திங்கள், 23 மார்ச், 2009

வருண் காந்தி குற்றவாளி ,தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர் -தேர்தல் ஆணையம்


டெல்லி: மத உணர்வைத் தூண்டும் வகையில் வருண் காந்தி பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரை தேர்தலில் நிற்க பாஜக தலைமை அனுமதிக்கக் கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி. உ.பி. மாநிலத்தில் உள்ள தனது தாயாரின் தொகுதியான பிலிபித்தில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிராக, துவேஷமாக பேசினார். கைகளை வெட்டுவேன், தலையை வெட்டுவேன் என்று அவர் பேசியது மத வெறியைத் தூண்டும் வகையில் அமைந்தது.

இதையடுத்து வருண் காந்தி மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின. இதுதொடர்பான சிடிக்களும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தன் மீதான புகார்களை மறுத்தார் வருண் காந்தி. தனது பேச்சு திரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வருண் காந்தி மீதான புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்தது. இதன் இறுதியில், வருண் காந்தி மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியது உண்மையே என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தனது 10 பக்க உத்தரவில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:

இம்மாத தொடக்கத்தில் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் பேசிய பேச்சுகள், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மிகவும் தரக்குறைவான, முற்றிலும் ஏற்க முடியாத பேச்சுகளாக உள்ளன.

மத உணர்வை தூண்டும்வகையில் பேசிய அவர், இந்த தேர்தலில் வேட்பாளராக நிற்க தகுதி அற்றவர்.

இன்னொரு துவேஷப் பேச்சு

இதற்கிடையே, வருண் காந்தி இஸ்லாமியர்களையும், சீக்கியர்களையும் இழிவுபடுத்திப் பேசியதாக இன்னொரு புகார் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.

இந்தப் புகாரையும், முதல் புகாரைக் கொடுத்த பிலிபித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங்கே கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள சிடியில், இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் (வி.எம்.சிங்) போட்டியிடுகிறார். அவர் ஒரு முஸ்லிம் ஏஜெண்ட். அவரை ஆதரிக்கும் இந்துக்கள், இந்து மதத்தின் மாபெரும் துரோகிகள்.

இதுபோல், ரியாஸ் அகமது என்பவரும் போட்டியிடுகிறார். அவர் அப்பட்டமான பாகிஸ்தானி. இத்தகையவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.

எனக்கு முஸ்லிம்களின் ஓட்டு தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் ஓட்டு போடாமல் இருப்பது, மதத்துக்கு துரோகம் செய்வது போன்றது. இந்து ராணுவத்தை அமைத்து, துப்பாக்கி உரிமம் கொடுப்பேன் என்று பேசியுள்ளாராம் வருண் காந்தி.

வருண் காந்தி மீதான இந்த தொடர் புகாரால் அடுத்தடுத்து பரபரப்பு கூடிக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: