புதன், 15 செப்டம்பர், 2010

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை; திறக்காத, மு.க.வின் மனக்கதவு!

இந்திய திருநாட்டில் கரசேவை[!] என்ற பெயரில் காடையர்களை கூட்டிச்சென்று, கருணை நாயனாகிய அல்லாஹ்வின் ஆலயத்தை இடித்தவர்களுக்கு ஒரு நாளில் சிறைக்கதவு திறக்கிறது. அவர்கள் துணைப் பிரதமர் பதவி வரைக்கும் அலங்கரிக்க முடிந்தது.

முதல்வரின் ஆசியோடுதான் நாங்கள் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை குஜராத்தில் நிகழ்த்தினோம் என பகிரங்கமாக சொன்னவர்களை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது. ஆசி வழங்கி முஸ்லிம்களின் ஆவியை பறித்தவர் அரியாசனத்தில் முதல்வராய் அமரமுடிகிறது.

மும்பையில் ஒரே நாளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டதற்கு காரணமாக அமைந்த 'தலையங்கம்' தீட்டிய, பிரபல மும்பை அரசியல் தாதா இன்றைக்கும் சுதந்திரமாக 'தலையங்கம் தீட்டமுடிகிறது. அவரை சிறைக்கதவு உள்வாங்க மறுக்கிறது.

கோவை குண்டு வெடிப்புக்கு முன்னால் நடந்த முஸ்லிம் இனப்படுகொலை என்ன ஆனது என்று எவருக்கும் தெரியவில்லை. மேலும், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, பலமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, ஆனந்தாக்களும், .........ரிகளும் சாவகாசமாக வலம் வரமுடிகிறது.

இவ்வாறாக சட்டம் தனது நடு[!] நிலையான கடமையை செய்து கொண்டிருக்கும் நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் பதினான்கு ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் சட்டத்தின் கதவு திறக்கமாட்டேன் என்று சண்டித்தனம் செய்கிறது.

ஆம்! அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களில் ஒரு தொகையினரை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. இந்த மனிதாபிமான விடுதலையில் முஸ்லிம் சிறைவாசிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, இன்னும் பத்து நாளில் தாமாகவே தண்டனை முடிந்து வெளியே வரவிருந்த சில முஸ்லிம்களை விடுவித்துவிட்டு, எதோ முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றியது போன்று நாடகமாடினார் முதல்வர். சரி! இந்த ஆண்டாவது கோவை சிறையில் பதினான்கு ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளில் கணிசமானோரை அண்ணா பிறந்த நாளில் விடுவிப்பார் என்று முஸ்லிம்கள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில்,


பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாள் விழாவையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 70 வயது நிரம்பிய மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு செய்து, கடலூர், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் உள்ள 80 வயது உடைய ஒரு பெண் கைதி உட்பட 13 சிறை வாசிகளை முன் விடுதலை செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து,

மீண்டும் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார். ஏனெனில் நாமறிந்தவரை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சிறைவாசிகளில் 70 வயது நிரம்பியவர் எவரும் இல்லை.

எனவே தொடர்ந்து முஸ்லிம்கள் விஷயத்தில் தொடர் மவுனம் சாதிக்கும் திமுகவின், சில சீட்டுக்களுக்காகவும், வீசும் நோட்டுகளுக்காகவும், அல்லது வேறு சில நோக்கங்களுக்காகவும் இனியும் இந்த முஸ்லிம் சமுதாய இயக்கங்கள், கருணாநிதிக்கு வெண்சாமரம் வீசப்போகிறதா..? அல்லது தனது ஒற்றுமையின் வலிமையை வாக்குகளாக மாற்றி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பப் போகிறதா என்பதை தேர்தல் நேரத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை: