சனி, 10 ஜூலை, 2010

மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்


மதுரை மாநகரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுக் கொண்டிருக்கும் அப்பட்டமான பொய் வழக்குகளுக்கு ஒரு அளவே இல்லாமல் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது.
மதுரை மாநகர் செல்லூரில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்த சகோதரர்களான 3 முஸ்லிம் இளைஞர்கள் மீது ஐ.பி.சி 302 செக்ஷனில் மதுரை மாநகர காவல்துறை பொய்வழக்கு பதிவு செய்தது.

அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய நெல்பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த 5.7.10 அன்று தென்காசி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தங்களுடைய வழக்கு வாயிதாவில் ஆஜராகிவிட்டு, காலை உணவு சாப்பிடுவதற்காக நெல்பேட்டை காயிதேமில்லத் பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்கு வந்த அந்த இளைஞர்கள் மீது மதுரை டவுன் காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகுமார் ஆகியோர் பொய் வழக்கு புனைந்துள்ளனர்.

முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய மதுரை மாநகர் காவல்துறை ஒரு சார்பு தன்மையுடனும் பாரபட்சமாகவும் நடந்து முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாளையும் மதுரை வாழ் முஸ்லிம்கள் பாதுகாப்பு உணர்வற்று ஒருவித பயத்துடனேயே கழித்து வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் மீது மதுரை மாநகர காவல்துறை தொடர்ந்து புனைந்து வரும் பொய் வழ்க்கிற்கெதிராக போராட, சமுதாய நலனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெரியவர்கள், முஸ்லிம் இயக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்து "முஸ்லிம்கள்
மீதான பொய் வழக்கிற்கெதிரான கூட்டமைப்பு" என்ற ஒரு பொதுவான கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜம்இய்யிதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(JAQH), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI), இந்திய தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், NCHRO, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) ஆகியவை இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இக்கூட்டமைப்பின் சார்பாக ஏ.சி. வெள்ளைத்துரை மற்றும் விளக்குத்தூண் ஸ்பெஷல் எஸ்.ஐ. முத்துக்குமார் மற்றும் உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும்,மேற்படி பொய் வழக்கை வாபஸ் பெறுமாறும் கோரி இன்று (9/7/10) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 12/7/2010 திங்கட்கிழமை அன்று தென்மண்டல ஐ.ஜி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது எனவும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நஸ்ருதீன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: