சனி, 13 பிப்ரவரி, 2010

மார்ச் 7 மதுக்கடை மறியல் ஏன்?

தமிழகத்தின் தெருக்களிலே இன்று மதுக்கடைகள் பெருகி மது ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாங்கமே மது விற்பனையை நடத்துவதால் மக்கள் கூடும் இடங்களிலே பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தலங்களின் அருகிலே கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடக்கிறது.

மதுவின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் மூலமாக தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து சமாதானப்படுத்துகிறது. தமிழக அரசு ஆனால் மக்களின் உடல் நலமும், வாழ்க்கையும் கலாச்சாரமும் சீரழிவதைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை.

முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஏன் பெண்கள் கூட இன்று மதுவுக்கு அடிமையாகும் கொடுமை கொஞ்சம், கொஞ்சமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரவகளின்படி சுமார் 40 சதவீதம் மாணவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சமூகத்தின் இளைஞர்கள் இன்று மதுவுக்கு அடிமையாகி தங்கள் எதிர்கால வாழ்வை தொலைத்து வருகின்றனர். உழைப்பாளி தனது வருமானத்தை மதுவிலே தொலைக்கிறான். இப்படி மனித வாழ்வை சீரழிக்கும் மது அரக்கனை தமிழகத்தை விட்டே ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும். என்ற சிந்தனை மக்கள் மனதிலே ஊட்டப்பட வேண்டும்.

மதுகுடித்து மதி மயங்கி கொலை, கொள்ளைகளிலே கற்பழிப்பிலே ஈடுபடும் செய்திகள் தினசரி செய்திகளாகி விட்டன.
அரசு குடிகொடுத்து மக்கள் குடியை கெடுக்கும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மது இல்லாத மதவெறி இல்லாத மாநிலமாக தமிழகம் தழைக்க வேண்டும். அதற்காகத்தான் மதுக்கடைகளின் முன் மாபெரும் மறியல் போரை மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது.

பூரண மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வரும்வரை நமது போராட்டம் ஓயாது. மதுக்கடை மறியல் போர் மாநிலம் தழுவிய எழுச்சியாகட்டும். மதுக்கடை மறியல் மக்கள் மனதிலே புதிய புரட்சியை ஊட்டப்படும். மதுக்கடைகள் தமிழகத்தை விட்டே ஓட்டம் காணட்டும்.

அணி திரள்வோம் ! ஆர்ப்பரிப்போம் !

கருத்துகள் இல்லை: