வியாழன், 9 செப்டம்பர், 2010

அல்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டம்: அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தல்

காபூல்,செப்.9:அல்குர்ஆனின் பிரதியை எரிக்க திட்டமிட்டிருக்கும் அமெரிக்க சர்ச்சின் தீர்மானம் ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ஆப்கானில் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் டேவிட்
பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

காபூலில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமெரிக்காவிற்கு சவாலை உருவாக்கும் என பெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு தினத்தில் அல்குர்ஆனின் பிரதியை எரிக்கப்போவதாக ஃப்ளோரிடாவில் டோவ் வேர்ல்டு அவ்ட்ரீச் செண்டர் தலைவன் பாஸ்டர் டெரி ஜோன்ஸ் அறிவித்திருந்தான்.

அல்குர்ஆனின் பிரதியை எரிப்பதுக் குறித்து அதிக அளவிலான பிரச்சாரத்தை இவன் இணையதளத்தில் நடத்தியிருந்தான். இதற்கெதிராக ஆஃப்கானின் தலைநகரான காபூலில் நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காபூலில் அமெரிக்க தூதரகமும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. "இது ராணுவத்தை ஆபத்தில் சிக்கவைக்கும். இஸ்லாமிய சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயற்சி நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் இச்செயல் சிக்கலை ஏற்படுத்தும்." என அமெரிக்க ஊடகங்களிடம் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

குர்ஆன் முஸ்லிம்களின் புனித வேதமாகும். அதன் பிரதியை எவரேனும் அழிப்பேன் என பிரகடனப்படுத்தினால் அது முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் என ஆஃப்கானில் நேட்டோ பயிற்சிப் பிரிவு தலைவர் லெஃப்டினண்ட் ஜெனரல் வில்லியம் காட்வெல் கூறியுள்ளார்.

காபூலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 500 பேர் இஸ்லாம் நீண்டநாள் வாழட்டும்! அமெரிக்கா அழியட்டும்! உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதுடன் ஜோன்ஸின் உருவப்படத்தை கொளுத்தினர்.

செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்ற இடத்தில் மஸ்ஜித் கட்டுவது அமெரிக்காவில் சர்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலில் இஸ்லாத்திற்கெதிரான புதிய முயற்சி நடந்துக்கொண்டிருக்கிறது.

பெட்ரோஸின் அறிக்கைக்கு பதிலளிக்கையில் ஜோன்ஸ் கூறியதாவது: "இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு நாம் தெளிவான செய்தியை கொடுத்துவருகிறோம். அவர்களின் மிரட்டல்களுக்கு கீழ்படியக்கூடாது." என வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளான்.

ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தினர் குர்ஆனை அவமதித்தது ஈராக்கிலும், ஆப்கானிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது.

இதுத்தொடர்பாக நடைபெற்ற தாக்குதல்களில் ராணுவத்தினர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: