புதன், 7 ஜூலை, 2010

பீகாரில் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமல்படுத்துகிறார் நிதீஷ்குமார்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் குற்றச்சாட்டு

பாட்னா:ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரகசிய கொள்கைகளை முதல்வர் நிதீஷ்குமார் பீகாரில் அமல்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் துணைத் தலைவர் ஷகீல் அகமது கான், பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் முதல்வர் நிதீஷ்குமார் ஆட்சி நடத்தி வருகிறார்.

தற்போது, அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரகசிய கொள்கைகளை பீகாரில் அமல்படுத்தி முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சியை பீகார் அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

உருது ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'இந்தியா அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் 7,256 வீடுகளைக் கட்டும் திட்டத்தை செயல்படுத்த பீகார் அரசு தவறி விட்டது. இதனால், சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆட்சியில்,35 ஆயிரம் உருது ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால்,அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் காலியாக உள்ள பணியிடங்களில் 5 ஆயிரம் உருது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மேற்கு வங்க அரசும், கேரள அரசும் 400 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளன. ஆனால், பீகார் அரசு இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றார் ஷகீல் அகமது கான்.

கருத்துகள் இல்லை: