புதன், 15 செப்டம்பர், 2010

சவூதியுடன் அமெரிக்கா 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்தம்

வாஷிங்டன்,செப்.14:சவூதி அரேபியாவுடன் 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா.

ஏறத்தாழ 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்திட்டத்தால் தளர்ந்து போயிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு புத்துணர்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்க அரசு.

நவீன தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களும், ஏவுகணை எதிர்ப்பு கருவிகளையும் அமெரிக்கா சவூதிக்கு விற்கும். இந்த ஒப்பந்தைத் தொடர்ந்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பெயரில் சவூதியின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை முன்னேற்றம் அடையச் செய்வதும் இத்திட்டத்தில் உள்ளது.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கெதிரான அரபு சமூகத்தின் ஆதரவை அதிகரிப்பது அமெரிக்காவின் லட்சியமாகும் என அச்செய்திக் கூறுகிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் சில வாரங்களுக்குள் அனுமதி அளிக்கும் எனவும் அப்பத்திரிகைச் செய்திக் கூறுகிறது.

அதேவேளையில், இவ்வொப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுதிலும் போர் விமானங்களில் நீண்டதூர தாக்குதல்களுக்குரிய வசதிகள் இல்லாததால் எதிர்ப்புகள் அடங்கிப்போயின.

84-எஃப் 15 போர் விமானங்கள், இதன் அப்க்ரேட் செய்யப்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்கா சவூதிக்கு விற்கும். ஏற்கனவே, இஸ்ரேல் நவீன தொழில்நுட்பங்கொண்ட எஃப்-35 என்ற விமானங்களுக்காக அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரேடார்களின் கண்ணில் படாமல் தாக்குதல் நடத்தும் தன்மைக் கொண்ட எஃப்-35 போர் விமானம், பெரும்பாலும் ஈரானின் அணு சக்தி செயல்பாடுகளை கண்காணிக்கவேண்டிதான் இஸ்ரேல் வாங்குகிறது.

கருத்துகள் இல்லை: