திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நாடு எங்கே செல்கிறது?

சென்னை: மசாஜ் கிளப்களில், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் மசாஜ் செய்வதை தடை விதிக்க முடியாது. அதேசமயம், மசாஜ் கிளப்களில் சட்டவிரோதமான காரியங்கள் நடந்தால் அந்த கிளப்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணா சாலையில், இன்ப்ளூயன்ஸ் லைப்ஸ்டைல் ஸ்டோர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இதன் நிர்வாக இயக்குநரான நரேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டலுக்கு அருகே இன்புளுயன்ஸ் ஸ்பா என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இப்படி ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்வதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே, இதுபோன்ற மசாஜ் பார்லர் நடத்துவதற்கு சட்டப்பூர்வமாக தடை இல்லை. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே, எங்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் போலீசார் தடையிட கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்குப் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு சட்டப்படி உரிமம் பெற வேண்டும். பொதுநலனை கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம்.

மனுதாரர் தனது மசாஜ் கிளப்பில் டீன்ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் எதுவும் இல்லை. சென்னை மாநகர போலீஸ் சட்டத்திலும், இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்க போலீசாருக்கு சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்பது தெளிவாகிறது.

இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.
முன்பு ஓரினச்சேர்க்கை அனுமதி!இன்று ஆபாசத்தின் வாசல் திறப்பு!நாளை? நாடு எங்கே செல்கிறது?

கருத்துகள் இல்லை: