திங்கள், 16 ஆகஸ்ட், 2010

நீதிமன்றத்தில் சரணடைவேன்:அப்துல் நாஸர் மஃதனி

கொல்லம்,ஆக16:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் விரைவில் அருகிலிலுள்ள நீதிமன்றத்தில் சரணடையபோவதாக பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறியுள்ளார்.

போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. சட்ட ஒழுங்கு சீர்குலையாமலிருக்கவே தான் நீதிமன்றத்தில் சரணடைய முடிவெடுத்துள்ளதாக கூறிய மஃதனி கைது தாமதமாவதால் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

"பிரச்சனை ஒரு மதக்கலவரத்தை நோக்கி செல்லாமலிருக்கத்தான் மனிதநேயத்தின் அடிப்படையில் என்னை நேசிக்கும் கேரள சமூகம் கவனமாக இருக்கவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறுபவர்கள்தான்,கோயம்புத்தூர் வழக்கில் என்னைக் கைதுச் செய்யும்பொழுதும் கூறினர். நான் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் வாடிய பொழுது எனது மனைவி விதவைப் போலவும்,எனது பிள்ளைகள் அனாதைகளாகவும் வாழ்ந்தபொழுது எவரையும் அணுகவில்லை.

கர்நாடகா போலீஸிற்கு முன்பு சரணடையலாம் என்றால் அங்குவரை என்னால் செல்லவியலாது. தப்பி ஓட முயற்சித்தார் எனக்கூறி என்னை சுட்டுக்கொல்வார்கள் என அஞ்சுகிறேன்.

முதுகில் குண்டடிப்படுவதை அவமானமாகவும், நெஞ்சில் குண்டடிப்படுவதை அபிமானமாகவும் கருதுகிறவன் நான்.தீரமிக்க ஒரு அரசு தமது நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டிய நேரமிது. இரண்டு அரசாங்கங்கள் தொடர்பான விவகாரத்தில் முதல்வருக்கு எதுவும் செய்யவியலாது." இவ்வாறு கூறிய மஃதனி குர்ஆன் மீது சத்தியம் செய்து நான் நிரபராதி என்று உறுதிப்படக்கூறினார்.

அன்வாருச்சேரியில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு கொண்டுவந்த உணவை தடுத்ததால் அவர்கள் டீ க்குடித்து நோன்பு நோற்றுள்ளதாக அப்துல்நாஸர் ஆவேசத்துடன் கூறினார்.

இதற்கிடையே தெற்கு பகுதி ஐ.ஜி ஹேமச்சந்திரன் தெரிவிக்கையில் கர்நாடகா போலீஸ் கூறும்வேளையில் கைது நடைபெறும் என தெரிவித்தார்.

முன்னர் முதல்வரை முஸ்லிம் மதத்தலைவர்கள் சந்தித்த பிறகு மஃதனியோடு ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை: