சனி, 4 செப்டம்பர், 2010

முஸ்லீம் பெற்றோர்களே எச்சரிக்கை!

பிகார் தலைநகர் பாட்னாவில் ஒரு முஸ்லீம் பெண்மணி தன் குழந்தையுடன்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் வேடம்புனைந்து வருமாறு மாணவமணிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடும். அத்தகைய நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ-மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதைக் காண்கிறோம்.

இதை ஒரு மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகத் தான் சம்மந்தப்பட்ட மாணவ-மாணவியரும் அவர்களின் முஸ்லிம் பெற்றோரும் பார்க்கிறார்களேயன்றி, அவற்றை மார்க்கத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதில்லை.

பெற்றோரின் இத்தகைய 'கண்டுகொள்ளாமை' பின்னாளில், நாங்கள் இருப்பதோ இஸ்லாம் மதம்; ஆனால் எம்மதமும் எங்களுக்கு சம்மதமே' என்ற மனநிலைக்கு பிள்ளைகளை கொண்டுவந்து விடுகின்றது.

எனவே பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவிலும் இஸ்லாம் இருக்கிறதா என்பதை கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாக உள்ளது.

ஒரு மண்பாண்டம் செய்பவர் தனது கையில் உள்ள மண்ணை என்ன கோணத்தில் வடிக்க நினைக்கிறாரோ அந்த கோணத்தில் வடிக்கிறார். அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலம் வரை பெற்றோர் கையில் இருக்கும் பச்சை மண் போன்றதுதான்; அதை பெற்றோர் நினைக்கும் வடிவில் உருவாக்கலாம்.

இதைத்தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக கூறினார்கள்; ''ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.''

இதை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். (நூல்:புகாரி எண் 4775)

இறைத்தூதரின் இந்த பொன்மொழி எந்த அளவிற்கு சத்தியமானவை என்பதை நாம் நடைமுறையில் கண்டுவருகிறோம். இந்துக்களால் கடவுள் என கருதப்படும் கிருஷ்ணன் என்பவரது ஜெயந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதையொட்டி நடந்த நிகச்சிக்காக தனது பிள்ளையை கிருஷ்ணராக வேடமிட்டு, ஒரு முஸ்லிம் தாய் அழைத்து செல்வதை கீழே உள்ள படத்தில் பார்க்கிறோம்.

இது போன்று அந்த தாய் செய்வதற்கு அவரது மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால் தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதியதுதான்.

இறைத்தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;

''யார் பிற சமுதாயக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களே!''

எனவே, அன்பான முஸ்லிம் சமுதாயமே! நாம் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் இஸ்லாத்தோடு உரசிப்பார்ப்போம். இறைவனின் அன்பைப் பெறுவோம்.

முகவை எஸ்.அப்பாஸ்

நன்றி: முகவை எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை: