ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ஜின்னா நல்லவரா? கெட்டவரா?


எழுத்துதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஜஸ்வந்த்சிங் மீது பா.ஜ.க. எடுத்திருக்கும் நடவடிக்கை மீண்டும் உணர்த்துகிறது. இந்திய வரலாறு இது வரையில் சரியான முறையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை, 1935 முதல் 1948 வரையில் உள்ள காலகட்டத்தை இவர்கள் பார்த்தவிதம், எடுத்து வைத்த அரசியல் வாதங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த மூன்று முக்கிய தலைவர்கள் : தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஆகியோர்.

அரசியல் என்பது சாமானிய மக்களுக்கு அதிகாரம் தருவதாக இருக்க வேண்டும். மேலாதிக்கம் என்பதை எதிர்க்க உதவும் ஒரு கருவிதான் அரசியல். மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் இவர்கள். ஆனால் இன்று இந்த மூன்று முக்கிய தலைவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் சுருங்கிய பார்வையில் அடைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வெறும் தமிழகத் தலைவராக மட்டும் அகில இந்திய அளவில் பார்க்கப் படுகிறார். அம்பேத்கரை வெறும் ஒரு தலித் தலைவராக சுருக்கும் முயற்சியில் மேலாதிக்கவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜின்னாவின் நிலை இன்னும் மோசம். இவரை ஒரு பிரிவினைவாதி, பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை துண்டாக்கியவர், ஒரு முஸ்லிம் மதவாதி என்று இந்திய இந்து வலதுசாரிகள் சித்தரிக்க, அந்த பிம்பம்தான் பொதுவான தளத்தில் மக்களின் கற்பனையை கவர்ந்துள்ளது.

இந்த நிலையை குறுகிய அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த முடியும். ஆனால், பரந்த அரசியல் புரிதலுக்கு இதுபோன்ற வறட்டு வாதங்கள் உதவாது. ஜின்னாவைப் பற்றி நம்முடைய பார்வையை மீள் ஆய்வுக்கு உட்படுத்த உதவியிருக்கும் ஜஸ்வந்த்சிங்குக்கும், அவரை கட்சியை விட்டு நீக்கிய பா.ஜ.க. தலைமைக்கும் நாம் ஒருவிதத்தில் கடமைப்பட்டுள்ளோம்.

ஜின்னாவின் அரசியலைப் புரிந்துகொள்ளுவதற்கு முன் அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். 25-12-1876 அன்று கராச்சி நகரில் மித்திபாய் மற்றும் ஜின்னாபாய் பூஞ்சா என்கிற செல்வந்தருக்கும் முதல் மகனாய் ஜின்னா பிறந்தார். அவரது தாய்மொழி குஜராத்தி. கராச்சியிலும் மும்பையிலும் பள்ளிக் கல்வி கற்ற ஜின்னா, சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 19-வது வயதில் மிக குறைந்த வயதுடைய வழக்கறிஞராக இங்கிலாந்து நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டார்.

அரசியல் ரீதியாக இங்கிலாந்தில் அப்போது பிரபலமாக இருந்த வில்லியம் களாட்ஸ்டோனின் "லிப்ரல் பார்வையால்' கவரப்பட்டு, முற்போக்கு கொள்கைகளும் ஜனநாயக மரபுகள் மீதும் அதிக நம்பிக்கை வைத்தார். 1900-ல் இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தாதாபாய் நௌரோஜியின் வெற்றிக்கு பாடுபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜின்னாதான்.

நவீனத்துவம் என்பது மதவாதிகளின் கைகளில் சிக்கி, வளர்ச்சிக்கு எதிராகப் போய்விடக்கூடாது என் பதில் மிகவும் அக்கறை கொண்ட ஜின்னா நவீனத் துவத்தின் ஒரு அடையாளமாக எப்பொழுதும் கோட் மற்றும் சூட்தான் அணிந்து காட்சியளித்தார். முஸ்லிம் மதவாதிகள் சிலர் அந்த காலத்து உடை விஷயத்தில் குறிப்பாக பெண்கள் உடை விஷயத்தில் கடைபிடித்த பிற்போக்கான நிலையை தன்னுடைய எழுத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரிகளின் ஆடை அணியும் முறையிலும் கட்டுபெட்டித் தனத்தை எதிர்த்து செயல்பட்டவர்தான் ஜின்னா.

1902-ல் குடும்ப வியாபாரத்தை கவனிக்க இந்தியா திரும்பிய ஜின்னா, மும்பையில் ஒரே ஒரு ஆண்டுதான் வியாபாரத்தில் ஈடுபட்டார். 1903 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட ஆரம்பித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவின் பிரபல வக்கீல்களில் அவரும் ஒருவர் என்கிற புகழைப் பெற்றார்.

1905-ல் பாலகங்காதர திலகர் மீது தேசகுற்றம் சுமத்தி ஆங்கில அரசு கைது செய்தபோது, திலகரின் சார்பாக வாதிட்டவர் ஜின்னாதான். அவருடைய வாதங்கள்: "சுதந்திரம் கேட்பது பிறப்புரிமை, தேச குற்றமல்ல. சுயஆட்சி என்பதுதான் முறையே அன்றி அந்நிய ஆட்சி அல்ல'' -இந்த வாதங்களே பின்னாளில் இந்திய சுதந்திர வேட்கையை வழிநடத்திச் செல்ல உதவிய வாதங்கள்.

கோபாலகிருஷ்ண கோகலே, பிரோஷா மேத்தா மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரின் அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்ட IMPERIAL LEGISLATIVE COUNCIL உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்னா, குழந்தை திருமண தடை சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். முஸ்லிம் மக்களுக்கு வஃக்ப் வாரியத்தை உரு வாக்கினார். பின்னர் SANDHURST COMMITEE-யில் உறுப்பினராகச் சேர்ந்து இந்தியாவின் முதல் ராணுவப் பயிற்சிக் கல்லூரியான INDIAN MILITARY ACADEMYஐ டேராடூன் நகரில் உருவாக்கியதும் ஜின்னாதான்.

1906-ல் அகில இந்திய முஸ்லிம் லீக் உருவானபோது அதில் சேர முடியாது என்று அறிவித்த ஜின்னா, அரவணைத்துச் செல்லும் அரசியலுக்கு மத அடிப்படையில் கட்சி அமைத்தது எதிரான செயல் என்று நம்பினார். ஆனால் 1905-ல் வங்க மாகாணத்தை பிரித்தவுடன் ஏற்பட்ட இந்து மேல்ஜாதி அமைப்பினரின் வகுப்புவாதம் அவரை மிகவும் வாட்டியது. விளைவு... 1913-ல் முஸ்லிம் லீக்கில் ஜின்னாவே சேர்ந்தார். 1916-ல் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியும் லீக்கும் அந்த ஆண்டே ஒரு ஒப்பந்தத்தை போட்டு, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை எடுக்க உதவி செய்தார். 1918-ல் ரத்தன்பாய் பெட்டிட் என்கிற பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்ட போது, முஸ்லிம் தலைவர்களும், பார்சி தலைவர்களும் ஒன்றாக இந்த கலப்புத் திருமணத்தை எதிர்த்தனர். 1919-ல் இந்த தம்பதிகளுக்கு பிறந்த ஒரே ஒரு குழந்தை டினா ஜின்னா. இந்த டினா ஜின்னாவின் மூத்த மகன்தான் பாம்பே டையிங் கம்பெனியின் இன்றைய தலைவர் நுஸ்லி வாடியா.

1924 முதல் முஸ்லிம் லீக்கை முழுவதும் சீராக்கி, இந்து-முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க ஏழு ஆண்டுகள் பாடுபட்டார். "இந்திய விடுதலைக்கு இந்திய-முஸ்லிம் ஒற்றுமையே அடிப்படை காரணமாக இருக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப கூறுகின்றேன். இதற்கு எதிரான நிலையை யாரும் எடுத்தால் அவர்களை முஸ்லிம் மக்களின் விரோதி என்று அழைக்கத் தயங்கமாட்டேன்'' என்று லாகூர் நகரில் பிரகடனப்படுத்தியவர்தான் ஜின்னா. 28-3-1929-ல் தன்னுடைய புகழ்பெற்ற 14 அம்ச அறிக்கையை ஜின்னா வெளியிட்டார். இந்த அறிக்கை இந்து-முஸ்லிம் உறவுகளை மேம்படுத்தி பரந்த அதிகார பரவலாக்கலை உருவாக்கும் என்று ஜின்னா நம்பினார். ஆனால், இந்த நம்பிக்கை எடுபடாமல் போய்விட்டது என்பதே உண்மை.

எப்படி காங்கிரசுடன் எந்த உறவும் வைக்க முடியாது என்ற முடிவுக்கு 1920-களில் பெரியார் வந்தாரோ, அதேபோல் ஒரு முடிவுக்கு ஜின்னா 1929 முதல் தள்ளப்பட்டார் என்பதே வரலாற்று உண்மை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரம் -குறிப்பாக ஸ்டாலின் தலைமையில் சோவியத் நாடுகளில் ஏற்பட்ட அதிகார கட்டமைப்பு மத்தியில் இருக்கும் முறையை- நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது உண்மை.

1927 சைமன் கமிஷன் முன்பு முஸ்லிம் மக்களுக்கு தனி வாக்கு தொகுதிகள் வேண்டும் என்று ஜின்னா கருத்து தெரிவித்தபோது, அதை நேரு நிராகரித்தார்.

தொடர்ந்து வட்டமேஜை மாநாடுகள் தோல்வியடைய, 1936-ல் இந்தியா திரும்பிய ஜின்னா, தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை பெற முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் லீக் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ்தான் பெருவாரியான இடங்களைப் பெற்றது. இந்த நிலையில் லீக்கும், காங்கிரசும் இணைந்து செயல்படுவது சீக்கிரம் சுதந்திரத்தை அடைய வழிவகுக்கும் என்று கருதிய ஜின்னா, இதற்காக அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜேந்திரபிரசாத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த முயற்சிக்கு எதிராக செயல்பட்ட பல காங்கிரஸ் தலைவர்கள், 1938-ல் காங்கிரஸ் மற்றும் லீக்குக்கு இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்ததாக அறிவித்தனர். இதுவே பாகிஸ்தான் என்கிற கோஷம் உருவாக காரணமாக அமைந்த விஷயம். 1940-க்கு முன்பு பாகிஸ்தான் என்று ஒரு சொல்லே அகராதியில் கிடையாது. 1940-ல் லாகூர் நகரில் நடைபெற்ற லீக் மாநாட்டில்தான் இந்த சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை என்கிற அடிப்படையில் உருவான இந்த கருத்தாக்கம் பல்வேறு சிக்கல்களை உள்ளடக்கியது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. TWO NATION THEORY என்று பல்வேறு பரிமாணங்கள் உடைய இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று இரு தேசிய அடையாளமாக சுருக்கியதுதான் ஜின்னாவின் மிகப்பெரிய பலவீனம். மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தான், 1971-ல் மொழியின் அடிப்படையில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் என்ற பிரிவு TWO NATION THEORY என்பதின் தவறான புரிதலின் வெளிப்பாடு ஆகும்.

மதத்தின் அடிப்படையில் தேசியத்தை கட்டமைக்காமல் சிறுபான்மையினர் என்கிற முறையில் ஜின்னா தன்னுடைய அரசியலை நடத்தியிருந்தால் இன்றைய உலக அரசியல் வேறு ஒரு அழகிய பரிமாணத்தைப் பெற்றிருக்க முடியும். இதை அவர் செயல்படுத்த முடியாமல் போனதற்கு அவரே ஒரு காரணம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் ""மத்தியில் அதிகார குவிப்பு'' என்கிற நிலைதான் ஊற்றுக்கண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதைத்தான் ஜஸ்வந்த்சிங்கின் நூல் எடுத்துரைக்கிறது.

அதற்காக அவர் கொடுத் திருக்கும் விலை தான் உருவாக்கிய கட்சியிலிருந்து நீக்கப்படும் நிலை. இது ஒன்றும் பெரிதல்ல என்றே நாளைய வரலாறு தீர்மானிக்கும்.

-நன்றி நக்கீரன்

கருத்துகள் இல்லை: