புதன், 1 செப்டம்பர், 2010

பாக்.பெருவெள்ளம்:முஸ்லிம் நாடுகள் 100 கோடி டாலர் நிதியுதவி

இஸ்லாமாபாத்,செப்.1:பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 100 கோடி டாலர் அளிக்க முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ஆர்கனைசேசன் ஆஃப் இஸ்லாமிக் கான்ஃப்ரன்ஸ்(O.I.C) முடிவுச் செய்துள்ளது. இவ்வமைப்பின் தலைவர் இக்மாலுதீன் இஹ்ஸா நோக்லூ இதனை தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண வருகை புரிந்திருந்தார் அவர். நேற்று முன்தினம் தெற்கு சிந்துவில் சில பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தன.இது நிலைமை மேலும் மோசமடையச் செய்தது.இந்த சூழலில்தான் முஸ்லிம் உலகின் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, குவைத், துருக்கி, கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவ நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கும் பணம் நிதியுதவியாக வழங்கப்படும் என இஹ்ஸா நோக்லூ தெரிவித்தார்.

இதற்கிடையே வெள்ளப்பெருக்கு நிவாரண உதவிகள் அரசு சாரா அமைப்புகள் மூலம் வழங்குவதை பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி விமர்சித்துள்ளார். இத்தகைய உதவிகளை அரசுசாரா அமைப்புகள் தவறாக பயன்படுத்தும் என கிலானி சுட்டிக்காட்டினார்.

இரண்டுகோடி மக்களை பாதித்த வெள்ளப்பெருக்கில் 2000 பேர் மரணித்தனர். ஏறத்தாழ ஒருமாதம் ஆகியும் கூட முகாம்களில் துயருறும் மக்களுக்கு இதுவரை நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. முகாமில் நோய் பரவுவதாக துயர்துடைப்பு அமைப்புகள் கூறுகின்றன.

இதற்கிடையேதான் சிந்துமாகாணத்தில் சுஜவான் பிரதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: