புதன், 8 ஏப்ரல், 2009

2009 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்

அபூஅப்தில்லாஹ்

[தேர்தலில் வாக்களிப்பது ஹராம். தாக்கூத்திற்குத் துணை போகும் செயல் என்றும், கிலாஃபத் ஏற்படுத்தினால் மட்டுமே இறையாட்சி மலரும் என்றும் கூறுவது அர்த்தமற்ற வெற்றுக் கூக்குரலாகும். பலன் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்த முழக்கத்தை முழங்குகிறவர்கள் முஸ்லிம்களில் சிலரைக் கவர்ந்து அதன் மூலம் இவ்வுலகில் அற்ப உலக ஆதாயம் அடையலாம். காரணம் வழிகேட்டிற்கு அழைக்கும் ஒவ்வொரு தலைவருக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் சேரத்தான் செய்யும். காரணம் அவர்களின் முயற்சிக்கு ஷைத்தானும் துணை புரிகிறான்.]

நம் தாய்த்திருநாட்டில் 2009 ஏப்ரல் முதல் மே வரை ஐந்து கட்டங்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் 95% இந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களே, ஆரியர்களைப் போல் வந்தேறிகள் அல்ல. அவர்களை விட இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அதிக உரிமை இருக்கிறது.

நமது இந்திய நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு, அந்த அடிப்படையிலேயே பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே முஸ்லிம்கள் அனைவரும் தவறாது தேர்தலில் வாக்களித்து தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களில் சிலர் தேரிதலில் வாக்களிப்பது ஹராம்: தாக்கூத்திற்குத் துணை போவதாகும் எனக் கூறி வருவதாக அறிகிறோம்.

அப்படிப்பட்ட எண்ணம் உடையவர்கள் நம் இந்திய அரசின் சட்டங்களுக்குக் கட்டுப்பாடு நடப்பதும் தாக்கூத்திற்குத் துணை போவதாகச் சொல்ல வேண்டும். அரசு உத்திரவாதமளித்து வெளியிட்டிருக்கும் காகித நோட்டுக்களைக் கொடுத்து பொருள் வாங்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் இந்த நாட்டை விட்டு வெளியேறி இறையாட்சி நடக்கும் ஒரு நாட்டில் போய் குடியேற வேண்டும்.

அதுவும் இன்று சாத்தியமில்லை. உலகில் இன்று முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் ஐம்பது நாடுகளுக்கு அதிகமாக இருந்தாலும், அவற்றில் ஒரு நாட்டில் கூட முழுமையான இறை ஆட்சி இல்லை. மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்ற நிலைதான் காணப்படுகிறது. இந்த நிலையில் எந்த நாட்டில் போய் குடியேறுவார்கள்.

இவர்கள் விரும்பினாலும் அந்நாடுகளில் போய் குடியேற அந்த நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது. 1947-ல் பாக்கிஸ்தான் பிரிந்தபோது இப்போதைய இந்தியாவிலிருந்து அங்குபோய் குடியேறியவர்கள் இன்று வரை இரண்டாம் தர பிரஜையாகத்தான் இருந்து வருகிறார்கள். இதுவே எதார்த்த நிலை.

முஸ்லிம் நாடுகளே ஒன்றுபட்டு இறையாட்சியை நிலைநாட்ட முன் வராதபோது, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இந்திய நாட்டில் அது சாத்தியப்படுமா? மேலும் முஸ்லிம் களில் கணிசமானவர்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்க முன்வந்தால், ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் தருவதாக அல்குர்ஆன் 24:55 கூறுகிறதே அல்லாமல், முஸ்லிம்கள் 3:102, 103 இறைக் கட்டளைப்படி முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து, அல்குர்ஆனைப் பற்றிப் பிடிப்பதைக் கைவிட்டு, பல பிரிவுகளாகப் பிரிந்து, பல தலைவர்களுக்குப் பின்னால் செல்லும் நிலையில் ஆட்சி அதிகாரம் பகல் கனவே.

எனவே தேர்தலில் வாக்களிப்பது ஹராம். தாக்கூத்திற்குத் துணை போகும் செயல் என்றும், கிலாஃபத் ஏற்படுத்தினால் மட்டுமே இறையாட்சி மலரும் என்றும் கூறுவது அர்த்தமற்ற வெற்றுக் கூக்குரலாகும். பலன் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்த முழக்கத்தை முழங்குகிறவர்கள் முஸ்லிம்களில் சிலரைக் கவர்ந்து அதன் மூலம் இவ்வுலகில் அற்ப உலக ஆதாயம் அடையலாம். காரணம் வழிகேட்டிற்கு அழைக்கும் ஒவ்வொரு தலைவருக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் சேரத்தான் செய்யும். காரணம் அவர்களின் முயற்சிக்கு ஷைத்தானும் துணை புரிகிறான்.

நான்கு கலீஃபாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றைக் கவனத்தில் கொள்ளவும். ஆட்சித் தலைவர் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்ற வரையறையை இஸ்லாம் மட்டுப் படுவதில்லை. தனக்குப் பின் ஆட்சி அதிகாரம் யார் வகிப்பது என்பதை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் ஓரிடத்தில் கூடி இருந்த முன்றே முன்று முஹாஜிர்களும், சில அன்சாரிகளும் சேர்ந்து அபூ பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமக்குப் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை கலீஃபாவாக நியமித்தார்கள்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆறு பேரை குறிப்பிட்டு அவர்களுக்குள் ஆலோசித்து அவர்களில் ஒருவர் அலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். எனவே ஆட்சி அதிகாரத்திற்கு ஒருவர் எப்படி வருகிறார் என்பதை இஸ்லாம் மட்டிடவில்லை. ஆனால் யார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் இறையாட்சியை அதாவது குர்ஆன், ஹதீஸ் வழி காட்டல்படி ஆட்சி செய்ய வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் ஐம்பதுக்கு மேல் இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும் ஒரு நாட்டில் கூட இறையாட்சி நடைபெறவில்லை. சவுதி அரேபியாவில் மட்டும் ஒரு சிலவற்றில் இறையாட்சி நிலைநாட்டப்படுகிறது என்று சொல்லலாம்.

இவை அனைத்தையும் ஆராயும்போது ஜனநாயக ஆட்சி முறையை இஸ்லாம் முற்றிலுமாகப் புறக்கணிக்கச் சொல்கிறது என்று கூறுவது தவறு என்பதை விளங்கலாம். குர்ஆன், ஹதீஸ{க்கு முரணில்லாதவற்றில் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை தவறு என்ற சொல்ல முடியாது. எனவே இந்திய நாட்டின் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் இங்கு வேட்பாளர்களாக நிற்பதும், தங்களின் வாக்குச் சீட்டை முறைப்படி செலுத்துவதும் அவசியமாகும்.

இதை மறுப்பவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கு பெரும் துரோகம் இழைக்கிறார்கள். முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோக வழி வகுக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். முஸ்லிம்கள் வாக்களிப்பதோ, வேட்பாளர்களாக நிற்பதோ கூடாது என்று ஒதுங்கும்போது, ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துத் தரவேண்டும் என்ற கட்டாயம் எங்கிருக்கிறது? முஸ்லிம்கள் தங்களின் உரிமைகளை இழந்து நாடற்றவர்கள் என்ற பரிதாப நிலைக்கே தள்ளப் படுவார்கள். இந்திய முஸ்லிம்கள் நிர்பந்த நிலையில் இருந்கிறார்கள். (பார்க்க 6:164, 17:15, 35:18, 39:7, 53:38)

மேலும் வாக்களிப்பதிலும் வேட்பாளர்களாக நிற்பதிலும் பிறருடைய உரிமையை பறிக்கவும் இல்லை.

இவை அனைத்தையும் முறையாகப் பரிசீலிக்கிறவர்கள் முஸ்லிம்கள் கட்டாயம் தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். வேட்பாளர்களாக நிற்க வேண்டும். அவசியம் முஸ்லிம்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றே சொல்ல முடியும். இதற்கு மாற்றுக் கருத்தை உடையவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு தீங்கிழைக்கிறார்கள்: சுயநல நோக்கோடு செயல்படுகிறார்கள் என்ற முடிவுக்கே உண்மை முஸ்லிம்கள் வர முடியும்.

ஆயினும் முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் கடைபிடிக்கும் முறை தவறிய பொய் வாக்குறுதிகள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது. சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்வது. கோவில், சர்ச், தர்கா, மஸ்ஜித் என ஏறி இறங்குவது, பார்ப்பவர்களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுவது, இத்தியாதி இத்தியாதி அநாகரீக செயல்களைச் செய்யாமல், மற்ற வேட்பாளர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிற்க வேண்டும். தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். அடுத்து நமது நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒன்றிணையாவிட்டாலும், முஸ்லிம்கள் என்று வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அடிப்படையிலாவது ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம்களிடையே பல கட்சிகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு தேர்தல் கூட்டணியையாவது ஏற்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும்.

முஸ்லிம்கள் அல்லாத அரசியல் கட்சிகளை நோட்டமிடுங்கள். சிக்கிமில் நீண்ட காலம் ஆட்சிழ புரியும் பிராந்திய கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ், பாஜ.க. கம்யூனிஸ்ட் ஆகிய முன்றும் ஒன்று சேர்கின்றன என்பது பத்திரிகைச் செய்தி. மத வெறியுள்ள இந்துத்துவா பா.ஜ.க.வோடு மதச் சார்பற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணி வைக்கின்றன. ஆத்திக சிந்தனையுடைய கட்சிகள். நாத்திகச் சிந்தனையுடைய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைக்கின்றன. இப்படி நம்பிக்கை, கொள்கை, கோட்பாடு இவை அனைத்தையும் தூக்கி தூரமாக வைத்து விட்டு, காற்றில் பறக்க விட்டு தேர்தல் கூட்டணி ஏற்படுத்துகின்றன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? மக்கள் மன்றத்தில், சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற வேண்டம் என்ற நோக்கமே அன்றி வேறில்லை.

இந்த நிலையில் ஒரே இறைவனை தங்களின் ரப்பாக, ஒரே தூதரை தங்களின் வழிகாட்டி நூலாகவும் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் தங்களின் அற்பமான கருத்து வேறுபாடுகள், போட்டி பொறாமை அனைத்தையும் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு தேர்தல் கூட்டணி ஏற்படுத்தினால் அவர்கள் இழக்கப்போவது என்ன? நிச்சயமாக முஸ்லிம்கள் இழக்கப்போவது ஒன்றுமே இல்லை. ஆனால் இத்தேர்தல் கூட்டணியினால் முஸ்லிம்கள் அடையப் போவதாக பெருத்த ஆதாயமாகும்.

இப்படி சிதறிக்கிடக்கும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காக எத்தனைத் தொகுதிகளை ஒதுக்கித் தரமுடியும் என்று முக்கிய கட்சிகளோடு பேரம் பேச முடியும். அக்கட்சிகளும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட நிலையைக் கண்டு அஞ்சுவார்கள். முஸ்லிம்களை புறந்தள்ளி வெற்றி பெற முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படும். முஸ்லிம்களின் விகிதாச்சாரப்படியுள்ள தொகுதிகளை ஒதுக்கித் தர முன் வருவார்கள்.

முஸ்லிம் கட்சிகள் அனைவரும் தேர்தல் கூட்டணி அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளதால் கணிசமான தொகுதிகள் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும். எந்தக் கட்சி அதிகத் தொகுதிகளை முஸ்லிம்களுக்கு ஒதுக்கித்தர முன் வருகிறதோ, அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டு கணிசமான தொகுதிகளை முஸ்லிம்கள் பெறலாம்.

அதன் பின்னர் முஸ்லிம்களின் தேர்தல் கூட்டணியில் இணைந்திருக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி ஆலோசித்து, பெற்ற தொகுதிகளில் எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என அழான முறையில் முடிவு அதன்படி செயல்படலாம்.

இப்போது எதிர் வருவது மக்கள் மன்றத் தேர்தலாகும் அதற்கு தமிழகத்தில் 39 தொகுதிகள் மட்டுமே. எனவே முஸ்லிம்களின் விகிதாச்சாரப்படி நான்கு அல்லது ஐந்து தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்க முடியாது. எல்லா முஸ்லிம் கட்சிகளிடையேயும்ட அவற்றை பங்கு வைக்க முடியாது. எனவெ நடு நிலையோடு, சுயநலமில்லாமல் சமுதாய நலன் கரதி எந்தெந்த கட்சிகளுக்கு அவற்றைக் கொடுத்தால் சமுதாயத்திற்கு நலம் பயக்கம் என்ற அடிப்படையில் பங்கீடு செய்யலாம்.

நல்லவர்களாகவும், தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும், சேவை மனப்பான்மையுடையவர்களே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அடுத்து வரும் சட்டசபை தேர்தல், மாநராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களில், இப்போது மக்கள் மன்றத் தொகுதிகள் கிடைத்த கட்சிகள், தொகுதி கிடைக்காத மற்ற கட்சிகளும் பங்கும் கொள்ளும் நிலையில் நடுநிலையோடு, சமுதாய நலனை முன்னிருத்தி தொகுதி பங்கீடு செய்து கொண்டால், குறைந்தது தேர்தல்களிலாவது முஸ்லிம்களின் ஒற்றுமை கட்டிக் காக்கப்படும். மற்றவர்களுக்கும் முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணம் பிறக்கும். கருவேப்பிலை போல் முஸ்லிம்களை பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இழந்து, முஸ்லிம்களுக்குரிய பங்கை நியாயமான முறையில் தர முன் வருவார்கள்.

இந்த அழகிய முன்மாதிரியை மற்ற மாநிலங்களின் முஸ்லிம்களும் பின்பற்ற வழி பிறக்கும். அகில இந்திய அளவிலும் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் கட்சிகள் தேர்தல் கூட்டணி மைத்து அதிகமான தொகுதிகளைப் பெற வாய்ப்பு ஏற்படும். இப்படி முஸ்லிம் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து அதிகமான தொகுதிகளைப் பெற வாய்ப்பு ஏற்படும். இப்படி முஸ்லிம் கட்சிகள் தேர்தல் கூட்டணி மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே செல்வந்தர்கள் தேர்தல் நிதி அளிக்க முன்வரவேண்டும். பிரிந்து கிடக்கும் கட்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதால் முஸ்லிம்களுக்கு எவ்வித நலனும் ஏற்படப் போவதில்லை. பிரிவினைக்குத் துணை போன குற்றத்திற்கு செல்வந்தர்கள் ஆளாகலாம்.

இப்படி முஸ்லிம் கட்சிகள் குறைந்த பட்சம் தேர்தல் கூட்டணியாவது வைத்துக் கொண்டு செயல்பட்டால் நாளடைவில் உலக ஆதாயம் கருதி, பிற கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களும் அக்கட்சிகளை விட்டு முஸ்லிம் என்ற நிலையில் முஸ்லிம்ளோடு ஒன்றிணைய முன் வரமுடியும். இன்றைய சூழலில் முஸ்லிம்கள் இப்படியாவது ஒன்றிணைந்து செயல்பட முன்வந்தால், காலம் செல்லச் செல்ல இறை உணர்வுடன் ஒன்றிணைந்து செயல்படும் காலம் கனியலாம். முயற்சி செய்வோம். முடிவு அல்hலாஹ்வின் நாட்டப்படி நடக்கும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு நல்லதை நாட பிரார்த்திப்போம். முயற்சிப்பவர்கள்குக்கு கூலி நிச்சயம் உண்டு.

மேலும் நிங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய நெறிநூல் என்னும்) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாகப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் (ஒருவருக் கொருவர் எதிரிகளாகப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டார்கள் (அதற்கு மன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான். (3:103)

கருத்துகள் இல்லை: