வியாழன், 18 பிப்ரவரி, 2010

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான இடஒதுக்கீடு நமது டெல்லி பிரகடனமே தீர்வு!


ஆந்திர உயர்நீதிமன்றம் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் தனிஇட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தெலுங்கானா பிரச்சினையில் பற்றி எரிந்து வரும் ஆந்திராவுக்கு, உயர்நீதி (?) மன்றம் தன்னால் இயன்ற அளவுக்கு எண்ணை ஊற்றியுள்ளது. இந்த சமூக அநீதியால் ஆந்திர மக்கள் கொந்தளித்தெழுந்துள்ளனர்.

ஆந்திர மக்களின் அன்புத்தலைவர் மறைந்த டாக்டர் ராஜசேகர ரெட்டி, காங்கிரஸ் வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு எனத் தேர்தலில் வாக்களித்தார். முஸ்லிம்களின் பேராதரவோடு வென்றார்.முதல்வர் பதவியேற்றதும், காலங்கடத்தாமல் முஸ்லிம் அமைப்புகளைக் கெஞ்ச வைக்காமல், முஸ்லிம்கள் விரக்தியின் விளிம்புக்கே போய் போராட்ட அறிவிப்பு செய்யாமல், சொன்னதைத் செய்து காட்டினார் ஆந்திர முதல்வர் மறைந்த Y.S.R. அவர்கள்.

சமூக அநீதியாளர்கள், நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். ஆந்திர அரசு ஆணையம் அமைத்துப் பரிந்துரை பெறாமல் வழங்கிய இந்த இடஒதுக்கீடு செல்லாது என்றது நீதிமன்றம் உழ்.வ.ந.த. அசரவில்லை. நான் கொடுத்தேன் நீதிமன்றம் தடுத்துவிட்டது. நான் என்ன செய்வேன் என்று பசப்பி முஸ்லிம்களை ஏமாற்றவில்லை.உடனே, ஆந்திராவின் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திலிருந்து பரிந்துரையைப் பெற்றார். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம் களுக்குத் தனி இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கினார் Y.S.R..

கே.கொண்டால ராவ் என்ற வழக்கறிஞர் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அனில்ரமேஷ் தவே தலைமையிலான நீதிபதிகள் குழு இச்சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதன் மூலம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கும் சிக்கல் ஏற்படுத்தியுள்ள னர் இந்த நீதி மான்கள்(?) ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பு. அது சட்டங்களை இயற்றும். நீதிமன்றம் என்பது சட்டத்தை இயற்றுகிற அமைப்பல்ல. மாறாக இயற்றப்பட்ட சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துகிற அமைப்பு. சட்டமன்றத்தின் அதிகாரத்தில் நீதிமன்றம் குறுக்கிடுவது ஜனநாயகத்தைக் காயப்படுத்தும் செயலாகும்.ஆந்திர உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, மாநில முதல்வர் ரோசையா, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார். முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு சட்டத்திற்குச் சிறப்பு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுமாறு மாநிலத் தலைமை வழக்குறைஞருக்கு ஆணையிட்டுள்ளார்.

ஆந்திர உயர்நதிமன்றதின் தீர்ப்பு அனைவருக்கும் புதிய சிந்தனையை தோற்றுவிக்க வழிகோலியிருக்கிறது. அதாவது, நீதிமன்றங்களின் சமூக நீதிககு எதிரான சேட்டைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமெனில், அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்வது ஒன்றுதான் சரியான தீர்வு. த.மு.மு.க. மார்ச்லி7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் இதைத்தான் முதன்மைப்படுத்தி அதை டெல்லி பிரகடனம் என முழங்கியது. அந்த டெல்லி பிரகடனம் செயல்படுத்தப்பட வேண்டுமெனில் நாம் மாபெரும் பரப்புரை இயக்கத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

அரசியல் நிர்ணய அவையில் விவாதங்கள் நடந்த காலத்தில், Backward Class, அதாவது பிற்படுத்தப்பட்டோர் சமூக சமத்துவம் பெற, கல்வி வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு, அது ஏற்கப்பட்டது. ஈப்ஹள்ள் என்பது சிறுபான்மை முஸ்லிம்களையும் உள்ளடக்கும் (Class in cludes minorities) என்ற வாக்கியத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்டார். தமிழகப் பிரதிநிதியான கண்ணியமிகு காயிதே மில்லத்.
Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கியது தான் என்று பதிலளிக்கப்பட்டது. அதைத் தெளிவுபடுத்தி, Class என்பது சிறுபான்மையினரையும் உள்ளடக்கும் என்ற வாசகத்தை அரசியல் சாசனத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும். என காயிதே மில்லத் மீண்டும் மீண்டும் வாதாட, எதிர்காலத்தில் Class என்பதில் சிறுபான்னையினர் சேரமாட்டார்கள் என எந்த அறிவாளியும் (?) சொல்லமாட்டார் என கேலியாக பதிலளித்தாராம் வல்லபாய் பட்டேல்.

துருபிடித்த மனங்கொண்ட அந்த இரும்பு மனிதரின் கேலிதான், இன்று வார்த்தை விளையாட்டு நடத்தி, வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் வாழ்க்கையில் விளையாடும், வன்னெஞ்சர்களுக்கு வாய்ப்பாகிவிட்டது. டி.ஏ.பாய் ஃபவுண்டேஷன் வழக்கில், Class என்பதில் சிறுபான்மையினரும் சேர்க்கப்படுவது தான் அரசியல் சாசன வடிவமைப்பாளர்களின் எண்ணமாக இருந்தது.

கருத்துகள் இல்லை: