புதன், 9 டிசம்பர், 2009

நரசிம்மராவ் ஆசியோடு பாபர் மசூதியை இடித்தோம்: வேதாந்தி சாமியார் சொல்கிறார்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 60 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.பி.யும், ராம ஜென்மபூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர்.லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்கூட்டியே திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பாரதீய ஜனதா தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் வேதாந்தி சாமியார் மட்டும் திட்டமிட்டுதான் இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்து தள்ளவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து இருந்தோம். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை 1992 நவம்பர் மாதம் 20-ந்தேதி நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6-ந்தேதி பாபர் மசூதியை இடித்து தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்க போகிறோம் என்று அவரிடம் சொல்லி விட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

6-ந்தேதி கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியில் “டூம்” மீது ஏறினார்கள். அப்போது சங்பரிவாரை சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறி செல்லுங்கள். இடித்து தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் வரை அதாவது 7-ந்தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வையிட்டேன்.

இதை சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. முடிந்தால் என்னை தூக்கில் போடுங்கள்.
இவ்வாறு வேதாந்தி சாமியார் கூறினார்

கருத்துகள் இல்லை: