வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அயோத்தி:பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு: பாதுகாப்பு குறித்து பிரதமர் ஆலோசனை


புதுடெல்லி,ஆக.26:அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதனால் மாநிலத்தில் ஏற்படும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக 50 ஆயிரம் துணை ராணுவப் படை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதற்காக மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் மற்றும் ஏ.கே. அந்தோணி ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். எனினும் இதுகுறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. தீர்ப்பு வெளியாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு படைகளை அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: