புதன், 15 செப்டம்பர், 2010

கஷ்மீர்:துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் மரணம்

ஸ்ரீநகர்/புதுடெல்லி,செப்.14:கஷ்மீரில் நேற்று நடந்த போலீஸ்-ராணுவம் துப்பாக்கிச் சூட்டிலும், வன்முறையிலும் 18 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்துவிட்டார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்துதான் புதிய போராட்டம் துவங்கியது. சிறுபான்மை சமூகம் நடத்தும் தனியார் பள்ளிக்கூடம் மற்றும் ஏராளமான அரசு நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவில் இறங்கிய மக்கள் திரள் பாதுகாப்புப் படையினருடன் மோதியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

கல்வீச்சு நடத்திய கூட்டத்தினரை பின் தொடரும் பொழுது வாகனம் ஏறி போலீஸ்காரர் ஒருவர் மரணமடைந்தார்.

பாரமுல்லா மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கூடத்தை மக்கள் கூட்டம் தகர்த்தது. ப்ளாக் டெவலப்மெண்ட் அலுவலகம், நீதிமன்றம், தாசில்தாரின் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம், சுற்றுலாத் துறையின் இரண்டு மையங்கள், போலீஸ் நிலையம் ஆகியன தாக்குதலுக்குள்ளாகின. தொடர்ந்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இங்கு கொல்லப்பட்டனர்.

முதஸ்ஸிர் அஹ்மத் பராய், அப்துல் மஜீத், அப்துல் கய்யூம், ஆஃபாக் அஹ்மத் கான், அஹ்மத் கனாய் ஆகியோர்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். பத்திற்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.

பக்ராம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது வயது தில் அஹ்மத் லோன் என்ற சிறுவனும், குலாம் ரசூல் தாந்த்ரா என்பவரும் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.

மத்திய கஷ்மீரில் புத்காம் நகரத்தில் ஷராரி ஷெரீஃபிற்கு வெளியே அமைதியாக நடந்த பேரணி மீது சி.ஆர்.பி.எஃப் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தானிஷ் நபி என்பவர் கொல்லப்பட்டார். முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டித்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.

புத்காமில் ஓம்புராவில் மக்கள் வசிக்கும் வளாகத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரஃபீக்கா என்ற பெண்மணி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து புத்காம் போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் கல்வீசினர். இதனால் துப்பாக்கியால் போலீஸ் சுட்டதால் இருபது பேருக்கு காயம் ஏற்பட்டது. இங்குதான் கல்வீச்சு நடத்திய மக்கள் கூட்டத்தை பின் தொடரும் வேளையில் தேவேந்தர் சிங் என்ற போலீஸ்காரர் வாகனம் ஏறியதால் மரணமடைந்தார்.

பந்திப்புராவில் அஜாஸ் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிஸார் அஹ்மத் பட் என்பவர் கொல்லப்பட்டார். புல்வாமா மாவட்டத்தில் பாம்போரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் இஜாஸ் அஹ்மத் கொஜ்ரியாவார். பதினைந்துபேருக்கு காயம் ஏற்பட்டது. அனந்த நாக்கில் இரண்டு பேரை போலீஸ் அநியாயமாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.

இதற்கிடையே, அமெரிக்காவில் திருக்குர்ஆனை கிழித்த செய்தியை தொடர்ந்து சர்வதேச செய்தி நிறுவனமான பிரஸ் டி.விக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவில் சிலர் திருக்குர்ஆன் பிரதியை கிழித்தெறிந்ததால் ஏற்பட்ட வன்முறைக்கு இந்தியாவின் அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜெ ரோமர் ஆச்சரியம் தெரிவித்தார். ஆனால், சிறுபான்மை சமூகத்தின் பள்ளிக்கூடத்தின் மீது நடந்த தாக்குதலை ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கண்டித்துள்ளார்.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் சிறுபான்மை சமூகத்தினரின் நிறுவனங்களுக்கு கஷ்மீரிகள் பாதுகாப்புத்தான் அளிக்கவேண்டுமென அவர் கூறினார்.

கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க கூடிய பாதுகாப்பிற்கான அமைச்சரவை முடிவெடுக்காமல் கலைந்தது. பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுல் ஆயுதச்சட்டத்தை பகுதியளவில் குறைப்பதுக் குறித்து விவாதித்தாலும், மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் உருவான சூழலில் தீர்மானம் எடுக்கமுடியாமல் 3 மணிநேரம் நீண்ட கூட்டம் பிரிந்தது.

கஷ்மீர் பிரச்சனையைக் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவானது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: