வியாழன், 22 ஜூலை, 2010

பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து,செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் கமிட்டி நிர்வாகி பி.அப்துல் ஷரிப் கூறுகையில்; பி.ஜே.பி.யின் முஸ்லிம் மற்றும் தலித் இனத்தவர்களின் மீதான விரோத கொள்கையை தற்போது சி.பி.ஐ.(எம்). கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாகவே, பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளுக்கெதிராக சி.பி.ஐ.(எம்). பல அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தனர்.

யு.டி.எஃப்பின் ஆதரவாளராக எங்கள் இயக்கங்களை சித்தரிப்பது சரியான முடிவுகளை தராது என்று குறிப்பிட்ட அவர்கள், சமுதாயத்தில் தலித், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

கேரளத்தில் சிறுபான்மையினர்கள் அனைவரும் சி.பி.ஐ.(எம்) க்கு எதிராக மாறி உள்ள நிலையில், உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுக்களை பறிக்கவே இச்சதித் திட்டங்கள் அரங்கேருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணத்தினாலேயே,எஸ்.டி.பி.ஐ. கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் போலீசார் தடைவிதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எர்ணாகுளத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கூட்டத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்தது மட்டும்மல்லாமல் போலீஸ் முன்னிலையிலே அச்சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதை நாங்கள் ஏற்று நடந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீசார் இப்படி கலந்து கொண்டது உண்டா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீஸ் பங்கேற்றது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசின் இந்த அராஜகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துக் கூறிய மாநிலத் தலைவர் முஹம்மது ஷரீப், போலீசார்களை பயன்படுத்தி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை அரசு சித்திரவதைக்குள்ளாக்குவதாக தெரிவித்தார்.

இது குறித்து கடுமையாக அரசை எச்சரித்த அவர்,மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: