குணங்குடி ஹனீபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குணங்குடி ஹனீபா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2010

எல்லோரும் ஒன்றுபட முயற்சி செய்வேன்! மக்கள் உரிமைக்கு குணங்குடி ஹனீபா சிறப்பு பேட்டி

தமுமுகவின் நிறுவனத் தலைவர் சகோ.குணங்குடி ஹனீபா அவர்கள் நீண்டகால சிறைவாசத்திற்கு பின்னால் தனது இல்லத்தில் மகிழ்ச்சியாக இருக் கிறார். உடல் நலிவுற்று இருந்தாலும் உள்ளத்தால் உற்சாகமாக இருந்தார். அவர் மக்கள் உரிமைக்கு மனம்திறந்து அளித்த பேட்டியை வெளியிடுகிறோம். (ஆர்)
கேள்வி : உங்கள் ஆரம்பகால பொது வாழக்கைப் பற்றி கூறுங்கள்.

குணங்குடி ஹனீபா : அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தொழிற்சங்கச் செயலாளராக எனது சமூக பொதுப்பணிகள் தொடங்கியது. அதன்பிறகு 1984ஆம் ஆண்டு தமுமுகவை நான் தொடங்கி எனது குடும்ப உறுப்பினர்களை அதில் இணைத்து அதன்மூலமாக முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவைகளில் தனி இடஒதுக்கீடு கிடைத்திடவும் மற்றும் அனைத்து சமூக மக்களின் அடிப்படை உரிமைகளை அரசிடம் பெற்றி டவும் திராவிடர் கழகம், தேவர் பேரவை, வன்னியர் சங்கம் உள் ளிட்ட அனைத்து சமூக அமைப் புகளோடும் சேர்ந்து சமூகப்பணி கள் செய்துவந்தேன்.

கேள்வி : முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெறவேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது?

குணங்குடி ஹனீபா : திராவி டர் கழகம் நடத்தக்கூடிய இட ஒதுக்கீடு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதன் அடிப்படையி லும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1920ஆம் ஆண்டு இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக் கீடு பெற்ற வரலாறுகளைப் படித்தும் அந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

கேள்வி : டாக்டர் ராமதாஸ், பழநி பாபா, டாக்டர் சேப்பன் ஆகியோரோடு உங்களுடைய கடந்தகால அனுபவம் பற்றி கூறுங்களேன்...

குணங்குடி ஹனீபா : வன்னி யர் சங்கம் தலைமையில் பிற்படுத்தப்பட்ட கூட்டமைப்பு ஒன்று இருந்தது. த.மு.மு.க. அந்தக் கூட்டமைப்பில் இருந்தது. அவர்கள் என்னை பாமகவின் பொருளாளராக அறிவித்து 1996 வரை அதன் தமிழகப் பொரு ளாளராக எனது பணிகள் தொ டர்ந்தது. மருத்துவர் ராமதாஸ் அவர்களும், பாமகவின் அனை த்து நிர்வாகிகளும் என் மீது அன்பு செலுத்தினார்கள். சமு தாயப் போராளி பழநிபாபா அவர்கள், மருத்துவர் அய்யா அவர்களை விமர்சனம் செய் ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அது சம்பந்தமாக பழநிபாபா அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அப்போது பழநிபாபா அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார்கள். பாபா அவர்கள் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் மருத்துவர் அய்யா அவர்களைப் பற்றி நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். மருத்துவரை நான் விமர்சனம் செய்வதில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவரங்களை மருத்துவர் அய்யா அவரிடம் தெரிவித்தேன். அதன் பிறகு மருத்துவர் அய்யா, பாமக பொதுச் செயலாளர் தலித் எழில்மலை ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று சமு தாயப் போராளி பழநிபாபா அவர்களை நலன் விசாரித்து ஆறுதல் சொன்னார்கள். அன்று முதல் பாபா படுகொலை செய்யப்படும் வரை எனக்கும் பாபாவுக்கும் நட்பு தொடர்ந்தது. அப்போது என்னுடைய அடிப் படைத் தேவைகளுக்கு மருத் துவர் அய்யா தெரிவித்து பழநி பாபா அவர்கள் எனக்கு உதவி செய்துள்ளார்கள். சமூகப் பிரச்சி னைகளுக்கு போராடுகின்ற போது டாக்டர் சேப்பன் அவர்கள் ஊக்கப்படுத்துவார்கள். அதன் அடிப்படையில் டாக்டர் அம்பேத் கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் அவர்களின் தலை மையிலான இந்தியக் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் டாக்டர். சேப் பன், சக்திதாசன், பெரியவர் இளையபெருமாள் போன்ற சமூக ஊழியர்களிடம் எனக்கு நல்ல நட்பு இருந்தது.

பாபா அகில இந்திய ஜிஹாத் கமிட்டி தலைவராகவும், நான் பாமக பொருளாளராகவும் பொ து மேடைகள் மூலமாக மட்டுமே இணைந்து சமூதாயப் பணி கள் செய்தது மறக்க முடியாத நிகழ்வுகளாகும். இன்று தமிழக த்தில் சமுதாய மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் வீதிக்கு வந்து போராடு கிறார்கள். சமுதாய மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இறை வன் பழநி பாபா அவர்கள் மூலம் வழங்கியது என்பது என் கருத்து.

கேள்வி : 1984 முதல் ஒரு சிறு குழுவாக இருந்த தமுமு 1995&ல் அதை வெகுஜன அமைப்பாக மாறியதற்கு காரணம் என்ன?


குணங்குடி ஹனீபா : சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்போது தமிழக அரசு முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை கொடு த்து பல முஸ்லிம் சகோத ரர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டதோடு இன்னும் பல சகோதரர்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்படும் நிலையும் உருவாகி இருந்தது. அதைக் கண்டித்து ஜாக் அமைப்பின் பின்னணியில் மேலப்பாளையத்தில் தடா எதிர்ப்பு பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாமக பொருளாளராக நான் கலந்துகொண்டேன். அதைத் தொ டர்ந்து சகோதரர்கள் எஸ்.எம்.பாக்கர், ஹைதர் அலி, இன்ஜீனியர் அப்துல் சமது ஆகியோர் பலமுறை பாமக அலுவலகம் வந்து என்னை சந்தித்து சமுதாய பாதிப்புகளைத் தெரிவித்து, நமது சமூகத்தின் மீதான அடக்குமுறைகளைத் தடுக்க அமர்ந்து பேசவேண்டும் என்று விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களின் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு நான், பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், செ.ஹைதர் அலி, இமாம் பீ.ஜே, சகோதரர்கள் என்.எஸ்.அப்துல் ஜலீல், இன்ஜீ னியர் அப்துல் சமது, நிஸார் அஹமது, ஏ.எஸ்.அலாவுத்தீன், சிம் ஜாகீர் உசேன் ஆகியோர் அமர்ந்து அடக்கு முறையைத் தடுக்க சமூக அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அப் போது நான், புதிய அமைப்பு வேண்டாம், இடஒதுக்கீட்டிற்காக நான் தொடங்கிய தமுமுக அமை ப்பை நீங்கள் விரும்பினால் அந்த அமைப்பின் மூலம் அடக்கு முறைகளைத் தடுப்போம் என்று தெரிவித்தேன். இதனை அனைவரும் ஏற்று அன்று முதல் தமுமுக விரிவுபடுத்தப்பட்டது.

கேள்வி : ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் நீங்கள் கைது செய்யப் பட்ட போது அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

குணங்குடி ஹனீபா : 15.2.98 அன்று என் மகள் திருமணத்தில் என்னைக் கைது செய்து பொய் வழக்கு புனையப்பட்டு மதுரை சிறையில் இருந்த போது மூன்று ரயில் குண்டு வெடிப்பு பிடி ஆணை சிறையில் என க்கு வழங்கப்பட்டது. பிடி ஆணை வழங்கிய போது எந்த அதிர்ச் சியும் எனக்கு ஏற் படவில்லை. காரணம் நான் நிரபராதி, நிச்ச யம் இறைவன் இந்த வழக்கில் விடுதலை கொடுப்பான் என்ற நம்பிக் கை அன்று இருந்தது. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : நீங்கள் சிறைக்குச் சென்றதும் சில மாதங்களில் திரும்பி விடலாம் என்றுதானே நினைத்தீர்கள்?

குணங்குடி ஹனீபா : மூன்று மாதம் முதல் ஆறு மாதத்தில் பிணையில் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. நான் 13 ஆண்டுகாலம் முடிந்து விடுதலைப் பெற்றிருப்பது வாழ்நாளில் மறக்க முடியாதது. இந்த நிலை எந்த ஒரு குடிமகனுக்கும் ஏற்படக்கூடாது. நான் 13 ஆண்டுகாலம் சிறையில் இருக்கக் காரணமான அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர் கள் நேர்வழி பெற தொடர்ந்து துஆ செய்கிறேன்.

கேள்வி : நீங்கள் சிறையில் இருந்த காலக்கட்டங்களில் தமுமுகவின் பிர மாண்ட வளர்ச்சியையும், அதன் போராட்டங்களையும் கேள்விப்படும் போது உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?


குணங்குடி ஹனீபா : குடும்பத் தலைவன் ஒருவனுக்கு தன் குடும்பத்தில் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகள் என குடு ம்ப உறுப்பினர்கள் பெருகிக் கொண்டே போகும்போது எவ் வளவு சந்தோஷம் அடைவா னோ அதைவிட பல மடங்கு சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக இதைக் கட்டிக்காத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி மற்றும் தலைமை நிர்வாகிகள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை அனைவருக்கும் அந்த வளர்ச்சி உருவாக துணை புரிந்த இறைவனுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : உங்கள் குடும்பத்தினர் உங்களைப் பிரிந்து இருந்த காலக்கட்டங்களில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

குணங்குடி ஹனீபா : நான் சிறைக்குச் சென்றவுடன் என் குடும்பம் வறுமையில் வாடியது. அந்த காலக் கட்டத் தில் எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்கள் தலைமையிலான ஜாக் அமைப்பு மூலம் மாதந்தோறும் சிறிய நிதியை என் குடும்பத்திற்கு இறைவன் கிடைக்கச் செய் தான். மேலும் தமுமுக வளைகுடா முன்னாள் நிர்வாகி மேலப்பாளையம் சகோ. பழ்லுல் இலாஹி அவர்கள் முயற்சி செய்து எனது இரு மகன்களையும் துபை பணிக்கு எடுத்துக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து குடும்பத் தேவைகள் நிறைவை பெற்றது. இருந்தபோதிலும் வாரந்தோறும், என்னைத் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக என் மனைவி அமிதா பீவி அவர்கள் 13 ஆண்டுகாலமாக சிறையில் நேர்கா ணலுக்கு அலைந்ததும், சிறையில் நான் இருந்தபோது என் தந்தை மரணம் அடைந்ததும் அதிகமான வேதனையை அளித்தது. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகிய பாதிப்புகள் எனக்கு ஏற்பட இதுவும் ஒரு காரணம். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் அமைப்பு களும் மாநிலம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஜமாஅத்துகளும் பள்ளி வாசல் இமாம்களும் அவரவர் சக்திக்கேற்ப எனக்காக துஆ செய் தது, குரல் கொடுத்தது ஆறுதலாக இருந்தது.

கேள்வி : 13 ஆண்டுகளாக சிறை யில் உங்கள் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது?

குணங்குடி ஹனீபா : தொடக்கத் தில் சாப்பாடு, தொழுகை, உறக்கம் அடுத்து சமூகத்திற்கு அரசு செய்ய வேண்டிய தேவைகளை சிறைத்துறை வழியாக அரசுக்கு கோரிக்கை மனுக் கள் அனுப்புவது, நீதிமன்றங்களில் சமூகத் தேவை களைக் கேட்டு முழக்கங்கள் மூலம் வெளிப்படுத்துவது எ ன தொடர்ந்தது. குறிப்பாக சகோ. இமாம் அலி அவர்கள் காவல் துறையிடமிருந்து தப்பித் தபோது மதுரையில் உள்ள முஸ்லிம் பெண்களையும் ஆண் களையும் விசாரணை என்ற பெயரில் பலநாட்கள் வைத்து காவல்துறையினர் கொடுமைப் படுத்தினார்கள். அப்போது மதுரை நீதிமன்றம் சென்ற நான் நீதிபதியிடம் இது குறித்து முறையிட்டதோடு கடுமை யான முழக்கங்களை எழுப்பி னேன். அடுத்த நாள் மது ரையில் வெளிவந்த அனைத்து செய்தித்தாள்களிலும் அந்தச் செய் தி வெளிவந்து மக்கள் மீதான அடக்குமுறை குறைந்தது. மேலும் புழல் மத்திய சிறையில் முக்கிய வழக்குகளில் உள்ளவர்களைத் தவிர்த்து பல்வேறு வழக்குகளில் உள்ள சுமார் 100 முஸ்லிம்களுக்கு ரமலானில் 30 நாட்களுக்கும் நோன்புக்குத் தேவையான உணவு தானியங்கள், புத்தா டைகள் ஆகியவற்றை தமுமுக தலைமையிடம் பெற்று மூன் றாண்டுகளாக தொடர்ந்து கொடுத்துள்ளேன். மேலும் பல் வேறு சமூகங்களைச் சேர்ந்த முதியோர்கள், உடல் ஊன முற்றோர் ஆகியோர்களுக்கு அடிப் படைத் தேவைகளை நண்பர் களிடம் இருந்து பெற்றுக் கொடுத் துள்ளேன். எதிர்கால சந்ததிகள் பலனடைகின்ற வகையில் மா, பலா, வாழை உள்ளிட்ட கனிமரங்களை சிறையில் உருவாக்கியுள்ளேன். அந்த வகையில் இறைவன் எனக்கு நல்ல கண்ணியத்தைக் கொடுத் திருந்தான்.

கேள்வி : 13 ஆண்டுகள் கழிந்த பிறகு நிரபராதி என்று நீதிபதி தீர்ப்பு சொன்னபோது எப்படி உணர்ந்தீர்கள்?

குணங்குடி ஹனீபா : நீதிபதி தீர்ப்பைச் சொன்னவுடன் என் னையும் அறியாமல் நீதிமன்றத்தில் அழுதுவிட்டேன். என் வழக்கில் என்னோடு இருந்த சகோதரர்கள் அனைவரிடமும் சலாம் சொல்லி கை கொடுத்து, உங்கள் மனது புண்படுகின்ற வகையில் நான் பேசியிருந்தால் அல்லாஹ்விற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அனைவரிடமும் சலாத்தை பரிமாறிக்கொண்டேன். மேலும் சமுதாய மக்களை சந்திக் கின்ற வாய்ப்பை இறைவன் வழங்கியிருக்கின்றான் என்ற ஆனந்தக் கண்ணீர் வந்ததே தவிர வருத்தமான மனநிலை ஏற் படவில்லை.

கேள்வி : சிறையிலிருந்து விடுதலையாகி, சக சிறைவாசிகளை விட்டு பிரியும் போது அந்த தருணம் எப்படி இருந்தது?


குணங்குடி ஹனீபா : உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வேதனையாக இருந் தது. வெளியில் நடந்து வருகின்ற பொழுது நடப்பதற்கு கால் கூச் சமாக இருந்தது.

கேள்வி : இப்போது தமுமுக உறுப்பினர் படிவத்தை புதுப்பித்து உள்ளீர்கள். சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைக்கக்கூடிய திட்டம் ஏதா வது இருக்கிறதா?

குணங்குடி ஹனீபா : தேர்தல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சமுதாய வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சகோதரர்கள் கோவை எஸ்.ஏ. பாஷா பாய், முகமது அன்சாரி, தாஜுதீன், தடா புஹாரி, ஜாகிர் உசேன், காஜா நிஜாமுன், அபுபக்கர் சத்தீக், மூசா, நாகூர் அப்துல் காதர், ஹைதர் அலி, சாகுல் ஹமீது, ரஹ்மத்துல்லாகான் உள்ளிட்ட 55 முஸ்லிம் சகோதரர்களை விடுதலை செய்திடவும் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவைகளில் மாநிலத்தில் 5 சதவீதமும் மத்தியில் 10 சத வீதமும் பெற்றிடவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கூட்டமைப்பாக செயல்பட இறுதிவரை முயற்சி செய்வேன்.

கேள்வி : சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் மரியாதை நிமித்தமாகவும் நன்றி செலுத்தும் வித மாகவும் எல்லோரையும் சந்தித்தீர் களா? அவர்களுடைய அணுகுமு றை எப்படி இருந்தது?

குணங்குடி ஹனீபா : உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவன் நோய் குணமாகி அவனை உறவினர்கள் எப்படி நலம் விசாரிப்பார்களோ அதை விடப் பலமடங்கு என் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, டி. என்.டீ.ஜே, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அய்யா பழ.நெடுமாறன், தம்பி சீமான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, என்றும் மறக்க முடியாத என் தம்பி பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் என் மீது காட்டிய அன்பு, அதைப்போன்று தமு முக சகோதரர்கள் காட்டிய உணர் வுப்பூர்வமான பாசம் என்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

பேட்டி : புழல் ஷேக் முகமது அலி

வியாழன், 27 மே, 2010

தமுமுக தலைமையகத்தில் குணங்குடி ஹனீபா

தமுமுக தலைமையகத்திற்கு இன்று மாலை (25.05.2010) சகோ. குணங்குடி ஹனீபா வருகை தந்தார். வருகை தந்து தமுமுக தலைமை நிர்வாகிகளை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தமது தமுமுக உறுப்பினர் அடையாள அட்டைய புதுப்பித்துக் கொண்டார். அப்போது தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் கோவை இ.உமர், மௌலா நாசர், பேரா. ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ். ஹாருன் ரசீது, து. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளார் சம்சுன் நாசர் உமரி ஆகியோர் உடன் இருந்தனர்.


சனி, 22 மே, 2010

சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் விடுதலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை. அல்ஹம்து லில்லாஹ். குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு. புழல் சிறையிலிருந்து விடுதலை ஆன குணங்குடி ஹனீபாவை வரவேற்க ஏராளமான சகோதரர்கள் திரண்டனர்.

புழல் சிறையில் இருந்து வெளியே வரும் குணங்குடி ஹனிபா

புழல் சிறையில் இருந்து வெளியே வரும் குணங்குடி ஹனிபா

புழலில் இருந்து தமுமுகவினர் பேரணியாக குணங்குடி ஹனிபாவை அழைத்து வரும் காட்சி

விடுதலையானவுடன் புழல் தமுமுக அலுவலகத்திற்கு சென்றார் ஹனிபா

விடுதலையான மற்ற சகோதரர்கள். உடன் வழக்கறிஞர்கள் புகழேந்தி, ஜைனுல் ஆபீதின்

புதன், 19 மே, 2010

உயர்நீதிமன்றம் நோக்கி பேரணி-கைது: குணங்குடி ஹனீபா நன்றி!

குணங்குடி ஹனீபா அவர்கள் மக்கள் உரிமைக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

“என்னை 13 வருடமாக சிறை வைத்துள்ள பொய் வழக்கிற்கு விரைந்து தீர்ப்பு வழங்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சென்னையில் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து வரும் 21.5.2010 வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று பூந்தமல்லி பொடா நீதிபதி அறிவித்துள்ளார்கள். அதற்காக இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். வழக்கு தீர்ப்பு வழங்கிட பேரணி நடத்திய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக்கும், தலைமை நிர்வாகிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சகோதரர்களுக்கும் பேரணியில் கலந்து கொண்ட சமூக மக்களுக்கும் பேரணி வெற்றி பெற அதற்காக இரவு பகல் உழைத்த சகோதரர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மேலும் கரூர் அருகே 5.5.2010 அன்று விபத்தில் மரணம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியின் ஆறு சகோதரர்களின் மறுமை வெற்றிக்காக தொடர்ந்து துஆ செய்கின்றேன். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம், இறைவன் நாடவில்லை என்றால் மறுமையில் சந்திப்போம்“. இவ்வாறு தனது கடிதத்தில் குணங்குடி ஹனீபா தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே உடல் நலம் இன்றி இறந்து போன குணங்குடி ஹனீபா அவர்களின் தந்தையின் நல்லடக்கம் கடந்த மே 14 அன்று முகப்பேறு கபருஸ்தானில் நடைபெற்றது. த.மு.மு.க மற்றும் ம.ம.க-வைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் அதில் கலந்து கொண்டனர். எப்படியாவது தன் தந்தையின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்று பரோலில் வெளிவர குணங்குடி ஹனீபா முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் “அதிகார சக்திகள்” இவர் சங்கராச்சாரியாரின் சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை என்பதாலோ என்னவோ இவருக்கு மனிதாபிமான வாய்ப்பை கூட வழங்கவில்லை. இந்த வேதனையில் துடித்த குணங்குடி ஹனீபாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

குணங்குடி ஹனீபாவுக்கு பிணை மறுப்பு! நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறுகின்றன?

வழக்கறிஞர் புகழேந்தி, தமிழக மக்கள் உரிமை கழகத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர், சிறைக்கைதிகள் உரிமைப் பேரவையின் தலைவர். ரயில் குண்டு வெடிப்பு மற்றும் பல முஸ்லிம் சிறைவாசி களின் வழக்குகளை நடத்தி வருபவர். குணங்குடி ஹனீபாவின் வழக்கையும் இவர்தான் நடத்தி வருகிறார். அவர் மக்கள் உரிமைக்காக துணை ஆசிரியர் காஞ்சி ஜைனுல் ஆபிதீனுக்கு அளித்த நேர்காணல்.

கேள்வி: குணங்குடி ஹனீபாவின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் என்ன?

புகழேந்தி: குணங்குடி ஹனீபா, ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்தபோது கடந்த 15.2.1998 அன்று சிவகங்கை மாவட்டம் அனுமந்தகுடியில் தனது மகளின் திருமண நிகழ்ச்சியின் போது கைது செய்யப்பட்டார். ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய் திருந்ததால் தடை செய்யப்பட்ட ஜிஹாத் கமிட்டியின் தலைவராக செயல்பட்ட ஹனீபா, தேவகோட்டை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் 1997, டிசம்பர் 6 அன்று மூன்று இடங்களில் ரயில்களில் குண்டுகள் வெடித்தன. இதற்கு காரணம், இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற அமைப்புதான் எனக்கூறி காவல்துறை அந்த சம்ப வத்தில் ஈடுபட்டவர்களை தேடிக் கொண்டிருந்தது.

அப்போது சிறையில் இருந்த ஜிஹாத் கமிட்டியின் தலைவராக இருந்த குணங்குடி ஹனீபாவையும், பொதுச் செயலாளராக இருந்த அப்துல் ரஹீமையும் இந்த ரயில் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கேள்வி: ரயில் குண்டு வெடிப்பிற்கும் ஹனீபாவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையா?

புகழேந்தி: இல்லை. ஹனீபாவைப் பொறுத்தவரை வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது முஸ்லிம் அமைப்புகளிலேயே பெரிதாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமுமுகவை நிறுவியவரும் அவர்தான். சிறந்த மனிதநேயவாதி.

ஹனீபாவின் மீதும் ரஹீமின் மீதும் உள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், சென்னையில் ஜிஹாத் கமிட்டி அலுவலகத்தில் அவர்கள், ரயில் குண்டு வைப்பது பற்றி பேசிக் கொண் டிருந்ததாகவும், அப்போது அக் கட்ட டத்தின் உரிமையாளரும், அவரது நண்பரும் அலுவலகத்திற்கு வாடகை வாங்க வரும்போது அதைக் கேட்டு விட்டு போலீசில் சொன்னதாகவும் காவல்துறை ஒரு கதையைப்புனைந்து வழக்குப் பதிவு செய்தது. ஆனால் இந்த இரண்டு சாட்சிகளும், அவ்வாறு நடக் கவே இல்லை என நீதிமன்றத்தில் கூறி விட்டனர். இவர்களுக்கு எதிராக வேறு சாட்சிகளே இல்லை என்றாகிவிட்ட சூழ்நிலையில், விசாரணை நீதிமன்றமே இவர்களை விடுவித்திருக்க வேண்டும்.

ஆனால் பலமுறை, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறட்டும்; பிணையிலாவது விடுதலை செய்யுங்கள் என்று கேட்டபோது, பிணையில் விடுவிக்க மறுத்துவிட்டார்கள். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம்.
கேள்வி: உயர்நீதிமன்றம் ஏன் மனுவைத் தள்ளுபடி செய்தது?

புகழேந்தி: ஏற்கனவே ஒருசில வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனுச் செய்தோம். ஆனால், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இப்போது விடுவிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது மனுச் செய்தால் வழக்கு முடி யப்போகிறது; இப்போது எதற்கு ஜாமீன் என்கின்றனர். குற்றச்செயலுக்கான தண்டனை காலத்தைவிட அதிக அளவில் விசாரணை சிறைவாசியாகவே சிறையில் வைப்பது கூடாது. உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை சுட்டிக் காட்டியும் கூட உயர்நீதிமன்றம் பிணை மறுத்திருப்பது வேதனைக்குரியது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிய சுப்பிரமணி என்பவர் காஞ்சி சங்கராச்சாரியரின் தூண்டுதல்தான் இக்கொலை நடந்தது என்று சாட்சி சொன்ன பின்னும் நீதிமன்றம் சங்கராச்சாரியை பிணையில் விட்டது.

கொலைச் சதியில் சங்கராச்சாரியாரோடு ஈடுபட்ட சுப்ரமணியே சதியை ஒத்துக் கொண்டு சாட்சி சொன்ன சூழ்நிலையிலும் சங்கராச்சாரியை விடுவித்த நீதிமன்றம், இந்த வழக்கில், 2007லிலேயே சதியைக் கேட்டதாக சொல்லப்பட்ட இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக (ஐர்ள்ற்ண்ப்ங்) மாறிய பின்னும் சாட்சியமே இல்லாமல் ஹனிபாவை சிறையில் வைத்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும்.

இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான முபாரக் அலிகான் என்பவர் மீது எவ்வித சாட்சிகளும் இல்லை. குற்றச் சாட்டும் இல்லை. கனி என்பவருக்கு பதிலாக தவறுதலாக இவ்வழக்கில் சேர்க் கப்பட்ட இவர் கடந்த 9 வருடங்களாக விசாரணைக் கைதியாக சிறையில் வாடி வருகிறார். இவரது மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் மதச்சார்புடையதாக மாறிவருகின்றன என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

கேள்வி: இதுபோன்று வேறு ஏதாவது வழக்குகளில் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா?

புகழேந்தி: ஏராளமான வழக்குகளை என்னால் கூறமுடியும். தமிழக காவல்துறை, முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதை எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் பாரபட்சமில்லாமல் செய்து வருகிறது.

கடந்த 27.11.97 அன்று மாலை 5 மணி யளவில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது குணங்குடி ஹனீபா, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே அவர்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என கத்தி கொடுத்ததாகக் கூறி தினமலர் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் ஹனீபா மீது ஓர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக் கொடுத்தாலே அதிகபட்சம் மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். ஆனால் இந்த வழக்கிற்காக ஹனீபாவை 12 வருட காலமாக நீதிமன்றத்துக்கு இழுத்தடித்தன காவல்துறையும் நீதிமன்றமும்.

இதைப்போல 19.5.95லில் தன்னை மத்திய சிறையில் தாக்கியதாக ஜோன்ஸ் என்ற காவலர் கொடுத்த புகாரின் பேரில் புகாரி, முஹம்மது அலி, மூஸா, முஹம்மது மூஸா, அஹமது நெய்னா, அபுபக்கர் சித்தீக், அப்துல் கலாம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம். ஆனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக காவல்துறை இந்த வழக்கில் காவல் நீட்டிப்பு (தங்ம்ஹய்க்) செய்து வருகிறது. நீதிமன்றமும் இதற்கு துணை புரிந்து வருகிறது. இது மட்டுமல்ல, வெளியே இருக்கும் நபர்கள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறை உள்ளே சென்ற பின்னும் பொய் வழக்குகளை போடுகிறது. உதாரணமாக அப்துல்ரஹீம் 11 வருடமாக சிறையில் கைதியாக இருக்கிறார்.
அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் அவர் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல முரளி என்ற ஆய்வாளர் கோவையில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர். இவரை கொலை செய்ய முயன்றதாக அமானி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் அமானி வேறொரு வழக்கில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று உதார ணங்களைக் கூறலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நான் மேலே சொன்ன வழக்குகளை பார்க்கும் போது நீதிமன்றங்கள் முஸ்லிம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டன. இதே போன்று எண்ணற்ற சிறைக் கைதிகளின் உரிமை கள் மறுக்கப்படுகின்றன.

கேள்வி: அநீதி இழைக்கப்பட்ட வர்கள் இழப்பீடு பெறமுடியுமா?

புகழேந்தி: எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் இளமைப் பருவத்தில் சிறை சென்ற நபர் தனது குடும்பத்தைப் பிரிந்து, நோய்வாய்ப்பட்டு, வயது முதிர்ந்து, குற்றவாளி இல்லை என்று வெளியே வரும்போது இந்த நீதிமன்றங்களால் கைதிகளின் இளமையையோ, சிதைந்து போன அவர்களது குடும்பத்தையோ மீட்டுத்தர முடியுமா?

அப்துல் நாசர் மதானி விஷயத்தில் என்ன ஆயிற்று? பலமுறை உயர்நீதிமன் றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பிணை கேட்டார். தனது செயழந்த காலுக்கு மருத்துவ உதவி செய்வதற்காகவாவது பிணை கொடுக்கும்படி பலமுறை நீதி மன்றத்தை நாடினார். ஆனால் எந்த நீதிமன்றமும் அவருக்கு பிணை கூட அளிக்கவில்லை.

இறுதியாக விசாரணை நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன இழப்பீடு தரப்போகின்றன ஜாமீன் மறுத்த நீதிமன்றங்கள். இதேபோன்ற ஒரு நிலைதான் குணங்குடி ஹனீபாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. 11 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக இருக்கும் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படும் போது அவர் இப்போது அடைந்திருக்கும் இழப்புகளை எவராலும் ஈடுசெய்ய இயலாது.

கேள்வி: இவ்வழக்கில் மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றம் செல்ல முடியுமா?

புகழேந்தி: போகலாம். ஆனால் அதற்கு நிறைய செலவாகும். முஸ்லிம் கைதிகள் அனைவருமே ஏழ்மையான குடும் பத்தைச்சார்ந்தவர்கள். அவர்களது குடும்பமே சிதைந்து போயிருப்பதால் இந்த வழக்கை நடத்துவதற்கே சக்தியற்றவர்களாய் உள்ளனர். கணவரை இழந்த மனைவிகள், பாசத்துக்கு ஏங்கும் பிள்ளை கள், வயதான பெற்றோர்கள் லி இதுதான் அவர்களது குடும்ப நிலை. இந்த நிலையில் அவர்கள் விசாரணை நீதிமன் றங்களில் வழக்குகளை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: குணங்குடி ஹனீபா எப்போது வெளியில் வரமுடியும்?

புகழேந்தி: இந்த வழக்கு எப்போது முடிகிறதோ அப்போதுதான். தாமதிக் கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டார். குணங்குடி ஹனீபா விஷயத்தில் அது தான் நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் ரயில் குண்டு வெடிப்பு வழக்கு முடிந்துவிடும் என அரசுத் தரப்பு சொல்லுகிறது. இதைத் தான் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: இதுபோன்ற அநீதிகளைத் தடுக்க என்னதான் வழி?

புகழேந்தி: பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதில் இருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்காக பல முஸ்லிம் இளைஞர்கள் முன்வந்தார்கள். இதன் விளைவாக அவர்களில் பலர் இன்று ஆயுள் கைதிகளாக, விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடிவருகின்ற னர். அவர்களை விடுவிக்க முஸ்லிம் சமுதாய அமைப்புகள் போராட முன்வரவேண்டும். அண்ணா பிறந்த நாளையொட்டி வருடாவருடம் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்ட போது 10 வருடம் சிறைத் தண்டனை அனு பவித்த பாஷா போன்ற பல முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த அநீதிக்கெதிராக எங்கள் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். ஏராளமான த.மு.மு.க.வினர் கலந்து கொண்டனர். ஆனால் இது போதாது. முஸ்லிம் சமுதாய அமைப்புகள் வீரியமாகப் போராட முன் வராதது வருத்தமளிக்கிறது.

இவர்களது விடுதலைக்காக அரசை பணியவைக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். குறைந்தபட்சம் அவர்களது வழக்குக்கான பொருளாதார உதவிகள், குடும்பத்திற்கான உதவிகளையாவது செய்யலாம். சிறைக்கு நேரடியாகச் சென்று அவர்களது குறைகளை அறியலாம்.

மேலும் முஸ்லிம் இளைஞர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றவும் முன்வர வேண்டும். இதன்மூலம் சமுதாயத்திற்கு எதிரான பொய் வழக்குகள், மனித உரிமை மீறல்களைத் தடுக்க முடியும்.