ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

சவூதியில் ஃபத்வா வழங்கும் அதிகாரம் உயர் அறிஞர்கள் சபைக்கு மட்டுமே

ரியாத்,ஆக :சவூதி அரேபியாவில் மார்க்கத் தீர்ப்பு(ஃபத்வா) வழங்குவதற்கான அதிகாரம் உயர் அறிஞர்கள் சபைக்கு மட்டுமே அளித்துள்ளதாக அந்நாட்டின் மன்னர் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

மார்க்க அறிவில் போதிய அறிவில்லாத பலரும் ஃபத்வா வெளியிடுவது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதால் இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக நேற்றுமுன் தினம் வெளியிடப்பட்ட அரசுக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி க்ராண்ட் முஃப்திக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அரசக்கட்டளையின் நகல், உயர் அறிஞர்கள் சபை, உள்துறை அமைச்சர், மார்க்க விவகார அமைச்சகம், உயர் கல்வித்துறை, நீதித்துறை, சட்ட அமைச்சகம், கலாச்சார-செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், புனித ஹரமை மேற்பார்வைப் பொறுப்பு வகிக்கும் பிரிவு ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அறிஞர் சபையைத் தவிர வேறு ஏதேனும் நபர் ஃபத்வா வழங்குவதற்கான தகுதி உண்டென்றால் அதனை க்ராண்ட் முஃப்தியை சாட்சியாக வைத்து ஆவணம் மூலம் அறிவித்திருக்க வேண்டும் என்பது சட்டம்.

வணக்கவழிபாடுகள் மற்றும் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகுதி வாய்ந்த அறிஞர்களிடமிருந்து மார்க்கசட்டங்களைக் கேட்டு அறிவது இதில் உட்படாது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: