செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியா எரிசக்தி தேவைகளை நழுவவிட்டதா?

ஈரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியுமா?

ஈரானிடமிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தானுக்கு வழங்கும் ஒரு திட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஈரானிய அமைச்சர்கள் தற்போது கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, ஈரான் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடையே எரிவாயு குழாய்திட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கான எரிவாயுவை ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றிருந்தது.

"ஈரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால் பின்னர்கூட இந்தியா மீண்டும் இந்த ஒப்பந்தத்தை எட்ட முடியும்." என்று மத்தியக் கிழக்கு மற்றும் மேற்காசிய வல்லுநர் பேராசிரியர் பி.ஆர்.குமாரஸ்வாமி கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது "இந்தியா,ஈரான் ஆகிய இருநாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தை 2005ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தாலும், எரிவாயு விலை குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் எரிவாயு குழாய் பாகிஸ்தான் ஊடாக வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற பிரச்சினைகளால் இந்த ஒப்பந்தத்தை முழுமைபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்று இந்தியா மீது அமெரிக்கா செலுத்திய நிர்ப்பந்தங்களும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று கூறும் குமாரஸ்வாமி, ஆனால் இதுவே ஒரு பெரிய காரணமல்ல என்று அவர் தெரிவிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த குழாய் பாதைக்கு பாகிஸ்தானால் பாதுகாப்பு கொடுக்கமுடியாத நிலை இருப்பதாக பல மட்டங்களில் கூறப்பட்டு வந்தது.

"விலையைப் பற்றியும், பாதுகாப்பு குறித்தும் ஒரு முடிவு ஏற்படாத நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல" என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

BBC

கருத்துகள் இல்லை: