ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கஷ்மீர் மீண்டும் பற்றி எரிகிறது

ஸ்ரீநகர்,செப்.12:சில தினங்கள் நிலவிய அமைதிக்குப் பிறகு கஷ்மீர் பள்ளத்தாக்கு மீண்டும் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது.

ராணுவமும், போலீசும் இணைந்து அப்பாவிகளை சுட்டுக்கொல்வதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை முடிந்து ஸ்ரீநகரிலிருந்து ஊர்வலமாக லால் சவுக்கிற்கு வந்த மக்கள் கூட்டம் க்ரைம் ப்ராஞ்ச் அலுவலகமும் போலீஸ் அவுட்போஸ்ட் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்களையும், வாகனங்களையும் தீக்கிரையாக்கினர்.

ஹூர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர் மீர்வாயிஸ் உமர்ஃபாரூக், ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாஸீன் மாலிக் ஆகியோரின் தலைமையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொண்ட பேரணி நடைபெற்றது.

கடந்த 3 மாதங்களுக்கிடையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 70 பேரைக் கொன்றொழித்த ராணுவ நடவடிக்கையை கண்டித்து லால்சவுக்கிற்கு பேரணி நடத்த ஈத்பெருநாள் தொழுகைக்கு வருகைத்தந்த மீர்வாய்ஸ் ஃபாரூக் அழைப்புவிடுத்தார்.

லால்சவுக்கில் அரைமணிநேரம் கண்டன தர்ணாப் போராட்டம் நடத்தவும் அவர் அழைப்புவிடுத்தார். ஆனால் கண்டனப் போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிரான, சுதந்திரத்தைக் கோரும் கோஷங்களை எழுப்பினர்.

தர்ணாவுக்கு பிறகு அவர்கள் கொதிப்படைந்து கொந்தளிக்க ஆரம்பித்தார்கள். முதன்மை பொறியாளர் அலுவலகத்திற்கு தீவைத்த மக்கள் கூட்டம் அருகிலிலுள்ள க்ரைம்ப்ராஞ்ச் அலுவலகத்தையும் தீவைத்துக் கொளுத்தினர்.

பெரும்பாலும் மரங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் தீ வேகமாக பரவியது. தீயணைப்பு வண்டிகளை மக்கள் கூட்டம் தடுத்ததால் அதிகநேரமாக தீயை அணைக்க இயலவில்லை. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்திய பொழுதிலும் ஆள் அபாயம் ஏற்பட்டதாக் தகவல் இல்லை.

முன்னர் ஹஸ்ரத் பால் மஸ்ஜிதிற்கு வெளியே போலீஸ் அவுட்போஸ்டும், வாகனங்களும் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

ஜஹாங்கீர் சவுக், ரீகல் சவுக் ஆகிய இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மீர்வாய்ஸ் ஃபாரூக்கும், யாஸின் மாலிக்கும்தான் நேற்றைய வன்முறைக்கு காரணமென கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் குற்றஞ்சாட்டுகிறார். போராட்டம் அமைதியாக நடைபெறும் என்று கருதித்தான் போலீஸ் உத்தரவுகளையும் மீறி தான் அனுமதியளித்ததாக உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். வன்முறைகளை தான் ஆதரிக்கவில்லை எனவும், ஆனால் பொதுமக்களின் வழக்கமான பதில்தான் பள்ளத்தாக்கில் பிரகடமானது என மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.

அதேவேளையில், செய்யத் அலிஷா கிலானியின் தலைமையிலான ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் அமைப்பினரும் தலைமறைவாக உள்ள முஸ்லிம் லீக் தலைவர் மஸ்ரத் ஆலமின் ஆட்களும்தான் வன்முறைக்கு காரணம் என போலீஸ் குற்றஞ்சாட்டுகிறது.

இதற்கிடையே, ஆயுதப்படை சட்டத்தை பகுதியளவில் வாபஸ் பெறும் மத்திய அரசின் திட்டம் செல்லுபடியாகாது என மீர்வாய்ஸ் ஃபாரூக் ஈத் பெருநாள் தொழுகை உரையில் குறிப்பிட்டார். "அத்தகைய முயற்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது. அதனைவிட பெரிய காரியங்களைக் குறித்து பேசவேண்டிய நேரமிது. பொருளாதார திட்டங்களோ, தொழில் துவங்க உதவும் திட்டங்களோ கஷ்மீர் பிரச்சனைக்கு பரிகாரமல்ல. சுய நிர்ணய உரிமைக்காகத்தான் கஷ்மீரிகள் உயிரை அர்ப்பணம் செய்கின்றனர்.

டெல்லி அரசு மக்களை தவறாக புரிந்துக்கொள்ள முயற்சி செய்வதுபோல் பள்ளத்தாக்கின் எதிர்ப்பு பாகிஸ்தானின் உருவாக்கம் அல்ல. அது முற்றிலும் உள்நாட்டு போராட்டமாகும்." இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் உரைநிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: