ஞாயிறு, 6 ஜூன், 2010

பெட் சூறாவளி:ஓமனில் மரண எண்ணிக்கை 12 ஆக உயர்வு. பாகிஸ்தானில் 37 பேர் மரணம்

மஸ்கட்:பெட் சூறாவளிக் காற்றினால் பாதிக்கப்பட்ட ஓமனில் மரண எண்ணிக்கை 12 ஆனது. மரணித்தவர்களில் போலீஸ் அதிகாரி ஒருவர் அடங்குவார். இதனை ஓமன் போலீஸ் தலைவர் மாலிக் பின் சுலைமான் அல் மஃமரி தெரிவித்தார்.

ரஸ்தாக் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தை காப்பாற்றும் வேளையில்தான் போலீஸ் அதிகாரி மரணமடைந்தார். சுமா பகுதியில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். வடகிழக்கு பகுதியில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு எல்லா நிவாரண உதவிகளும் வழங்கும் எனவும், அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அல் மஃமரி தெரிவிக்கிறார்.

சூறாவளியில் சிக்கிய 3 பேரை காணவில்லை. இவர்களை தேடுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஓமனின் கிழக்கு பகுதியில்தான் அதிக அளவில் நாசம் ஏற்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு கோன் புயலிலும் இப்பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டது.

மஸ்கட், தாக்லியா, தாஹிரா, கிழக்கு பகுதிகள் ஆகிய இடங்களில் அதிக அளவிலான நாசம் ஏற்பட்டுள்ளது. மஸ்கட்டில் குர்ரம் வியாபார பகுதியில் ஏராளமான கடைகளும் வீடுகளும் கொண்ட சி.சி.சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வெள்ளம் புகுந்தது.இப்பகுதியில் தண்ணீரின் அளவு இரண்டு அடி உயர்ந்துள்ளது.

பெட் பாகிஸ்தானிற்கு நகருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வசித்து வந்த 60 ஆயிரம் பேரை பாகிஸ்தான் வேறு இடங்களுக்கு மாற்றியது. பாகிஸ்தானில் சூறாவளியினால் 37 பேர் மரணமடைந்துள்ளனர்.

லாகூரில்தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.அங்கு 11 பேர் மரணமடைந்துள்ளனர். அருகிலிலுள்ள மாவட்டமான ஷெய்குபுராவில் ஏழுபேர் மரணமடைந்தனர். 60 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பஞ்சாப் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் 19 பேர் மரணமடைந்தனர். மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக்காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரம் தடைப்பட்டது.

ஓமனில் துயரத்தை ஏற்படுத்திய பெட் சூறாவளி பாகிஸ்தானின் கராச்சிக்கு நகர்வதாக கருதப்படுகிறது.சூறாவளிக் காற்று வீசும் முன்பாகவே பலுசிஸ்தானில் 133 மில்லிமீட்டர் மழைப் பெய்துள்ளது.

2007 ஆம் ஆண்டு ஓமனில் வீசிய கோன் புயலால் 49 பேர் மரணமடைந்தனர். 39 லட்சம் டாலர் நஷ்டம் ஏற்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: