செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பை வெளியிட உத்தரவு கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

டெல்லி,செப்,28:நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி தீர்ப்பை வெளியிட அனுமதி கிடைக்குமா அல்லது தள்ளிப் போடப்படுமா என்பது இன்று தெரிய வரும். இதுத் தொடர்பான அப்பீல் மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.

அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சம். இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க செப்டம்பர் 23ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இருப்பினும் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் அப்பீல் மனுவின் விசாரணை செப்டம்பர் 28ம் தேதியான இன்றைக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்ற இரு நபர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தனது கருத்தை தெரிவிக்கவுள்ளது. மற்ற மனுதாரர்கள் பதில்களைத் தாக்கல் செய்து விட்டனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரியுள்ளன. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று உறுதியான, இறுதியான தீர்ப்பை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: