சனி, 7 ஆகஸ்ட், 2010

கஷ்மீரில் அமைதியை கொண்டுவர அரசியல் கைதிகள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்க வேண்டும்' - பி.டி.பி கோரிக்கை

ஸ்ரீநகர்,ஆக6:கஷ்மீரில் அமைதியைக் கொண்டு வரவும், கஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அங்கு கைதுசெய்யப்பட்ட அரசியல் தலைவர்கள்,இளைஞர்கள் மற்றும் சயீத் அலி கீலானி போன்ற தலைவர்களையும் விடுதலை செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என மக்கள் ஜனநாயக கட்சி கட்சி கூறியுள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்; "கஷ்மீர் பிரச்சினைகளுக்கு இராணுவ பலத்தை பிரயோகித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயல் முறைகளை அரசு கொண்டுள்ளது. இதன் மூலம் கஷ்மீர் அரசாங்கம் பல அரசியல் தலைவர்களயும் சிறு வயது இளைஞர்களையும் கைது செய்து சிறையில் வைத்துள்ளது. இது அம்மாநில அரசின் தோல்வியைக் காண்பிக்கின்றது .

அரசியல் மாற்றங்களைக் கொண்டு வர தக்கதருணம்
வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ள மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக், முஹமது யாசின், மாலிக் சபீர் அஹமத் சாஹ், நயீம் கான் மற்றும் சபீர் அஹ்மத் மிர் ஆகிய அரசியல் தலைவர்களுக்கு சுதந்திரமான ஒரு அரசியல் தளத்தை அமைத்து அவர்களின் அரசியல் ஈடுபாட்டை கஷ்மீரில் அமைதியைக் கொண்டு வரும் செயல்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் கைது செய்து கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களையும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் செயல்பாடுகளுக்காக விடுதலை செய்யவேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தற்போதைய கஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்" என தான் நம்புவதாக மெஹபூபா குறிப்பிட்டார்.

"மாநிலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்து நடந்து வரும் பூசல்களைக் களையவும் மக்கள் ஜனநாயக கட்சி எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களையும் வலியுறுத்தும்" எனவும் கூறினார்.

"மாநில அரசு மற்றும் அதன் குடிமக்கள் தங்களுக்குள் எத்தகைய வேறுபாடுகளிலும் மற்றும் பிரிவினை செய்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும் தவிர்க்க பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.

பயனுள்ள அரசியல் முயற்சிகளால் மட்டுமே கஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண முடியும் என்பதை மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இது இந்திய அரசாங்கம் விழிப்புடன் செயல்பட்டு பயனுள்ள அரசியல் மாற்றங்களைக் கொண்டும் மனிதநேய அணுகுமுறைகளின் மூலமும் தீர்வு காண தக்க சமயமாகும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 60 சதவிகித கஷ்மீர் மக்கள் வாக்களிப்பில் பங்கு கொண்டனர். தற்போது கஷ்மீர் பிரச்சினையை கையாளும் முறைகளின் மூலம் இது பாதிக்கப்பட கூடாது. இது எதிர்பாரதவிதமாக உள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் இந்த கருத்து தக்க தருணத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது பல உயிர் இழப்புகளும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட காரணமாக அமைந்து விட்டது." என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: