ஞாயிறு, 11 ஜூலை, 2010

கஷ்மீரில் ராணுவம் வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-க்குப் பின் பரிசீலனை

கஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்றார் அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா.

கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போராட்டம் வெடித்ததால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தின் உதவியை நாடினார் முதல்வர் ஒமர் அப்துல்லா.

இதையடுத்து கஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரச்னைக்குரிய பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்த மாநில பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஒமர் தலைமையிலான அரசுக்கு கஷ்மீர் சூழலை கையாள திறமை இல்லை என்று விமர்சித்துள்ளது.

இந்நிலையில் ஒமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஒமர் அப்துல்லா, ராணுவத்தை வாபஸ் பெறும் திட்டம் அரசிடம் உள்ளது.இதுகுறித்து ஜூலை 13-ம் தேதிக்குப் பின்னரே பரிசீலிக்கப்படும்.காஷ்மீரில் டோக்ரா ஆட்சிக்கு எதிரான போரில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் ஜூலை 13-ல் அனுசரிக்கப்படவுள்ளது. அதுவரை ராணுவத்தை வாபஸ் பெறுதல் குறித்து முடிவெடுக்க முடியாது என்றார்.

கஷ்மீர் பள்ளத்தாக்கில் விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.நகர்ப்புற பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தவில்லை.

போராட்டக்காரர்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபடவில்லை. கொடி அணி வகுப்பு மட்டுமே நடத்துகிறது என்று ஒமர் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: