புதன், 26 ஆகஸ்ட், 2009

ஜின்னா மதச்சார்பற்றவர், ஒருங்கிணைந்த இந்தியாவையே விரும்பினார் ஜின்னா- சுதர்சன்

Sudarshan
இந்தூர்: பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தாலும் முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவராகவே இருந்தார் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்சன் கூறியுள்ளார்.

ஜின்னாவை புகழ்ந்து எழுதியதற்காக பாஜகவிலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் ஜின்னாவை ஆதரித்துப் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க முகம்மத் அலி ஜின்னா பாடுபட்டார்.

ஜின்னாவுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. வரலாற்றை சரியாக படித்தால் அவர் திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாக பாடுபட்டது நன்றாகத் தெரியும்.

மகாத்மா காந்தி வலியுறுத்தியிருந்தால் பாகிஸ்தான் பிரிவினையைக்கூட ஜின்னா கைவிட்டிருப்பார். அப்படிப்பட்ட மிகச் சிறந்த மதச்சார்பற்றவர் தான் ஜின்னா.

துருக்கியில் காலிப் ஆட்சியை, பிரிட்டிஷார் கலைத்ததைக் கண்டித்து அலி சகோதரர்கள் இந்தியாவில் கிலாஃபத் இயக்கத்தைத் தோற்றுவித்தனர். பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட கிலாஃபத் இயக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலம் இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்து-முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடையும் என காந்திஜி கருதினார்.

ஆனால் இதற்கு ஜின்னா எதிர்ப்புத் தெரிவித்தார். கிலாபத் இயக்கத்தில் தலையிட வேண்டாம், அரசியலில் மதத்தை கொண்டு வர வேண்டாம் என்றார். அவரது வாதத்தை காந்தி உள்பட யாரும் ஏற்கவில்லை. இது அவருக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. இதனால் அவர் காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறினார்.

காங்கிரஸை விட்டு விலகியதும் இங்கிலாந்து சென்ற அவர் 1927ம் ஆண்டுதான் மீண்டும் இந்தியா திரும்பினார்.

பிரிவினை வேண்டாம் என காந்தி திட்டவட்டமாக ஜின்னாவிடம் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் பிரிவினை வந்திருக்காது. ஆனால் காந்தி அதைச் செய்யவில்லை.

பாகிஸ்தான் குறித்து அத்வானி கருத்து தெரிவித்தபோது அதற்கு ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் அத்வானி உரிய விளக்கத்தை அளித்ததால் அதைத் நான் ஏற்றுக் கொண்டேன்.

அதே நேரத்தில் பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டது அந்தக் கட்சியின் உள் விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றார் சுதர்சன்.

சுதர்சன் அளித்த பேட்டி குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், பிரிவினைவாத வரலாறு குறித்து மட்டுமே சுதர்சன் பேசியுள்ளார் என்று கூவிட்டு நிறுத்திவிட்டார்.

கருத்துகள் இல்லை: