புதன், 18 ஆகஸ்ட், 2010

மஃதனி கைது - விமானம் மூலம் பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்

கொல்லம்,ஆக17:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியைக் கைது செய்வது தொடர்பாக கடந்த பத்து நாட்களாக நீடித்து வந்த இழுபறி இன்று பிற்பகலில் முடிவுக்கு வந்தது.அவரை கைது செய்த கேரள போலீஸார், கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைத்தனர். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார் மஃதனி. ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மஃதனியைக் கைது செய்ய டிஎஸ்பி சித்தராமையா தலைமையிலான போலீஸ் படையினர் கொல்லம் வந்து கடந்த ஒரு வாரத்திற்கும மேலாக கைது செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்றுடன் மஃதனியை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென மஃதனிக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் பரவியது. ஆம்புலன்ஸும், டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப் போவதாக செய்திகள் பரவியது.

ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ரத்த மாதிரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினர். தற்போதைக்கு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. ரத்த சோதனைக்குப் பின்னரே முடிவு செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பெங்களூர் இணை ஆணையர் அலோக் குமார், துணை ஆணையர் ஓம்காரய்யா ஆகியோர் கொல்லம் வந்தனர். மாவட்ட எஸ்.பி. ஹர்ஷிதாவை சந்தித்த அவர்கள், மஃதனியைக் கைது செய்ய வேண்டியது அவசியம். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று அவர் சரணடையட்டும் அல்லது நாங்கள் கைது செய்ய வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இனியும் தாமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் மஃதனி. அப்போது அவர் கூறுகையில், நான் சட்டத்தை மதிக்கிறேன். இதனால் கோர்ட்டில் சரணடைவேன் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அன்வருசேரியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் பலத்த இழுபறிக்குப் பின்னர் அவரை கேரள போலீஸார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கர்நாடக தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் கொண்டு சென்றனர் கர்நாடக போலீஸார்.

கருத்துகள் இல்லை: