சனி, 6 பிப்ரவரி, 2010

ஆஸம்கர் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் பாரபட்சம்


லக்னோ:இந்தியாவின் பல பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களில் கல்வி பயில அனுமதி கிடைப்பதிலும் ஆஸம்கர் முஸ்லிம்கள் கடுமையான பாரபட்சத்தை சந்தித்து வருவதாக பிரபல ஹிந்திப் பத்திரிகையான டைனிக் ஹிந்துஸ்தான் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கசப்பான அனுபவங்களை சந்தித்த பல முஸ்லிம்களின் அனுபவத்தை இப்பத்திரிகை படம் பிடித்துக் காட்டுகிறது. ஆஸம்கரைச்சார்ந்த முஸ்லிம்கள் சாதாரணமாக உயர் கல்வி கற்பதற்காக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்குத் தான் செல்கின்றனர். ஆனால் பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடைபெற்ற பிறகு அவர்களை பலரும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர்.

ஆஸம்கரைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே பலருக்கு கல்வி நிலையங்களில் பயில அனுமதியே கிடைப்பதில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் கூட ஆஸம்கர் முஸ்லிம்களுக்கு வேலை வழங்குவதற்கு முன்பு பல முறை ஆலோசிக்கின்றன, என ஆஸம்கரைச் சார்ந்த மிராஜ் பேக் கூறுகிறார்.

முஸ்லிம் மற்றும் ஆஸம்கரைச் சார்ந்தவர் என்ற காரணத்தினாலேயே பாஸ்போர்ட் கிடைப்பதற்கு சிரமமுள்ளதால் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியும் தடைப்படுகிறது. பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றவர்களோ விமானநிலையங்களில் கடும் பரிசோதனைக்கு ஆளாகின்றனர். ஏதோ சிலர் செய்த குற்றத்திற்காக அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர் என உள்ளூர் உளவுத்துறை அதிகாரி டைனிக் ஹிந்துஸ்தான் பத்திரிகை நிருபரிடம் கூறியுள்ளார்.

குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி ஷஹ்பாஸ் என்பவரை ஏ.டி.எஸ்(தீவிரவாதத் தடுப்புப்படை) கைதுச்செய்த பின்னர் புதிய கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் அதிகளவிலான பாரபட்சம் ஆஸம்கர் முஸ்லிம்களை தேடி வருகின்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: