சனி, 5 டிசம்பர், 2009

குணங்குடி ஹனிபா ஜாமீன் வழக்கு தள்ளுபடி! தொடர்ந்து மறுக்கப்படும் நீதி!

1997 ம் வருடம் Dec-6 அன்று நடந்த இரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி அனீபா, அப்துல் ரஹீம், முபாரக் ஆகியோர் கடந்த மாதம் 15.10.09 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்திருந்தனர். கடந்த 11 வருடங்களாக இவ்வழக்கில் ஹனீபா, அப்துல் ரஹீம் ஆகிய இருவரும் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். முபாரக் அலிகான் 9 வருடங்களாக சிறையில் உள்ளார். இவர்கள் மூவரும் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பிணை மனுப் போட்டுள்ளனர். எனினும் வழக்கு விசாரணையின் போது பிணை அளிக்க முடியாது என மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மொத்தம் 151 சாட்சிகளில் குணங்குடி அனீபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய இருவருக்கு எதிரான வெறும் இரண்டு சாட்சிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இருவரும் பிறழ் சாட்சிகளாக(hostile) மாறி விட்டனர். இதனால் இருவருக்கும் எதிராக இவ்வழக்கில் சாட்சிகளே இல்லை என்ற சூழ்நிலையில் விசாரணை நீதிமன்றமே இவர்களை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதே போல முபாரக் அலிகான் என்பவர் கனி என்பவருக்கு பதிலாக தவறுதலாக இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவர். இவருக்கு எதிராக எந்த ஓரு சாட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்மூவரும் தங்களை பிணையிலாவது விடுவிக்க வேண்டும் என்று உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கறிஞர் புகழேந்தி, சங்கரசுப்பு, ஆகியோர் மனுதாரர்களுக்காக ஆஜராகினர். இரண்டு மாத இழுத்தடிப்புக்குப் பின்னர் இம்மனு கடைசியாக 26/11/09 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் இச்செயல் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: