வியாழன், 21 ஜனவரி, 2010

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: குட்டிக்கரணம் போடும் மத்திய அரசு

முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு குட்டிக்கரணம் போட்டுவருகிறது.

இது தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளித்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் பட்டும் படாமலும் மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் பிற்பட்டோர்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியுள்ள கர்நாடகா-தமிழ்நாடு மாநில அரசுகளின் முன்மாதிரியை தாங்கள் பின்பற்ற விரும்புகிறோம். நீதிமன்றமும் இதனை அங்கீகரித்துள்ளது.அது செயல்படுத்தப்பட்டால் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனை நடைமுறைப்படுத்த தேவையில்லை. இதுத்தொடர்பான விஷயத்தில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருப்பதாகவும் அத்துடன் இதுத்தொடர்பான சட்டரீதியான தடை நீங்குமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக பிரச்சனைகள் தொடர்பான எடிட்டர்ஸ் கான்ஃப்ரன்சில் கலந்துக் கொண்ட சல்மான் குர்ஷித் பத்திரிகையாளர்கள் ரங்கநாத் மிஷ்ரா கமிசன் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். மத மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷனான ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென்றும் அதில் 10 சதவீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்கவேண்டுமென்றும் சிபாரிசுச்செய்திருந்தது.

இவ்விஷயத்தில்தான் முஸ்லிம்களை முற்பட்டோர் பிற்பட்டோர் என பிளவுப்படுத்தி கண்ணாமூச்சி விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு இதற்குத்துணையாக காங்கிரசின் தேர்தல் அறிக்கையை காரணம் காட்டுகிறது. சிறுபான்மையினரில் பிற்பட்டோருக்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பது பற்றி தெளிவுப்படுத்தவும் சல்மான் குர்ஷித் தயாரில்லை.

மிஷ்ரா கமிஷன் அறிக்கையை எப்பொழுது நடைமுறைப்படுத்துவீர்கள்? என்ற கேள்விக்கு தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் மிஷ்ரா கமிஷன் அறிக்கையின் சிபாரிசுகளோடு ஒத்துப்போகிறது. ஆதலால் அதனை முதலில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் சல்மான் குர்ஷித் பதிலளித்தார்.

சிறுபான்மையினரில் பிற்பட்டோருக்கு கர்நாடகா-தமிழ்நாடு மாநில அரசுகளின் முன்மாதிரியில் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. அது மிஷ்ரா கமிஷனின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கு சமம் என சல்மான் குர்ஷித் கூறுகிறார்.மிஷ்ரா கமிஷன் சிபாரிசுகள் பல அமைச்சகத்தோடும் தொடர்புள்ளதன் காரணமாக அமைச்சரவை இதுத்தொடர்பாக ஒருங்கிணைந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்றும் குர்ஷித் தெளிவுப்படுத்தினார். மேற்க்கண்ட சல்மான் குர்ஷிதின் பேட்டியில் உள்ள முரண்பாடுகளை நாம் புரிந்துக்கொண்டிருப்போம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: