செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நிறைகள் உண்டு! ஆனால் குறைகள் ஏராளம்!

மீண்டும் ஒரு சுதந்திர தினத்தை நினைவுக் கூறியுள்ளோம்.உலக நாடுகளுக்கு முன்னால் தலை நிமிர்த்தி நின்றுக் கொண்டு முன்னேற்றத்தின் பாதையில் உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நமது தேசத்தின் இச்சாதனை சாதாரணமானதல்ல.

எல்லாவித சவால்களையும் எதிர்கொண்டு 63-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்றால் இது நிச்சயமாக சாதனைதான்.

பிரச்சனைகளும், சிக்கல்களும், நெருக்கடிகளும் நமக்கு ஏராளம். ஆனாலும் தேசத்தின் அகன்ற பார்வையும், மதசார்பற்றத் தன்மையும், நிலை நிற்பது மகிழ்ச்சிக்குரியதே!

ஆனால் குறைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறிக்கொண்டேயுள்ளார்கள். கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. அத்துடன்,உலகத்தில் மிகவும் அதிகமான ஏழைகளின் நாடு என்ற அவமானத்திலிருந்து தப்புவதற்கு நம்மால் இன்றுவரை முடியவில்லை. மிக அதிகமான குஷ்ட நோயாளிகள், மிக அதிகமான யானைக்கால் நோயாளிகள், மிக அதிகமான கண்பார்வை இழந்தோர், மிக அதிகமான நீரழிவு நோயாளிகள், மிக அதிகமான இதய நோயாளிகள் என பலவற்றிலும் நாம் முன்னணியில்தான் உள்ளோம்.

வளர்ந்துவரும் மக்கள் தொகையை இதற்கு காரணமாக கூறுவர். ஆனால் மக்கள் நல்வாழ்வின் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளே இதற்கு முக்கிய காரணமாகும்.பசியிலும்,பட்டினியிலும் வீழ்ந்து கிடக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கிறது அரசு.

ஆனால் அதிலும் ஊழல். ஊழலும், லஞ்சமும் தாண்டவமாடாத ஒரு துறையாவது இந்தியாவில் உண்டு எனக்கூற நம்மால் இயலுமா?

பசியால் ஒரு பகுதி மக்கள் மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் வேளையில்தான் கிடங்கில் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.

இந்நாட்டின் உச்சநீதிமன்றம் அவ்வுணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடும் அவலம்.

இந்த தேசம் சந்திக்கும் மிக முக்கியமான சவால் மாவோயிஷ தீவிரவாதம் என நமது பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திர தின உரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அந்தத் தீவிரவாதம் வளரக் காரணம் மத்திய, மாநில அரசுகளின் வீழ்ச்சி என்பதை கூற மறந்துவிட்டார்.

இந்த தேசத்தின குடிமக்களில் சிலர் ஆயுதமேந்திப் போராடும் பாதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவர்களின் வீடுகளும், வழிப்பாட்டுத் தலங்களும், விவசாய நிலங்களும் முதலாளித்துவ பயங்கரவாதிகளின் காலடியில் சமர்ப்பித்த பொழுதுதான்.

ஜனநாயகம் என்பது அர்த்தம் பொதிந்ததாக இருக்கவேண்டுமெனில், சிறுபான்மை சமூகத்தினர், பெரும்பான்மை சமூகத்தினரைப் போலவே துல்லிய பாதுகாப்பும்,சம நீதியும், சம பங்களிப்பும் பெற்றவர்களாக வாழும்பொழுது தான்.ஆனால் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கான அக்கிரமங்கள் அதிகமாக அரங்கேற்றப்படுகிறது. போதாக்குறைக்கு, அரசு பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இந்நாட்டின் அதிகாரவர்க்கம் பாசிச, வர்ணாசிரம மயமாகி வருவதையே இது காட்டுகிறது.

துரதிர்ஷ்வசத்தால் இவர்களின் கையில் சட்டமும்,நீதியும் சிக்கித் தவிக்கின்றன. குஜராத், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் சிறுபான்மை சமூகத்திற்கெதிரான இன அழித்தொழிப்புகளை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டு இந்திய தேசத்தின் சட்டம் மற்றும் நீதித்துறைகளுக்கு சவால் விட்டவாறு சுற்றித் திரிகிறது ஒரு கூட்டம்.இவர்களை இதுவரை சிறையிலடைக்க முடியாதது பெரும் அவமானமாகும்.

இந்த தேசத்தை மீண்டும் அந்நியனின் கையில் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஒப்பந்தங்கள் ஆட்சியாளர்களால் செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் சற்று மகிழ்ச்சியடையச் செய்யும் செய்தி என்னவெனில் குஜராத்தில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இன அழித்தொழிப்பை நிறைவேற்ற கட்டளையிட்டவர்களின் கரங்களில் விலங்குகள் போடப்படுவதாகும்.

விமர்சகன்

கருத்துகள் இல்லை: