26:அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தில் இஸ்ரேலை கையெழுத்திடக் கோரும் தீர்மானம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தின் மூலம் ஐ.நா தள்ளுபடிச் செய்தது.

அரபு நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக யூத மையம் கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டது. ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் தோல்வியை தழுவியது.

மேற்காசியாவை அணு ஆயுதமில்லாத பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சியையும், ஃபலஸ்தீன் - இஸ்ரேல் பேச்சுவார்த்தையையும் பாதிக்கும் எனக்கூறி இந்த தீர்மானத்தை எதிர்க்க இதர நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 46 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் கிடைத்தன. ரஷ்யாவும், சீனாவும் தீர்மானத்தை ஆதரித்தன.

மேற்காசியாவில் அணுஆயுதத்தை தன் வசம் கொண்ட ஒரே நாடு இஸ்ரேலாகும். அதேவேளையில் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத ஒரே நாடும் இஸ்ரேலாகும்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அரப் லீக்கின் தலைவர் அம்ரு மூஸா.

மேற்காசியாவை அணுஆயுதமில்லாத பகுதியாக மாற்றும் முயற்சியின் ஒருபகுதியாக இஸ்ரேல் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோருவதில் என்ன தவறு உள்ளது? என்று கேள்வி எழுப்பிய அம்ரு மூஸா, இஸ்ரேலுக்கு மட்டும் சிறப்பு அளிப்பதன் நோக்கம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

சனி, 25 செப்டம்பர், 2010

பாபர்மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு; தள்ளிவைக்கப்படுவது தீர்ப்புமட்டும்தானா...?




வயலிலே விதை விதைத்து, விதை முளைக்க வானம் பார்த்து காத்து நின்ற விவசாயி, பருவமழை பொழியும் நாள்கடந்து விட்டாலும் திடீரென மேக மூட்டம் தென்பட, மழைபொழியும்; வயல் பசுமையாகும்; அதோடு நம்முடைய வாழ்வும் பசுமையாகும் என்று மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில், கருமேகத்தை காற்று எங்கோ ஓட்டிச்செல்ல, இடி விழுந்ததை போல
இதயம் நொறுங்கிய விவசாயியைப் போன்று,

அறுபது ஆண்டு கால இழுவைக்குப்பின் இதோ சட்டத்தின் கதவு எங்களுக்காக திறக்கவிருக்கிறது. அதில் நீதியின் குரலும் எதிரொலிக்கும். அதையொட்டி, எங்களின் இறைவனை தொழும் இடமான பாபரி மஸ்ஜிதில் எங்களின் 'அல்லாஹு அக்பர்' எனும் குரலோசையும் விண்ணை முட்டும் என நம்பிக்கையோடு காத்திருந்த முஸ்லிம்களுக்கு, நாளை வழங்கப்படுவதாக இருந்த பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை செப்டம்பர் 28ம் தேதி வரை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஒரு வகை ஏமாற்றமே.

அறுபது ஆண்டுகாலம் பொருத்த நீங்கள், ஆறு நாட்கள் பொறுக்க மாட்டீர்களா..? எனக் கேட்பதும் எமது காதில் விழுகிறது. அறுபது ஆண்டுகாலம் நடந்தது விசாரணை. அது தள்ளிப் போவதில் கூட ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் தீர்ப்பு தள்ளிப் போவதில்தான் ஒரு சதியோ என சாமான்யர்களின் மனம் கலங்குகிறது.

காரணம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில் பாபர்மஸ்ஜித் தீர்ப்பு வெளியானால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வருமா என்று கவலைப் படவேண்டியது மத்திய அரசு. அத்தகைய மத்திய அரசே, தீர்ப்பை எதிர்கொள்ள, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க பல்லாயிரம் கோடிகளுக்கு பயங்கரமான நவீன ஆயுதமான லத்தி[!] எல்லாம் வாங்கி தயார் நிலையில் இருக்கும் போது,

யாரோ ஒரு ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர், காமன்வெல்த் போட்டி நடக்கும் இந்நேரத்தில் தீர்ப்பு வந்தால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுவை ஏற்க மறுத்தது அலகாபாத் உயர்நீதி நீதிமன்றம். அதோடு, மனுவை தாக்கல் செய்த திரிபாதிக்கு அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்ட திரிபாதியின் அதே மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும், பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பு இடைக்கால தடைவிதிப்பதும் எங்கோ இடிக்கிறதே என்பதுதான் அறியா பொதுஜனங்களின் புலம்பலாக உள்ளது.

எது எப்படியோ, தீர்ப்பை தள்ளிவைத்தால் அதுகூட பரவாயில்லை. ஆனால் நீதியை தள்ளி வைத்து விடாதீர்கள் என்பதுதான் இந்தியாவின் மதசார்பின்மையையும், சட்டத்தையும் மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வேண்டுகோளாகும்.

எங்கள் இறைவா! நாங்கள் யாருக்கும் அநீதியிழைக்காமலும், யாராலும் அநீதியிழைக்கப் படாமலும் காத்தருள்வாயாக!

அயோத்தி தீர்பு விண் தொலைக்காட்சி கலந்துரையாடல் தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

பாபர் மசூதி குறித்து பாசிச ஹிந்துத்துவா இல. கணேசனின் கருத்துக்கு மறுப்பு.


பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி, உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், பாபர் மஸ்ஜித் குறித்து தமது வழக்கமான சங்பரிவார சிந்தனையை 'உரத்த சிந்தனை' என்ற பெயரில் ஒரு நாளிதழில் உளறியுள்ளார் திரு. இல.கணேசன். அந்த கட்டுரையில் அவர் கூறியுள்ள சில முக்கியமான விஷயங்கள் இங்கே அலசப்படுகிறது.

1)"இந்த பா.ஜ.க. என்றால் என்ன?, ஆர்.எஸ்.எஸ். என்றால்? என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்? அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே'' என்கிறார் இல. கணேசன்.

பதில்: ஆர்.எஸ்.எஸ். குறித்தும்- பாஜக குறித்தும், ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பாஜக காரர்களுக்கும் பாடம் நடத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆர்.எஸ்.எஸ். ஆக, ஜன சங்கமாக, பாஜகவாக, வி.ஹெஜ்.பி.யாக, பஜ்ரங் தள் இவ்வாறு இன்னும் பல்வேறு பெயர்களில் ஒரே இந்துத்துவா சிந்தனையோடு வலம்வரும் நீங்கள் யார்..? உங்கள் கொள்கை என்ன என்பதை முஸ்லிம்கள தெளிவாகவே விளங்கியுள்ளோம். மேலும், காந்தி கொலை தொடங்கி, குஜராத் கொலைக்களம் வரை உங்கள் 'கொள்கையின்' செய்திகள் நித்தமும் செய்திகளாக மலர்வதையும் அறிந்தும் வைத்துள்ளோம்.

2) "இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.

பதில்: இது இன்றைக்குத்தான் இல. கணேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததாக்கும்..? முஸ்லிம்களை எதோ வெற்றுக் கிரகவாசிகள் போல், இவரது சகாக்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று பல்வேறு காலகட்டத்தில் முழங்கியபோது இல. கணேசன் அவர்கள எங்கே போயிருந்தார்..?

3) "ஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர்.

பதில்: "அப்பாடா! இப்பவாவது முஸ்லிம்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போரிட்டார்கள் என ஒப்புக் கொண்டீர்களே அதுவரைக்கும் சந்தோசம்.

4) ஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும். ன்கிறார் இல.கணேசன்

ஒருநாளும் தொழுகை நடைபெறவில்லை என்று இல.கணேசன் அவர்கள் கூறுவது ஒரு பருக்கை சோற்றில் ஒரு யானையை மறைப்பதற்கு சமமானதாகும். உங்களால் கள்ளத்தனமாக சிலை வைக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவுத் தொழுகை வரை அங்கே தொழுகை நடந்தது என்பது சிறுபிள்ளையும் அறிந்த விஷயம். மேலும் மசூதிக்க்கான கட்டட அமைப்பும் இல்லையாம்! இதற்கு முன்னால் இவர்தான் சொன்னார். நான் அங்கு போயிருக்கிறேன் வெளியிலிருந்து பார்த்தால் மசூதி போன்று தெரியும் என்று. இப்போது அவரே முரண்படுகிறார். மேலும், ஒரு மசூதி அமையக்கூடாத இடத்தில் பாபர்மஸ்ஜித் அமைந்துவிட்டதாக வருந்துகிறார். முஸ்லிம்களை பொருத்தவரை தொழுவதற்கு தடுக்கப்பட்ட இடங்கள் எதிலும் எந்த காலத்திலும் பள்ளிவாசல் எழுப்பப்படுவதில்லை. அதில் பாபர் மஸ்ஜிதும் விதிவிலக்கல்ல.

5) இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.என்கிறார் இல.கணேசன்.

பதில்: இனி எவரும் பாபர் மசூதி கட்டமுடியாது; மன்மோகன் சிங் கட்டினால், அது மன்மோகன்சிங் மசூதி என்றே அழைக்கப்படும் என்று அங்கலாய்க்கிறார் இல. கணேசன்.
இல. கணேசன் அவர்களே! முஸ்லிம்கள் அந்த இடத்தில் கட்டவிருப்பது பாபருக்கு மசூதியல்ல. அல்லாஹ்விற்கு, அதாவது அல்லாஹ்வை வணங்குவதற்கு ஒரு மசூதி.பாபருக்கு நாங்கள் மசூதி கட்டபோகிறோம் என்று நீங்கள் நினைத்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

6) "பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். என்கிறார் இல.கணேசன்.

பதில்: உங்க சங்கபரிவார் கூட்டம்தான் சொல்கிறது சுதந்திரத்திற்கு முன் அகண்டபாரதம் இருந்தது அதனால் அகண்ட பாரதம் அமைப்போம் என்று. அந்த அகண்ட பாரதத்தில், ஆப்கானிஸ்தான் இருந்தது என்று. அப்படியாயின் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் பிறந்த பாபர் அன்னியர் என்றால், கைபர்-போலன் கனவாய் வழியாக வந்த உங்களுடைய முன்னோர்கள் யார்..? என்று நாங்கள் கேட்கவில்லை. வரலாறு கேட்கிறது.

7) பாபர் இரண்டாவது முறை தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டிய பாபர் மசூதிக் கட்டடம்.இது அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது என்கிறார் கணேசன்.

பதில்: பாபர் போரில் பெற்ற வெற்றியை கொண்டாட அவர் எழுப்பியது நினைவுத் தூண் அல்ல அகற்றுவதற்கு. அவர் அமைத்தது பள்ளிவாசல். பள்ளிவாசலை அடிமைச்சின்னம் என்று வர்ணித்து தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் இல. கணேசன். சரி! பாபரால் அமைக்கப்பட்டது அடிமைச்சின்னம் என்றால் இன்றைக்கு முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்று பகரும் எண்ணற்ற கலைநயமிக்க கட்டடங்கள் உள்ளனவே. அதுபற்றி இல.கணேசனின் நிலை என்ன..? மேலும் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள், பாலங்கள், அணைகள், உள்ளிட்ட அத்துனையையும் அனுபவிக்கும் இல. கணேசன் அதுபற்றிய என்ன நிலையில் இருக்கிறார்..?

8) ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை. என்கிறார் இல. கணேசன்.

பதில்: இல. கணேசன் அவர்களே! எங்கேனும் முகலாயர்கள் உள்ளிட்ட இந்தியாவை ஆண்ட எந்த முஸ்லிம்களுக்காவது சிலை இருந்தால் அதை அகற்றி,நீங்கள் அருங்காட்சியத்தில் வைக்கவேண்டாம். மாறாக நடுத்தெருவில் அடித்து நொறுக்குங்கள். ஒரு முஸ்லிமும் தடுக்கமாட்டோம்.

9) சோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது பின்னர் இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே! அதுபோலத்தானே இதுவும்.

பதில்: மீண்டும் ஒரு சோமநாதபுரமாக பாபர் மஸ்ஜித் இடத்தை மாற்ற, உங்களுக்கு ஆசி வழங்க இப்போது காந்தியும் இல்லை. செய்து முடிக்க நீங்கள் வல்லபாய் படேலும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் அன்றுபோல் இன்று ஏமாளிகளாகவும் இல்லை. இந்தியாவில் கடைசி முஸ்லிம் உயிர் இருக்கும்வரை பாபர் மஸ்ஜித் இடத்தில் நீங்கள் சோமநாதபுர கனவுகான விடமாட்டான் "இன்ஷா அல்லாஹ்".

10) மதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்கிறார் இல. கணேசன்.

பதில்: இதை சொல்வதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கண்ணாடியில் பார்த்திருக்கக் கூடாதா..? மதத்தின் பெயரால் எல்லைமீறி, மஸ்ஜிதை இடித்தது யார்..? ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்தியது யார்..? நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் யார்..? வன்முறையை அரசியலாக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி பதவி சுகத்தை அனுபவித்தது யார்..? அவ்வளவு ஏன்..? சம்மந்தப்பட்ட இந்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விசயத்தில் கூட, முஸ்லிம்கள் ஏகோபித்த குரலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம்; அமைதிகாப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்க, நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும் அது எங்களை கட்டுப்படுத்தாது; நாங்கள் கோயில் கட்டியே தீருவோம் எனக் கொக்கரிப்பது யார்..? எல்லாம் செய்து விட்டு 'தேசபக்தி' முகமூடியை போர்த்திக் கொள்வதில் சங்பரிவாருக்கு நிகர் சங் பரிவார்தான். "எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள் இந்த நாட்டிலே......? இந்திய நாட்டிலே..!

கஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும்: பஸ்வான்

பாட்னா,செப்.24:கஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனவும், அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஆயுதச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் எல்.ஜே.பி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கோரியுள்ளார்.

கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனால், அரசியல் சட்டத்திற்குட்பட்டு முடியுமென்றால் கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பஸ்வான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பிரிவினைவாத தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும்.

போராட்டத்தில் கைதுச் செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலைச்செய்ய வேண்டும். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்த சிபாரிசுகளை அங்கீகரித்து காலதாமதம் இல்லாமல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பஸ்வான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 11க்குப் பிறகு கஷ்மீரில் 110 சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதுக் குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஷ்மீருக்குச் சென்ற அனைத்து கட்சி பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பஸ்வான், ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக் ஆகியோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

டெல்லி ஜூம்மா மசூதி தாக்குதல் தொடர்பான இ-மெயில் நார்வே நாட்டு 'சர்வர்' மூலம் அனுப்பப்பட்டுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி,செப்.25:டெல்லி ஜும்மா மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளது:

இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் ஜிபிஎஸ் வசதியுள்ள செல்போனிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து சில மணி நேரத்துக்குப் பின் வந்த இந்த இ-மெயிலுக்கும் தாக்குதல் சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே தெரிகிறது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.