ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கேரளா:கை வெட்டப்பட்ட பேராசிரியர் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ்- குற்றம் செய்துள்ளார் என கல்லூரி நிர்வாகம்

திருவனந்தபுரம்,செப்.5:கேரளாவில் மத உணர்வை களங்கப்படுத்தியதாக கை வெட்டப்பட்ட பேராசிரியர் ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் நேற்று டிஸ்மிஸ் செய்தது.

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழாவில் 'நியூமேன் கல்லூரி' உள்ளது. இதில், மலையாள துறை பேராசிரியராக ஜோசப் இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த தேர்வில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு வினாத்தாள் தயாரித்திருந்தார். இதனைக் கண்டித்து மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையடுத்து, கேள்வித்தாள் தயாரித்த ஜோசப்பை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. மேலும், 2 மாதங்களுக்கு முன்பு சர்ச்சுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோசப்பை ஒரு கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவருடைய ஒரு கை துண்டிக்கப்பட்டது. கேரளாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு இப்போதுதான் மருத்துவமனையில் இருந்து ஜோசப் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் நேற்று அவரை திடீரென டிஸ்மிஸ் செய்தது.

"கேள்வித்தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார்" என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: