ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ஊழலை வீழ்த்த சூளுரை ஏற்போம் தமுமுக தலைவர் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரை


தமுமுக தலைமையகத்தில் தமுமுக தலைவர் பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் கொடியேற்றி சுதந்திர தின சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய திருநாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நன்நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் தமுமுக விடுதலை திருநாள் வீர வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. விடுதலை என்ற விருட்சகத்திற்கு நம் முன்னோர்களின் வீர, தீர தியாகங்கள் தான் விதையாக இருந்தது. விடுதலையின் நிழலில் இருக்கும் நாம் அந்த தியாகங்களின் நினைவுகளை போற்ற வேண்டும் அவர்களின் நோக்கம் சிதையாமல் பாதுகாக்க வேண்டும் அடிமை இருளை விரட்டுவதற்க்காவும் தேச விடுதலைக்காவும், தீரர்கள் ஏற்றிய தியாக சுடரில் சாதி மத பேதங்கள் சாம்பலாகி இருக்க வேண்டும்.

மாறாக, அடிமை இருட்டை விரட்டிய நாம் இன்னும் அறியாமை இருட்டை விரட்டவில்லை. அறியாமை என்ற அபாய நோயினால் மக்கள் மனங்களில் மதவெறி, ஜாதி வெறி போன்ற மனித விரோத குணங்கள் குடி கொள்ள தொடங்குகின்றன. மதியை புதைக்கும் மதுவால் மனிதன் போதையின் அடிமையாகி புழுதியில் புரழ்கிறான், லஞ்சமும் ஊழலும் நம் நெஞ்சை பதர வைக்கின்றன.

இன்றைய இந்தியாவில் நாம் காணும் காட்சி ஜனநாயக்கத்தின் உயிர் நாடியான தேர்தலில் கூட ஊழல் புகுந்து உலுக்குகிற கொடுமை.

மனித உரிமைகளின் சமாதி பூமியாக காஷ்மீர், பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்படும் உள்நாட்டு தொழில்கள் இவை எல்லாம் பெற்ற விடுதலையை நாம் போற்றி பேணாததன் விளைவுகள் ஆகும்.

அரிய தியாகங்களின் பயனாய் கிடைத்த விடுதலையின் 64 வது ஆண்டில் நாம் ஏற்க வேண்டிய சூளுரையாவன:- பெற்ற விடுதலையை முறையாக பேணிக் காப்போம். ஊழலை பொது வாழ்விலிருந்து நீக்குவோம். மது மற்றும் மதவெறியினை மாய்த்திடுவோம். வெல்க நாடு! வீர வாழ்த்துகள்! இவ்வாறு அவர் உரையாற்றினார்.

அப்போது துறைமுக பகுதி தமுமுகவினர், தலைமைக் கழக ஊழியர்களும் மக்கள் உரிமை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: