செவ்வாய், 7 ஜூலை, 2009

மோடி தொடர்பான வழக்கு-பெண் நீதிபதி விலகல்

அகமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் நடந்த மதக் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி மற்றும் 62 பேரை எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுப் படை) விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி விலகி விட்டார்.

இதுதொடர்பாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கலு மலிவாத் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், முதல்வர் மோடி மற்றும் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரை கோத்ராவுக்குப் பிந்தைய கலவரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஜக்காரியா ஜாப்ரி என்பவர் தாக்கல் செய்த மனுவின்படி அவரை எஸ்.ஐ.டி. விசாரிக்கவுள்ளது.

ஜாப்ரி கூறியுள்ள புகார்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. அவதூறான புகார்கள ஆகும் எனவே இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வருவதாக இருந்தது. இந்த மனு தொடர்பாக ஏற்கனவே ஜாப்ரியும், எஸ்ஐடி தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி தேவானி கூறியுள்ளார். அவர் கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். வேறு பெஞ்ச் இதை விசாரிக்கும் என்றார்.

முன்னதாக ஜாப்ரியின் கோரிக்கைப்படி, மோடி உள்ளிட்டோரை 3 மாத காலத்திற்குள் விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாப்ரியின் கணவர் அசன் ஜாப்ரி. இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார். கோத்ராவுக்குப் பிந்தைய மதக் கலவரத்தில் இவர் உள்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

தற்போது மோடிக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்துள்ள மலிவாடும் கூட கலவர வழக்கில் தொடர்புடையவர்தான். ஆனால் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: