வியாழன், 31 டிசம்பர், 2009

கோத்ரா:முஸ்லிம் பெண்களை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கிய போலீஸ்

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்திலிலுள்ள கோத்ராவில் முஸ்லிம் பெண்களை காவல்துறை கொடூர சித்திரவதைக்குள்ளாக்கியதாக சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோத்ரா முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் மூத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை இவ்வமைப்பின் செயலாளர் தீஸ்டா செடல்வாட் நேற்று பத்திரிகையாளர்களுக்கு முன்னால் ஆஜர்படுத்தினார். சச்சரவில் ஈடுபட்டார்கள், காவல்துறையினர் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி கைதுச்செய்த பெண்களை வீட்டில் வைத்தும் காவல்நிலையத்தில் வைத்தும் சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கற்பழித்துவிடுவதாக பயமுறுத்தியுள்ளனர். பின்னர் இவர்களை ஜாமீனில் வெளியே விட்டுள்ளனர்.
டிசம்பர் 9 ஆம் தேதி இரவில் பசு திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட செய்யத் ஹுசைன் பதாமினை தேடி கோத்ரா பி டிவிசன் காவல்நிலைய போலீசார் கெனி ப்ளாட்டில் வந்துள்ளனர் . 14மாதங்களாக தலைமறைவாகவிருந்த பதாமையும் மற்றும் சிலரையும் கெனி ப்ளாட்டிலிருந்து கைதுச்செய்தாலும் பின்னர் அவர்கள் போலீசின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். அதே நாளில் இரவு 1.05 மணியளவில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள ஹாதிலா ப்ளாட்டில் பதாமும் அவருடைய கூட்டாளிகளும் ஒளிந்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு தேடிச்சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லாததால் மூன்று வீடுகளிலிருந்து பணத்தையும், தங்க நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர். மேலும் அவ்வீடுகளிலிருந்து பெண்களை மட்டும் பிடித்த போலீஸ் அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கிறார் தீஸ்டா செடல்வாட்.
தாயின் மடியிலிருந்த 19 நாளே ஆன குழந்தையைக்கூட கீழே தூக்கியெறிய அவர்கள் தயங்கவில்லை என அவர் கூறுகிறார். பின்னர் சச்சரவு, போலீஸ் மீது கல்லெறிந்தார்கள் என்று குற்றஞ்சாட்டி 8 பெண்களை கைதுச்செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் கோத்ரா சப்-ஜெயிலுக்கு கொண்டுச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போலீஸ் வேனில் வைத்தும் அவர்களை உடல் ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர். அடுத்த நாள் நீதிமன்றத்தில் இந்தப்பெண்களை ஆஜராக்கியபொழுது கோத்ரா ஜுடிசியல் நீதிமன்ற நீதிபதி எம்.மலேவாலா அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்கவும், இச்சம்பவத்தைக்குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மாலைவேளை வரை அப்பெண்களை மருத்துவமனையில் அனுமதிக்காததுடன் அவர்களுக்கு சிகிட்சை அளிக்க ஆண் டாக்டர்கள்தான் வரவேண்டும் என்று நிர்பந்தித்துள்ளனர் என தீஸ்டா செடல்வாட் குற்றஞ்சாட்டுகிறார். இதனால் சிகிட்சை பெற தயங்கிய பெண்களுக்கு எவ்வித தொந்தரவும் சித்திரவதையும் செய்யப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையை தயார் செய்ய எளிதானது. இச்சம்பவத்தை குறித்து நேரில் சென்று விசாரிக்க தேசிய பெண்கள் கமிசன் கோத்ரா செல்ல அவர்கள் கோரினர். ஒரு சப்-இன்ஸ்பெக்டர் 3 கான்ஸ்டபிள்களின் பெயர்களை அப்பெண்கள் தங்களது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளையில், இச்சம்பவத்தை காவல்துறை மறுத்துள்ளது. குற்றவாளிகளை கைதுச்செய்வதை தடுக்க பெண்கள் முயன்றதாக குற்றஞ்சாட்டுகிறார் பஞ்சிமஹல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜி.எம்.முதாலியா. கோத்ரா முஸ்லிம் சமூக தலைவர் முஹம்மது ஹனீஃப் கூறுகையில் கோத்ரா நகரில் வசிக்கும் சிறுபான்மை மக்கள் காவல்துறையின் கொடுங்கோன்மைக்கு இலக்காகிறார்கள். ஆண்கள் அவரகளது அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை சம்பாதிக்க இயலாத நிலை உள்ளது. நகரின் வெளிப்பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் போலீஸின் தொந்தரவிற்கு பயந்துபோய் உள்ளனர். இது சம்பந்தமாக பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: