ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது எப்படி?

இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கான உறுதியான உதாரணம் இதற்கெதிராக மத்திய-மாநில அரசுகள் தீவிர எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் ப.சிதம்பரம் டெல்லியில் 3 நாட்கள் நடைபெறும் போலீஸ்-உளவுத்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் உரைநிகழ்த்தினார்.

இவ்வுரையில் 'காவிப்பயங்கரவாதம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஹிந்துத்துவா அரசியல் கட்டவிழ்த்துவிடும் பயங்கரவாதத்தைக் குறித்த முழுமையான புரிந்துணர்வோடுதான் இவ்வுரையை ப.சிதம்பரம் நிகழ்த்தினார் என்றால், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் இதனை பிரதிபலிக்கவேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பொழுது தேசம் புதியதொரு திசையை பயணிக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படும்.

ஆனால் அவ்வாறு நிகழ்கிறதா? என்றால் நமது பொதுவாழ்க்கையில் ஹிந்துத்துவா சக்திகள் பெற்றுள்ள செல்வாக்கை கவனத்தில் கொண்டால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும்.

'பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாட்டில் முஸ்லிம்களும், ஆதிவாசிகளும் நடத்தும் போராட்டத்திற்கு மட்டுமே சூட்டப்படுவதாகும். இஸ்லாமியத் தீவிரவாதமும், மாவோயிஷ தீவிரவாதமும் தான் நமது தீவிரவாத வேட்டையின் முக்கிய இலக்குகளாக மாறிவிட்டன.

சமீபக்காலத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படுவோரின் மீது இட்டுக்கட்டி சுமத்தப்பட்ட ஏராளமான குண்டுவெடிப்புகளின் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தான் என்ற உண்மை வெளியான பிறகும் அவர்கள் மீது எவ்வித பயன்தரத்தக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்ல, காவி பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கெதிராக தீவிர எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஆவேசத்துடன் ஈடுபட்டு வருகின்றார்கள்.

பா.ஜ.கவின் தலைவர் அத்வானிக்கூட இத்தகைய பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். ஒருபுறம் காவிபயங்கரவாதம் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அதேவேளையில், மறுபுறம் தீவிரவாத எதிர்ப்புப்பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த முகமூடியைத்தான் திறந்துக்காட்ட வேண்டியுள்ளது. காவி பயங்கரவாதத்தைக் குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து உள்ளார்ந்த நேர்மையுடனிருக்குமெனில் மத்திய அரசு துணிந்து ஒரு போராட்டத்திற்கு தயாராகவேண்டும். அது ஏற்படுமா? என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

காவி பயங்கரவாதம் சாதாரணமானது அல்ல.தேசத்தின் அதிகாரப்பூர்வ புலனாய்வு ஏஜன்சிகளிலும், ஹிந்துத்துவா சக்திகளுக்கு வலுமையாக காலூன்ற முடிந்துள்ள சூழலில், குறிப்பாக போலீஸ், ஐ.பி, என்.ஐ.ஏ, எஸ்.ஐ.டி உள்ளிட்ட கட்டமைப்புகளில் ஹிந்துத்துவா சக்திகளின் ஆதிக்கத்தின் விளைவாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இடதுசாரி அரசியல் கூட மிதமான ஹிந்துத்துவா பாணியை கையாளும் வேளையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு தங்களுடைய அஜண்டாக்களை செயல்படுத்த எளிதாகிறது. ஆகவே உள்துறை அமைச்சர், ஒரு மாநாட்டில் சும்மா பெயரளவில் 'காவி பயங்கரவாதம்' என்று கூறினால் மட்டும் போதாது, தான் கூறியவற்றில் உண்மை உண்டு என்பதை நிரூபிக்க அவர் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை புனர் நிர்மாணிக்கவேண்டும்.

விமர்சகன்

கருத்துகள் இல்லை: