ஞாயிறு, 13 டிசம்பர், 2009

குணங்குடி ஹனீபாவுக்கு பிணை மறுப்பு! நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறுகின்றன?

வழக்கறிஞர் புகழேந்தி, தமிழக மக்கள் உரிமை கழகத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர், சிறைக்கைதிகள் உரிமைப் பேரவையின் தலைவர். ரயில் குண்டு வெடிப்பு மற்றும் பல முஸ்லிம் சிறைவாசி களின் வழக்குகளை நடத்தி வருபவர். குணங்குடி ஹனீபாவின் வழக்கையும் இவர்தான் நடத்தி வருகிறார். அவர் மக்கள் உரிமைக்காக துணை ஆசிரியர் காஞ்சி ஜைனுல் ஆபிதீனுக்கு அளித்த நேர்காணல்.

கேள்வி: குணங்குடி ஹனீபாவின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன?

புகழேந்தி: குணங்குடி ஹனீபா, ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்தபோது கடந்த 15.2.1998 அன்று சிவகங்கை மாவட்டம் அனுமந்தகுடியில் தனது மகளின் திருமண நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டார். ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய் திருந்ததால் தடை செய்யப்பட்ட ஜிஹாத் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட ஹனீபா, தேவகோட்டை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் 1997, டிசம்பர் 6 அன்று மூன்று இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதற்கு காரணம், இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற அமைப்புதான் எனக்கூறி காவல்துறை அந்த சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை தேடிக் கொண்டிருந்தது.

அப்போது சிறையில் இருந்த ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாவையும், பொதுச் செயலாளராக இருந்த அப்துல் ரஹீமையும் இந்த ரயில் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கேள்வி: ரயில் குண்டு வெடிப்பிற்கும் ஹனீபாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையா?

புகழேந்தி: இல்லை. ஹனீபாவைப் பொறுத்தவரை வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது முஸ்லிம் அமைப்புகளிலேயே பெரிதாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமுமுகவை நிறுவியவரும் அவர்தான். சிறந்த மனிதநேயவாதி.

ஹனீபாவின் மீதும் ரஹீமின் மீதும் உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், சென்னையில் ஜிஹாத் கமிட்டி அலுவலகத்தில் அவர்கள், ரயில் குண்டு வைப்பது பற்றி பேசிக் கொண் டிருந்ததாகவும், அப்போது அக் கட்ட டத்தின் உரிமையாளரும், அவரது நண்பரும் அலுவலகத்திற்கு வாடகை வாங்க வரும்போது அதைக் கேட்டு விட்டு போலீசில் சொன்னதாகவும் காவல்துறை ஒரு கதையைப்புனைந்து வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த இரண்டு சாட்சிகளும், அவ்வாறு நடக் கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறி விட்டனர். இவர்களுக்கு எதிராக வேறு சாட்சிகளே இல்லை என்றாகிவிட்ட சூழ்நிலையில், விசாரணை நீதிமன்றமே இவர்களை விடுவித்திருக்க வேண்டும்.

ஆனால் பலமுறை, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறட்டும்; பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் என்று கேட்டபோது, பிணையில் விடுவிக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம்.
கேள்வி: உயர்நீதிமன்றம் ஏன் மனுவைத் தள்ளுபடி செய்தது?

புகழேந்தி: ஏற்கனவே ஒருசில வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம். ஆனால், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இப்போது விடுவிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மனுச் செய்தால் வழக்கு முடி யப்போகிறது; இப்போது எதற்கு ஜாமீன் என்கின்றனர். குற்றச்செயலுக்கான தண்டனை காலத்தைவிட அதிக அளவில் விசாரணை சிறைவாசியாகவே சிறையில் வைப்பது கூடாது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை சுட்டிக் காட்டியும் கூட உயர்நீதிமன்றம் பிணை மறுத்திருப்பது வேதனைக்குரியது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய சுப்பிரமணி என்பவர் காஞ்சி சங்கராச்சாரியரின் தூண்டுதல்தான் இக்கொலை நடந்தது என்று சாட்சி சொன்ன பின்னும் நீதிமன்றம் சங்கராச்சாரியை பிணையில் விட்டது.

கொலைச் சதியில் சங்கராச்சாரியாரோடு ஈடுபட்ட சுப்ரமணியே சதியை ஒத்துக் கொண்டு சாட்சி சொன்ன சூழ்நிலையிலும் சங்கராச்சாரியை விடுவித்த நீதிமன்றம், இந்த வழக்கில், 2007லிலேயே சதியைக் கேட்டதாக சொல்லப்பட்ட இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக (ஐர்ள்ற்ண்ப்ங்) மாறிய பின்னும் சாட்சியமே இல்லாமல் ஹனிபாவை சிறையில் வைத்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும்.

இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான முபாரக் அலிகான் என்பவர் மீது எவ்வித சாட்சிகளும் இல்லை. குற்றச் சாட்டும் இல்லை. கனி என்பவருக்கு பதிலாக தவறுதலாக இவ்வழக்கில் சேர்க் கப்பட்ட இவர் கடந்த 9 வருடங்களாக விசாரணைக் கைதியாக சிறையில் வாடி வருகிறார். இவரது மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறிவருகின்றன என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

கேள்வி: இதுபோன்று வேறு ஏதாவது வழக்குகளில் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா?

புகழேந்தி: ஏராளமான வழக்குகளை என்னால் கூறமுடியும். தமிழக காவல்துறை, முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் செய்து வருகிறது.

கடந்த 27.11.97 அன்று மாலை 5 மணி யளவில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது குணங்குடி ஹனீபா, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே அவர்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என கத்தி கொடுத்ததாகக் கூறி தினமலர் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் ஹனீபா மீது ஓர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக் கொடுத்தாலே அதிகபட்சம் மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த வழக்கிற்காக ஹனீபாவை 12 வருட காலமாக நீதிமன்றத்துக்கு இழுத்தடித்தன காவல்துறையும் நீதிமன்றமும்.

இதைப்போல 19.5.95லில் தன்னை மத்திய சிறையில் தாக்கியதாக ஜோன்ஸ் என்ற காவலர் கொடுத்த புகாரின் பேரில் புகாரி, முஹம்மது அலி, மூஸா, முஹம்மது மூஸா, அஹமது நெய்னா, அபுபக்கர் சித்தீக், அப்துல் கலாம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காவல்துறை இந்த வழக்கில் காவல் நீட்டிப்பு (தங்ம்ஹய்க்) செய்து வருகிறது. நீதிமன்றமும் இதற்கு துணை புரிந்து வருகிறது. இது மட்டுமல்ல, வெளியே இருக்கும் நபர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறை உள்ளே சென்ற பின்னும் பொய் வழக்குகளை போடுகிறது. உதாரணமாக அப்துல்ரஹீம் 11 வருடமாக சிறையில் கைதியாக இருக்கிறார்.
அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல முரளி என்ற ஆய்வாளர் கோவையில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர். இவரை கொலை செய்ய முயன்றதாக அமானி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் அமானி வேறொரு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று உதார ணங்களைக் கூறலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நான் மேலே சொன்ன வழக்குகளை பார்க்கும் போது நீதிமன்றங்கள் முஸ்லிம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டன. இதே போன்று எண்ணற்ற சிறைக் கைதிகளின் உரிமை கள் மறுக்கப்படுகின்றன.

கேள்வி: அநீதி இழைக்கப்பட்ட வர்கள் இழப்பீடு பெறமுடியுமா?

புகழேந்தி: எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் இளமைப் பருவத்தில் சிறை சென்ற நபர் தனது குடும்பத்தைப் பிரிந்து, நோய்வாய்ப்பட்டு, வயது முதிர்ந்து, குற்றவாளி இல்லை என்று வெளியே வரும்போது இந்த நீதிமன்றங்களால் கைதிகளின் இளமையையோ, சிதைந்து போன அவர்களது குடும்பத்தையோ மீட்டுத்தர முடியுமா?

அப்துல் நாசர் மதானி விஷயத்தில் என்ன ஆயிற்று? பலமுறை உயர்நீதிமன் றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பிணை கேட்டார். தனது செயழந்த காலுக்கு மருத்துவ உதவி செய்வதற்காகவாவது பிணை கொடுக்கும்படி பலமுறை நீதி மன்றத்தை நாடினார். ஆனால் எந்த நீதிமன்றமும் அவருக்கு பிணை கூட அளிக்கவில்லை.

இறுதியாக விசாரணை நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன இழப்பீடு தரப்போகின்றன ஜாமீன் மறுத்த நீதிமன்றங்கள். இதேபோன்ற ஒரு நிலைதான் குணங்குடி ஹனீபாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. 11 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக இருக்கும் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படும் போது அவர் இப்போது அடைந்திருக்கும் இழப்புகளை எவராலும் ஈடுசெய்ய இயலாது.

கேள்வி: இவ்வழக்கில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா?

புகழேந்தி: போகலாம். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். முஸ்லிம் கைதிகள் அனைவருமே ஏழ்மையான குடும் பத்தைச்சார்ந்தவர்கள். அவர்களது குடும்பமே சிதைந்து போயிருப்பதால் இந்த வழக்கை நடத்துவதற்கே சக்தியற்றவர்களாய் உள்ளனர். கணவரை இழந்த மனைவிகள், பாசத்துக்கு ஏங்கும் பிள்ளை கள், வயதான பெற்றோர்கள் லி இதுதான் அவர்களது குடும்ப நிலை. இந்த நிலையில் அவர்கள் விசாரணை நீதிமன் றங்களில் வழக்குகளை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: குணங்குடி ஹனீபா எப்போது வெளியில் வரமுடியும்?

புகழேந்தி: இந்த வழக்கு எப்போது முடிகிறதோ அப்போதுதான். தாமதிக் கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டார். குணங்குடி ஹனீபா விஷயத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு முடிந்துவிடும் என அரசுத் தரப்பு சொல்லுகிறது. இதைத் தான் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: இதுபோன்ற அநீதிகளைத் தடுக்க என்னதான் வழி?

புகழேந்தி: பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்காக பல முஸ்லிம் இளைஞர்கள் முன்வந்தார்கள். இதன் விளைவாக அவர்களில் பலர் இன்று ஆயுள் கைதிகளாக, விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடிவருகின்ற னர். அவர்களை விடுவிக்க முஸ்லிம் சமுதாய அமைப்புகள் போராட முன்வரவேண்டும். அண்ணா பிறந்த நாளையொட்டி வருடாவருடம் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்ட போது 10 வருடம் சிறைத் தண்டனை அனு பவித்த பாஷா போன்ற பல முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த அநீதிக்கெதிராக எங்கள் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். ஏராளமான த.மு.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஆனால் இது போதாது. முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வீரியமாகப் போராட முன் வராதது வருத்தமளிக்கிறது.

இவர்களது விடுதலைக்காக அரசை பணியவைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அவர்களது வழக்குக்கான பொருளாதார உதவிகள், குடும்பத்திற்கான உதவிகளையாவது செய்யலாம். சிறைக்கு நேரடியாகச் சென்று அவர்களது குறைகளை அறியலாம்.

மேலும் முஸ்லிம் இளைஞர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றவும் முன்வர வேண்டும். இதன்மூலம் சமுதாயத்திற்கு எதிரான பொய் வழக்குகள், மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை: