வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ்…!!

புனித ரமதான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் சிறைக்கைதிகளை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
Bhobal Muslim
போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் சப்-ஜெயிலில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. நோன்பு திறக்கவும்,தொழுகைக்காக ஒழுச் செய்யவும் தண்ணீர் கேட்ட நோன்பாளிகளைத்தான் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

ரமதான் நோன்பையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் கேவலமாக பேசியவாறு தாக்கியுள்ளனர் போலீசார். விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த சிறைக்கைதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட சப்-ஜெயிலில் வைத்துதான் போலீசார் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் லத்தியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது. தண்ணீர் கேட்ட சிறைக்கைதிகளிடம் தண்ணீர் தரமுடியாது எனக்கூறியதுடன் அவர்களின் நம்பிக்கைக் குறித்தும் கேவலமாக பேசியபொழுது அவர்கள் கோபமடைந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை லாக்கப்பில் அடைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களல்லாத சிறைக்கைதிகள் உள்பட 130 பேர் போலீசாரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர்.பத்திரிகையாளர்களை அழைக்கவும், போலீசின் தாக்குதலைக் குறித்து பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிதான் இந்த தர்ணா.

அருண் மாலிக், அமர்சிங் இரண்டு போலீஸ்காரர்கள் ரமதான் நோன்பைக் குறித்தும், இஸ்லாத்தைக் குறித்தும் மோசமாக பேசி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிறைக்கைதிகள் தலையை சுவரில் மோதி இரத்தம் வரவழைத்தனர் என போலீசார் கூறுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பாக போபால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை போலீஸ் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்.

செய்தி : தேஜஸ் மலையாள நாளிதழ்.

கருத்துகள் இல்லை: