புதன், 8 ஏப்ரல், 2009

தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு ஏப்ரல் ஃபூல்?

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல்நாளை முட்டாள்கள் தினமென்று சொல்வர். அதாவது நெருங்கிய உறவினர்,நண்பர்,சகஊழியரை ஏமாற்றி அதனால் அவர்களிடம் ஏற்படும் அதிர்வலைகளைக் கண்டு மகிழும் ஒரு சிற்றின்பதினம்? பிறரின் துன்பத்தில் மகிழ்வதை உளவியல் சாடிஸம்/சாடிஸ்ட் என்று வகைப்படுத்துகிறது. APRIL FOOL பின்னணியையோ அல்லது காரணத்தையோ அலசி ஆராய்வதல்ல எமது நோக்கம்.மாறாக இத்தினத்தன்று செய்வது போல் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முட்டாள்களாக்கப்பட்டுள்ளதைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மனம் திறந்த கருத்துப்பரிமாற்ற முயற்சி.


சிலநாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்ப்ரஸில் "காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்" என்ற பதிவில் துவக்கத்தில் இருந்த தவ்ஹீதுப் பிரச்சார விழிப்புணர்வு இன்று சிலரின் முரண்பட்ட அணுகுமுறைகளால் தடம்புரண்டு, மாற்றார் நகைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்று நான் அவதானித்தவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனது சொல்லாடல் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதோ அல்லது அவர்களுக்கு என்மீது ஏதும் தனிப்பட்ட விரோதமோ தெரியாது பின்னூட்டத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள்.

எந்தகருத்துக்கும் எதிர்கருத்து உண்டென்பதை ஒரு நேர்மையான விமர்சகன் மனதில் வைத்தே விமர்சிக்க வேண்டும்.விமர்சனங்களுக்கான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம் என்பதால் பாராட்டுக்களைவிட எதிர்விமர்சனங்களையே கவனத்தில் கொண்டு முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்.

மக்களவைத் தேர்தல்தேதி அறிவிப்பிற்குமுன்பே மத்திய மாநில அரசியலில் கட்சிகளிடையே கூட்டணி பேரங்களும் திரைமறைவு பரிவர்த்தனைகளும் நடந்து முடிந்துவிட்டன. சென்ற தேர்தலில் ஓரணியிலிருந்தவர்கள் இந்த தேர்தலில் எதிரணியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பேரங்களும் திரைமறைவுப் பரிவர்த்தனைகளும் நடந்து காட்சிகள் மாறக்கூடும்.அரசியலில் நிரந்தர நண்பருமில்லை; நிரந்தரப் பகைவரும் இல்லை என்று பொதுமொழி அனைத்துக் கட்சியினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வுலகமே கதியென்று கட்சிநடத்து தொழில்முறை அரசியல்வாதிகள் எப்படியும் போகட்டும். அவர்களின் கூட்டணி அடுத்த தேர்தல்வரை மட்டுமே. தேவையெனில் கைகொடுப்பதும் தேவையில்லாவிட்டால் காலை வாரிகொள்வதும் அரசியலில் சகஜம். ஆனால் முஸ்லிம் தலைவர்களும் இம்மனநிலைக்கு சமீபகாலங்களில் வந்துள்ளதை எண்ணி வேதனைப் படாமலிருக்க முடியவில்லை. இந்தியளவில் நடக்கும் அவலங்களைவிடவும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் இடையே நடக்கும் உள்குத்துகள்,காலைவாருதல்,பேரங்கள் சகிக்கமுடியவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமுமுக-ததஜ இடையே நடக்கும் பனிப்போர் தமிழக முஸ்லிம்களை எங்குபோய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

1994ல் தமிழக முஸ்லிம்களை மார்க்கம் மற்றும் அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்து கொடிபிடிக்கும் சமுதாயம் மட்டுமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தமுமுகவின் பங்களிப்பு மகத்தானது.வாழ்வுரிமை மாநாடு,எழுச்சி மாநாடு என தமிழக முஸ்லிம்களை ஓரணியில் கொண்டுவந்து சகலதரப்பையும் மலைக்க வைத்தனர்.இதுவரை இருந்த முஸ்லிம் இயக்கங்கள் மார்க்கத்தையோ அல்லது அரசியலையோ மட்டுமே முன்னிலைப் படுத்தி வந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி முஸ்லிம்கள் தனித்தனி பாதையில் பிரிந்து கிடந்தனர்.தமுமுக இவ்விருவரையும் சரியான பாதையில் ஒருங்கிணைத்ததால் அழைத்த போதெல்லாம் முஸ்லிம்கள் குடும்பத்துடன் வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.

பத்தாண்டுகளில் எல்லாமே தலைகீழாக மாறியது! வழக்கமான அரசியல் கட்சிகளைவிடத் தரம் தாழ்ந்து ஒருவரை குற்றஞ்சாட்டிக் கொண்டு பிரிந்து நின்றதோடு, குழிபறிக்கவும் செய்தனர். தமுமுகவில் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சகோதர். பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் சிலர் பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்று செயல்பட்டு வந்தனர். ஒருசில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் சமுதாயப் பணிகளோடு அரசியலிலும் ஈடுபட்டுவந்த தமுமுக திமுகவை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

தமுமுகவின் அரசியல் அணுகுமுறைகளாலும் சமரசங்களாலும் தவ்ஹீதுப் பிரச்சாரத்தை முழுமையாகச் செய்யமுடியவில்லை என்று பிரிந்தவந்த ததஜ,தமுமுகவுக்கு எதிராக அதிமுக ஆதரவுப் பிரச்சாரம் செய்து தவ்ஹீது+அரசியல் என்று நிலை தடுமாறியதிலிருந்து தமிழக முஸ்லிம்கள் பரிதாப நிலையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.

சகோ.பி,ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் எழுச்சியான, வசீகரமான மார்க்கப் பிரச்சாரங்கள் தமிழக முஸ்லிம்களை வெகுவாகக் கவர்ந்தன. இதுவே மார்க்கம் என்று சொன்னதையும் கண்டதையும் கேட்டதையும் செயல்படுத்தியவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராயத் தொடங்குமளவுக்கு வீரியமான தர்க்க ரீதியிலான பேச்சுக்கள் அமைந்தன. இவர் சொல்வதும் நியாயமாகத்தானே இருக்கிறது என்று சிலரை நிரந்தர ஆதரவாளர்களாகவும் மாற்றியது.1430 வருடங்களுக்கு முன்பே இறுதிப்படுத்தப்பட்ட இஸ்லாத்தில் இருந்த/இல்லாத விசயங்களை தர்க்கத்திற்கு உள்ளாக்கியது விழிப்புணர்வா அல்லது வீழ்ச்சியா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இமாம்கள் சொல்லியதெல்லாம் மார்க்கமல்ல என்றவர்கள் பிஜே சொல்வதே மார்க்கம் என்று பேசாமடந்தைகளாகினர். அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாததைச் செய்பவன் வழிகேடர்கள் என்று சொல்லத் தொடங்கி பீஜெ சொல்வதை எதிர்ப்பவரெல்லாம் வழிகேடர் என்று நிலைபிறழ்தனர்.நேருக்குநேர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதியசித்தாந்தம் போதிக்கப்பட்டது.

மார்க்க விசயத்தில் பிஜே சற்றுஅதிகமாகவே கற்றறிந்தவர் என்பதால் சொல்பவை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதில் நியாயமிருக்கிறது.மார்க்கமே பிரதானமென்று போர்க் கொடியேந்தி வெளியேறி, இன்று அரசியலிலும் குழம்பிப்போய் குழப்புவதையும் சகோதரர்கள் நியாயப்படுத்துவதை என்னவென்று சொல்வது?

தவ்ஹீதுப் பிரச்சாரத்திற்கு அரசியல் பின்னணி அவசியம் என்றால் அதை தமுமுகவிலிருந்து தனிக்கொடியுடன் பிரியாமலேயே செய்திருக்கலாமே? ஏப்ரல்-5 கோவையில் நடந்த ததஜ செயற்குழுத் தீர்மானத்தின்படி திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது சரி அல்லது தவறாக இருக்கலாம். (தவ்ஹீதுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?) ஆனால், தனிக்கட்சியாக அரசியல் களம்கண்டுள்ள முன்னாள் சகாக்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து மண்ணைக் கவ்வ வைப்பதாகத் தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமென்ன?தவ்ஹீது மட்டும் என்றுப் பிரிந்து வந்ததிலாவது ஓரளவு நியாயமிருந்தது. தமுமுகவை வீழ்த்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதற்கு எதற்கு தவ்ஹீது ஜமாத்?

"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே;ஆகவே,உங்கள் இருசகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள்மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10) என்ற வேதவரிகளையும்,வெற்றி தோல்விகளைத் தருபவன் அல்லாஹ்வே அவன் நாடியோருக்கு ஆட்சியதிகாரங்களை வழங்குவான் என்பதையும் மறந்து

"மனிதநேயமக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது." என்று தீர்மானம் இயற்றுமளவுக்கு சகமுஸ்லிம் ஓரிருவருடங்கள் முன்புவரை ஒரே தட்டில் உணவருந்தி சுக/துக்கங்களில் பங்கேற்ற முன்னாள் சகாக்களை வீழ்த்தியே தீருவோம் / தீருவேன் என்பதற்கு எந்த ஹதீஸில் முன்மாதிரி உள்ளது என்று யாராவது கேட்டீர்களா? உலகளவில் இருதுருவங்களாகப் பிரிந்துள்ள ஷியாளுக்கும் சுன்னத்திக்களுக்கும்கூட இந்தளவுக்கு கொலைவெறியுடன் மோதவில்லையே!

அல்லாஹ்வின் தீர்மானங்கள் மட்டுமே மாற்றமுடியாதவை. அல்லாஹ்வும் ரஸூலும் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியானவர்களாக இருப்பின் தயவுசெய்து செயற்குழுத் தீர்மானம் #8ஐ மாற்றங்கள்.மாற்ற மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளையை மதிக்கத் தவறியவர்களை அல்லாஹ்வுக்காக வெருத்து ஒதுக்க/ஒதுங்க வேண்டிய தருணம் இதுதான் என்பதை உணராவிடில் நமக்குநாமே ஏப்ரல் ஃபூல் முத்திரை குத்திக் கொண்டுள்ளதாகவே மாற்றார் கருதுவர்.

சில விளக்கங்கள்: இப்பதிவிலும் ததஜவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதால் ததஜ அனுதாபிகள் எதிர்முத்திரை குத்தக்கூடும் என்பதால் நான் இயக்கசார்பற்ற சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகன் மட்டுமே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

தமுமுக குறித்து விமர்சனங்களே இல்லையா? என்ற சந்தேகமும் எழும். தமுமுக சமுதாயப் பணிக்கு என்றும் மமக அரசியலுக்கு என்றும் தெளிவாக இருப்பதால் அது குறித்து எழுதவில்லை.

மேலும் அவர்கள் தவ்ஹீது ஜமாத்தை அழித்தே தீருவோம் என்று எந்தத்தீர்மானமும் இயற்றவில்லை என்பதோடு, ததஜ - தவ்ஹீது பிரச்சாரம் என்று விலகி அரசியல் பிரச்சாரம் செய்வதால் தமுமுகவைவிட ததவே எனது பார்வையில் சற்று விமர்சனத்துக்குறியதாகப்பட்டது. தமுமுக அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தபிறகு ஏதேனும் விமர்சனம் இருந்தால் இன்ஷா அல்லாஹ் அதையும் பதிவு செய்வேன்.

அன்புடன்,
அபூஅஸீலா

கருத்துகள் இல்லை: