திங்கள், 28 டிசம்பர், 2009

சமச்சீர் பாடத்திட்டம்: மாணவரணி கோரிக்கை


சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தொடர்பாக பாடத் திட்டக்குழு மற்றும கல்வி அமைச்சருக்கு மாநில மாணவரணிச் செயலாளர் எம். ஜைனுல் ஆபிதின் அனுப்பிய கோரிக்கை கடிதம்


தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து சமச்சீர் கல்வி என்ற திட்ட அடிப்படையில் ஒரே கல்வித் திட்டமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது! இதனடிப்படையில் ஸ்டேட் போர்டு, மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் ஆகிய பாடத்திட்டங்களை தவிர்த்து ஒரே பாடத்திட்டமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடங்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரசின் ஊக்ஷளுநு பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. மற்ற முறைகளில் பயிலும் மாணவர்கள் இனி மெட்ரிக், தமிழ் வழி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலலாம்.

இதற்கான 1 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை தயார் செய்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்பாடத்திட்டங்களில் இந்து மதத்தை குறை கூறி எழுதப்பட்டுள்ளதாக சிலர் பிரச்சினையை கிளப்பினர். அவ்வாறு எதுவும் இல்லை என அதிகாரிகளும், கல்வித்துறை அமைச்சரும் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் சமச்சீர் பாடத்திட்ட பகுதிகளை பார்த்து விட்டு தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சமச்சீர் கல்வி பாடத்திட்ட இயக்குனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் வழக்கம் போல 10 ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களில் செய்யுள் பகுதியில் இந்து மற்றும் கிறித்தவ கடவுள் பாடல்களை இடம் பெறச் செய்யும் ஆசிரியர்கள் இஸ்லாமிய வழிபாட்டு பாடல்கள் பகுதியில் வழக்கம் போல சீறாப்புராணம் நூலில் ஏதாவது ஒரு பாடலை எடுத்து போடும் வேலையை செய்து வருகின்றனர். ஆனால் வழிபாட்டு பாடல்கள் பகுதியில் அல்லா என்ற தலைப்பில் திருக்குர்ஆனின் சூரத்துல் இக்லாஸ் எனப்படும் 112 அத்தியாயத்தில் அல்லாஹ்வின் தன்மைகளைப் பற்றி கூறும் அத்தியாயத்தை இடம் பெற செய்ய வேண்டும். இதே போல ஒவ்வோரு வகுப்புகளின் தமிழ் பாட நூல்களின் செய்யுள் பகுதியில் கண்டிப்பாக குறிப்பிட்ட திருக்குர் ஆன் வசனங்களின் தமிழாக்கத்தையும் அல்லது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளையும் மட்டுமே இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் துணைப்பாடங்களில் வரலாறு பகுதியில் பல்வேறு தலைவர்களின் வரலாறுகள் கூறப்படுகின்றன. இஸ்லாமியப் பெரியவர்களை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை.(அப்துல் கலாம் விதிவிலக்கு) எனவே உலக சீர்த்திருத்தவாதிகளிலேயே முதலிடத்தை பெற்ற நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றையும், தமிழகத்தில் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முஸ்லிம் சமூக தலைவர்களின் ஒருவருமான காயிதேமில்லத் அவர்களின் வரலாறையும் இடம் பெற செய்ய வேண்டும்.

மேலும் இஸ்லாமிய வருகை என்ற பகுதியில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி முறை தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லாத நியாயமான வரலாற்றை குறிப்பிட வேண்டும்.

முஸ்லிம் என்பதற்கு பதிலாக முஹம்மதியர் என்ற பதந்தை தயவு செய்து சேர்க்க வேண்டாம் எனவும் இஸ்லாமிய வரலாறு மற்றும் கொள்கைகள் தொடர்பாக தகவல்கள் தேவைப்பட்டால் தமுமுக மாணவரணி தந்த தயாராக இருக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதுவரை புரட்டு வரலாறையே படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டம் மூலமாக உண்மை வரலாற்றை அறியவும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அனைத்து மாணவர்களும் படித்து சமூக நல்லிணக்கம் வளரவும் பாடத்திட்ட குழுவினர் முயற்சிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: