வியாழன், 5 நவம்பர், 2015

சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி!!





நம்மில் பெரும்பாலானவர்கள் காந்தியை தீவிரவாதி கோட்சே தனது கைத் துப்பாக்கியால் சுட்ட படுகொலை அந்த ஓர் நிகழ்வினை மட்டும் தான் காந்தியை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி என நினைத்து வருகிறோம். ஆனால், சுதந்திரம் அடைவதற்கு முன்பு கடந்த 1934ஆம் ஆண்டில் இருந்து 1948 ஆண்டு காந்தி கொலை செய்யபட்ட நாள் வரை ஆறு முறை காந்தியை கொல்ல முயற்சிகள் நடந்துள்ளன.


முதல் முயற்சி

ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் மனைவி கஸ்தூரிபாயுடன் மாநகராட்சி அரங்கத்தில் உரையாற்ற சென்றார். அவர்கள் இரண்டு வாகனத்தில் சென்றனர். காந்தியும் அவரது மனைவி கஸ்தூரியும் இருந்த வாகனம் அரங்கத்தை சென்று அடையும் முன்பாகவே, முதலாவதாக சென்ற வாகனம் அரங்கத்தை சென்றடைந்தது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி கையெறிக் குண்டுகள் எறியப்பட்டன. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார் என்று கூறப்படுகிறது. இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டாவது முயற்சி

மே 1944, காந்தி "அகா கான்" அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார் காந்தி. இவர் இருக்கும் இடத்தை அறிந்து நாதுராம் கோட்சே இந்துத்துவா தீவிரவாதிகள் குழுவினர் 20 பேருடன் பேருந்தில் காந்தியின் இருப்பிடத்தை சென்றடைந்தனர்.
மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் அவர்கள் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை, அதற்குள் காந்தியை அவரது தொண்டர்கள் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்.

மூன்றாவது முயற்சி

காந்தி, முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணம் செய்தார். வழியில் ஹிந்து மகா சபாவினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
அந்த இந்துத்துவா தீவிரவாதிகள் கூட்டத்தின் தலைவனாக கோட்சே காந்தியைக் கொல்வதற்கு முயன்றார். ஆனால், அவரை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினாவியதற்கு தீவிரவாதி வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினார். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இந்த விவரங்களை அவர் அளித்துள்ளார்



நான்காவது முயற்சி

ஜூன் 29,1946 ல் காந்திக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்த போது. அந்த ரயில் வண்டி மும்பை அருகேயுள்ள நேரல்-க்கும், கர்ஜட்-க்கும் இடையே தடம் புரண்டது. ரயிலின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப் பாதையின் கடையாணிகளை விசமிகள் சிலர் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தான் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார்.
ஏனென்றால் காந்தியின் சிறப்பு ரயில் மட்டுமே அந்த வழியில் செல்வதாய் இருந்தது. வேறு எந்த ரயில் வண்டியும் அந்த வழியில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது முயற்சி
ஜனவரி 20, 1948, தீவிரவாதிகள் மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக் கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்க வைத்து, அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது.
காந்தியை சுட்டுக் கொல்ல தீவிரவாதி திகம்பர் பக்டேவும் அல்லது தீவிரவாதி சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குஏற்றார் போல செயல்பட வேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் புறப்பட்டு சென்றனர். அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே தீவிரவாதி மத்னலால் பக்வாவால் குண்டு பற்ற வைக்கப்பட்டது எதிர்பாராத விதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது.

ஆறாவது முயற்சி
 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை காந்தியை கொலை செய்ய முயன்று தோற்று, கடைசியாக 6 வது முறையாக ஜனவரி 30, 1948 அன்று காந்தியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல அவரை கிட்ட நெருங்கி தீவிரவாதி நாதுராம் கோட்சே கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தான்.