திங்கள், 28 ஜூன், 2010

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு: வன்முறை தீ வைப்பு, ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதால் பரபரப்பு

உலகின் முக்கிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 மாநாடு கனடாவில் துவங்கியது. இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது.பன்னாட்டு நிறுவனங்கள்,பாங்குகள் சூறையாடப்பட்டன. இதனால் உலக தலைவர்கள் திணறி போயினர். அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த மாநாடு கூட்டமைப்புக்குட்பட்ட நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நிலை மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கனடாவின் புகழ்பெற்ற டொரன்‌டோவில் கூடியது.பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு கனடாவில் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

மாநாடு நடக்கும் வளாகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மாநாட்டு அரங்கம் உள்ளே நுழைய முயற்சித்தனர். இதனை தடுக்க முற்பட்ட போது போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவருக்கொருவர் மாறி , மாறி தாக்க துவங்கினர். முக்கிய கட்டிடங்கள் சூறையாடப்பட்டது, கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை வீசி கலைத்தனர். ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்த போது அடையாளம் தெரியாத வன்முறைக்கும்பல் இந்த கலவரத்திற்கு காரணமாக அமைந்து விட்டது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநாட்டு அரங்கில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்ற நேரத்தில் நடந்த இந்த வன்முறை அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: