காவி பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவி பயங்கரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 அக்டோபர், 2010

அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!

அயோத்தியில் ராமர் கோயில் ராம் ஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பால் கட்டப்படும் என்ற சாந்த் உச்சதிகார் சமிதியின் அறிவிப்புக்கு நிர்மோகி அகாரா தலைவர் மஹந்த் பாஸ்கர் தாஸ் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் மத அமைப்புமான விசுவ இந்து பரிஷத்தும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தாஸ் எச்சரித்துள்ளார். சாந்த் உச்சதிகார் சமிதி என்ற விசுவ இந்து பரிஷத்தின் சாமியார்கள் பிரிவுதான் ராமர் கோயில் இயக்கதத்தை நடத்தி வருகிறது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்று கூறிய தாஸ், பிரச்சனைக்குரிய இடத்தின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் நிர்மோகி அகாராவுக்கே உரிமை உண்டு என்று கோருவோம் என்றும் அவர் கூறினார். செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தற்போதைய கோயில் ராம் லாலா விராஜ்மான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த அமைப்புக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் ஆர்எஸ்எஸ்சைச் சார்ந்தவர் என்றும் தாஸ் கூறினார்.

பிரச்சனைக்குரிய இந்த இடத்தை உயர் நீதிமன்றம் எந்த தனி நபருக்கோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிற்கோ வழங்கவில்லை என்பதை சங்பரிவாரத்திற்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் தாஸ் கூறினார். மத்திய டுமிற்குக் கீழே உள்ள பகுதிகள் ஹிந்துக்களுக்கு என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரச்சனைக்குரிய நிலத்தின் உரிமை தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொள்ளும் இந்துக்களில் மிகச்சிலரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விசுவ இந்து பரிஷத் ஆகியவை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக ஆய்ந்து கொள்ளட்டும் என்றும் தாஸ் கூறினார்.

ராம் சபுதரா மற்றும் சீதா ரஸோய் ஆகியவை நிர்மோகி அகாராவுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பாகம் ராம் லாலாவுக்கும் பொதுவாக இந்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களிடம் மூன்றில் ஒரு பாகம் உள்ளது. ராம் லாலா விராஜ்மானுக்கு நெருக்கமான இந்துக்கள் நாங்கள்தான் என்பதால், ராமர் கோயிலைக் கட்டும் உரிமை எங்களுக்கே உள்ளது என்றும் தாஸ் கூறியுள்ளார்.

சாந்த் உச்சதிகார் சமிதி மற்றும் ராம் ஜன்மபூமி நியாஸ் கோவா மற்றும் புது டில்லியில் விசுவ இந்து பரிஷத்தால் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவை இரண்டும் ஆர்எஸ்எஸ்ஸின் நிழல் அமைப்புகள் என்று குற்றம் சாட்டிய தாஸ், இத்தகைய குழுக்களை நாங்கள் அங்கீகரிப்பதில்லை. அயோத்தியில் உள்ள மக்களுக்கோ, பொதுவாக இந்துக்களுக்கோ அவர்களால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்றும் தாஸ் கூறினார்.

தன்னுடைய நிலையை அகில இந்திய அகாரா பரிஷத்தின் தலைவர் மஹந்த் கியான் தாஸும் ஆதரிப்பதாக பாஸ்கர தாஸ் கூறினார். இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறாக விங்கிக் கொண்டு ராமர் கோயிலை கடத்திச் செல்ல முயல்கின்றனர். அத்தகையோர் தொடக்கம் முதலே இதற்காக முயன்று கொண்டுள்ளனர். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு புதிய வியாக்கியானங்களை அவர்கள் அளிக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள் என்றும் பாஸ்கர தாஸ் கூறினார்.

சனி, 4 செப்டம்பர், 2010

காவி பயங்கரவாதமும், இரட்டை அளவுகோலும் - அ. மார்க்ஸ்


'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை நமது நாடாளுமன்றத்தைச் சில நாட்களாக அசைத்துப் பார்க்கிறது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்திய இந்த வார்த்தையை நான் படித்தபோது, எனது ஞாபகங்கள் பின்னோக்கிச் சென்றன.

2008 ஜனவரி 25-ம் தேதி, அன்று காலை வழக்கம்போல நாளிதழ்களை விரித்தபோது, ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் இரவு 9 மணி அளவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட செய்திதான் அது! புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஓர் ஆட்டோவிலும் வெடிகுண்டு வெடித்திருந்தது. உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஆனாலும் வகுப்பு முரண் உள்ள ஓர் ஊரில் இப்படியான ஒரு சம்பவம் கவலையை அளித்தது. முந்தைய ஆண்டில் அங்கே இப்படியான மோதலில் ஆறு கொலைகள் நடந்திருந்தன. வெடிகுண்டு சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, தென்காசி சென்றிருந்த உண்மை அறியும் குழு ஒன்றில் பங்குபெற்றிருந்ததால், அங்கு உள்ள சூழலை நான் அறிவேன்.

எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்... ஆனால், 'அதற்காக இப்படிச் செய்யலாமா?' என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம் பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?

அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் 'அபினவ பாரதம்' என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் 'காவி பயங்கரவாதம்' என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி. இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003), ஜல்னா (2004), புர்னா (2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.

ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் 'சிமி' என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.

கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள 'பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்' பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று - ஆர்.எஸ்.எஸ்!

ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மையிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!

'மென்மை இந்துத்துவா' என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!

- அ.மார்க்ஸ்

நன்றி: ஜூனியர் விகடன்

வியாழன், 2 செப்டம்பர், 2010

குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் காவி பயங்கரவாதிகள்தான் உள்ளனர்: ப.சிதம்பரம் உறுதி

புதுடெல்லி,செப்.2:காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகம் மூலம் தேசத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வலதுசாரி மத அடிப்படைவாதிகள்தான் செயல்பட்டுள்ளனர் என்ற செய்தியை அளிப்பதற்கான தனது முயற்சி வெற்றிப்பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையல்ல,மாறாக நான் கூறிய செய்திதான் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின்பொழுது பத்திரிகையாளர்களிடம் உரையாடினார் அவர்.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தை வாபஸ் வாங்க மறுத்த ப.சிதம்பரம் அதனைக் குறித்து மேலும் விளக்கமளித்தார்.

தேசத்தில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வலதுசாரி பயங்கரவாதிகளின் பங்கு சந்தேகிக்கப்பட்ட சூழலில்தான் எனது காவிபயங்கரவாதம் வார்த்தை பிரயோகம் அமைந்தது. மத அடிப்படைவாதிகள் தான் இதன் பின்னணியில் உள்ளனர். இந்த செய்தி ஒரு வார்த்தை பிரயோகத்தின் மூலம் நஷ்டமடைந்துவிடக் கூடாது. ஆனால், எனது காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகம் எனது செய்தியை நன்றாக பிரதிபலித்துள்ளது.

காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்தில் உறுதியாக இருக்கின்றீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ப.சிதம்பரம் இவ்வாறு பதிலளித்தார்.

"காவி பயங்கரவாதம் என்ற வார்த்தைக்கான காப்புரிமையைக் குறித்து உரிமைக் கொண்டாட எனக்கு உரிமை இல்லை. ஏனெனில், இவ்வார்த்தை பிரயோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியது நான் அல்ல. மத்திய அமைச்சர்கள் பலரும் இதற்கு முன்பு இவ்வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு பாடப்புத்தகங்களில் காவிமயம் என்பதுக் குறித்து விவாதம் பாராளுமன்றத்தில் நடந்துள்ளது." என்ற ப.சிதம்பரத்திடம், பத்திரிகையாளர்கள், காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை பிரயோகத்திற்கு காங்கிரஸ் கட்சியிலேயே மாற்றுக் கருத்து ஒலிக்கிறதே என்றுக் கேட்டதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், இவ்விஷயத்தில் கட்சியின் நிலைப்பாடுதான் முக்கியம் என தெரிவித்தார்.

ஏற்கனவே இதனைக்குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் திரிவேதி கருத்துத் தெரிவிக்கையில், காவியல்ல பிரச்சனை, பயங்கரவாதம்தான் பிரச்சனை என்றும், பயங்கரவாதத்திற்கு கறுப்பைத் தவிர வேறு நிறங்கள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ப.சிதம்பரத்தின் கருத்திற்கு திக் விஜய்சிங்க்கும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 28 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்

புதுடெல்லி,ஆக.27:'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை காவிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுவதோடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிவசேனை மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்தப் பிரச்னையில் சிவசேனை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது உள்துறை அமைசச்ர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்தப் பிரச்னை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.மக்களவையில் சிதம்பரத்தின் கருத்தைக் கண்டித்து முதலில் சிவசேனை உறுப்பினர்கள் சந்திரிகாந்த் கைரே, சுபாஷ் வாங்கடே, கணேஷ் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனை கட்சிப் பத்திரிகை சமனாவில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பினர்.

சிவசேனை உறுப்பினர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் குரல் கொடுத்தனர். பாஜக உறுப்பினர்கள், அனந்தகுமார் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

பாஜக மூத்த உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி சிதம்பரம் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். காவி என்பது அமைதியின் அடையாளம். அதை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறினார். இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தக்க பதிலடி கிடைக்கும். பதிலுக்கு நாங்களும் சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறு சொல்லுங்கள் என்றார் அவர்.

அமைச்சர் சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி சிவசேனை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கோரினார். அவருக்கு ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். எனவே அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஸ்வான் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு குற்றம்சாட்டினார். ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர். அப்போது அவையில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்ற பாஸ்வானின் கோரிக்கையை அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.

டெல்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
ஹைதராபாத், அஜ்மீர், கோவா, மாலேகான், மோதாசா (குஜராத்) ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பரவிவரும் காவிப் பயங்கரவாதம்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

புதுடில்லி,ஆக26:டில்லியில் மாநில போலீஸ் டி.ஜி.பி., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசும்போது நாட்டில் காவிப் பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநாட்டில் துவக்க உரையாற்றிய சிதம்பரம்,இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் பயங்கரவாத ஊடுருவுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்க போலீஸ் படை பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறிய‌ மாவோயிஸ்டுகள் அதன் பிறகு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றார்.


கஷ்மீரில் கடந்த ஜூலை மாத இறுதி முதல் நடந்து வந்த வன்முறை சம்பவங்கள் தற்போது கட்டுக்குள் வந்துள்ளன. கஷ்மீர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தவிர அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் உல்பா பயங்கரவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளனர்.

கடந்த 21 மாதங்களில் இந்தியாவில் பெரிய அளவில் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை என்பது இந்தியா பயங்கரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வைத்திருப்பதற்கு ஒரு சான்று என்றார்.

ஆனால் தற்போது நாட்டில் புதிதாக காவி பயங்கரவாதம் பரவி வருகிறது. இது குறித்து மிகுந்த எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.

நேற்று முதல் 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் 2ம் நாளான இன்று பிரத‌மர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். தமிழகம் சார்பில் டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.