புதன், 22 ஜூலை, 2009

யூத குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு அமெரிக்காவிலிருந்து குவியும் நிதி உதவி

வாஷிங்டன்: மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலமிலும் யூத குடியிருப்புகளை நிர்மாணிப்பதை நிறுத்துவதற்கு ஒரு பக்கம் அமெரிக்கா வலியுறுத்திக் கொண்டிருக்கவே இன்னொரு பக்கம் அமெரிக்காவிலிருந்து லட்சக்கணக்கான டாலர்கள் நிதி உதவிகள் குடியேற்றங்களை கட்டுவதற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுவதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் போர்வையில்தான் இந்த நிதி உதவிகள் அனுப்பப்படுகின்றன. அமெரிக்காவைச்சார்ந்த‌ டாக்டர் இர்விங் மோட் கோவிட்ஸ் என்ற யூதர்தான் இதன் நிறுவனர். "பிங்கோ" என்றழைக்கப்படும் சூதாட்டத்தின் மூலம் அதிகமான நிதி சேகரிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர்களானாலும் சரி தோற்பவர்களானாலும் சரி போதுமான நிதி உதவியை அளிப்பதாக மோட் கோவிட்ஸ் கூறுகிறார்.
யூத குடியிருப்புகளின் விரிவாக்கத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாக இந்த அமைப்பு நித உதவிகளை வழங்கிக்கொண்டிருப்பதாக தி கார்டியன் பத்திரிகை கூறுகிறது. அதே வேளையில் மோட் கோவிட்ஸின் இந்த செயலுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஃபலஸ்தீன் எதிர்ப்பு அறிக்கைகளுக்கு முக்கியக்காரணகர்த்தாவாக விளங்குபவர்தான் மோட்கோவிட்ஸ். இஸ்ரேல் ஃபலஸ்தீன் சமாதான பேச்சுவார்த்தைகளை அடிபணிதல் என்று வர்ணிப்பவர் மோட்கோவிட்ஸ்.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: