சனி, 19 ஜூன், 2010

நானாவதி கமிஷன் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அஹ்மதாபாத்:குஜராத் கலவரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி கமிஷனின் இன்றைய நிலை என்ன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஜன சங்கர்ஷ் மஞ்ச் (JSM) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா, நீதிபதி அகில் குரேஷி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்பொழுது; "வழக்கு தொடர்பாக சில விவரங்களை பெறவேண்டியுள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி கமிஷனிடமிருந்து விவரங்களைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம். இதற்கு கால அவகாசம் தேவை" என்றார்

அப்போது நானாவதி கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்பொழுது; "கலவரம் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு சம்மன் அனுப்பப் போவதில்லை என்று கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமிஷன் முடிவெடுத்தது. அதுவே இறுதியான முடிவு" என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள் கூறும்பொழுது;"நானாவதி கமிஷனின் பதவிக் காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரை யார்? யாரிடம் விசாரணை நடத்தியுள்ளது? எத்தனை சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன? கமிஷனின் இன்றைய நிலை குறித்து உடனடியாக குஜராத் அரசு விவரங்களை தாக்கல் செய்யவேண்டும்" என்று அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஜூன் 25-ம் தேதி வரை அவர்கள் ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: